வெர்னர் ஹெர்சாக் – இந்த ஜெர்மானியப் பெயர், திரைப்பட உலகின் வரைபடங்களில் ஒரு சாதாரணப் புள்ளி அல்ல; அது ஒரு பிரமாண்டமான, புதிரான நிலப்பரப்பு. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, எழுபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள், எண்ணற்ற ஆவணப்படங்கள், சில ஓபராக்கள், புத்தகங்கள் என விரியும் இவரது படைப்புலகம், சினிமா ரசிகர்களின் இதயங்களிலும் சிந்தனைகளிலும் ஆழமான, சில சமயங்களில் கலவரமூட்டும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இவர் வெறும் திரைப்பட இயக்குநர் மட்டுமல்ல; இவர் ஒரு தத்துவஞானி, ஒரு தீராத பயணி, அடங்காத கனவுகளைத் துரத்தும் ஒரு வேட்டைக்காரன், மனித இருத்தலின் விளிம்புகளில் நின்று பிரபஞ்சத்தைப் பார்க்கும் ஒரு கவிஞன். "பரவசமான உண்மை" (ecstatic truth) என்ற ஒரு மந்திரச் சொல்லைத் தன் கலைக்கான திசைமானியாகக் கொண்டு, புற உலகின் பதிவுசெய்யப்பட்ட உண்மைகளுக்கு அப்பால், கவித்துவமான, ஆழ்மனதைத் தொடும், சில சமயம் கனவு போன்ற உண்மைகளைத் தேடி இவர் தன் கேமராவை இயக்குகிறார். மனித மனதின் இருண்ட குகைகளையும், இயற்கையின் வசீகரமான அதே சமயம் அச்சமூட்டும் பிரமாண்டங்களையும், நாகரிகத்தின் மெல்லிய திரைக்குப் பின்னாலுள்ள ஆதி குணங்களையும் இவர் நமக்குத் தயக்கமின்றிக் காட்சிப்படுத்துகிறார்.
புதிய ஜெர்மன் சினிமாவின் (New German Cinema) ஒரு முக்கியத் தூணாக 1960களிலும் 70களிலும் விம் வெண்டர்ஸ், ரெய்னர் வெர்னர் ஃபாஸ்பிண்டர் போன்றோருடன் ஹெர்சாக் வெளிப்பட்டாலும், அவரது பாதை தனித்துவமானது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜெர்மனியின் குற்றவுணர்விலிருந்தும், தேக்கநிலையிலிருந்தும் ஒரு புதிய கலைமொழியை உருவாக்க முயன்ற அந்த அலையின் பகுதியாக இருந்தபோதும், ஹெர்சாக்கின் பார்வை ஜெர்மனியின் எல்லைகளைத் தாண்டி, உலகளாவிய மனித அனுபவங்களை நோக்கி நீண்டது. ஹாலிவுட்டின் பளபளப்பான செயற்கைத்தனத்தையும், ஐரோப்பிய கலைப்படங்களின் சில சமயம் அதீத அறிவுஜீவித்தனத்தையும் அவர் தவிர்த்தார். அவருக்குத் தேவைப்பட்டது, ரத்தமும் சதையுமான மனிதர்கள், அவர்களின் கட்டுக்கடங்காத ஆசைகள், அவர்களின் தோல்விகள், அவர்களின் தீராத தேடல்கள். அவரது திரைப்படங்கள் வெறும் கதைகள் அல்ல; அவை அனுபவங்கள், சில சமயம் அவை ஒரு சடங்குகள் போன்றவை, பார்வையாளனை உலுக்கி, அவனது இருப்பைப் பற்றிய கேள்விகளை எழுப்பக்கூடியவை. அதிகாரத்தின் போதை, இயற்கையுடனான மனிதனின் சிக்கலான உறவு, தனிமனிதனின் கனவுக்கும் சமூகத்தின் யதார்த்தத்திற்கும் இடையிலான மோதல், மேதைமைக்கும் பித்துக்கும் இடையிலான மெதுவாக அழிந்து கொண்டிருக்கும் கோடு – இவை அவரது படைப்புகளில் மீண்டும் மீண்டும் எதிரொலிக்கும் சிம்பொனியின் வெவ்வேறு இசைக்கோர்வைகள். ஹெர்சாக்கின் உலகம், தைரியமானவர்களுக்கானது; அது அறைகூவல்களாலானது, ஆனால் மறக்க முடியாதது.
ஹெர்சாக்கின் திரைப்படங்களைப் பார்க்கும்போது, நம் விழிகளையும் உணர்வுகளையும் முதலில் ஆக்கிரமிப்பது அவர் தேர்ந்தெடுக்கும் நிலப்பரப்புகள்தாம். அவை வெறும் பின்னணிக் காட்சிகள் அல்ல; அவை கதையின் ஆன்மா, மனித உணர்ச்சிகளின் கண்ணாடி, பிரபஞ்ச சக்திகளின் உருவகம். அமேசான் காடுகளின் அடர்ந்த பசுமைக்குள் ஒளிந்திருக்கும் பேராபத்து, சஹாரா பாலைவனத்தின் எல்லையற்ற வெறுமையில் எதிரொலிக்கும் தனிமையின் ஓலம், அண்டார்டிகாவின் உறைபனிச் சிற்பங்களுக்குள் புதைந்திருக்கும் ஆதி மௌனம் – இவை ஹெர்சாக்கின் கேமரா வழியே உயிர்ப்பெற்று, மனிதனின் அக உலகப் போராட்டங்களோடு மல்யுத்தம் செய்கின்றன.
‘அகிர்ரே, கடவுளின் கோபம்’ (Aguirre, the Wrath of God, 1972) திரைப்படத்தில், அமேசான் காடும், அதன் சீறிப்பாயும் நதியும், எல் டொராடோ எனும் பொன் நகரத்தைத் தேடிச் செல்லும் ஸ்பானிய வீரர்களின் கனவுகளை மட்டுமல்ல, அவர்களின் சிதைந்துபோகும் மனங்களையும் விழுங்குகின்றன. படத்தின் தொடக்கக் காட்சியே இதற்கு ஒரு சான்று: பனிமூடிய ஆண்டிஸ் மலைகளிலிருந்து, மேகங்களுக்குள் மறைந்து, பாம்பைப் போல் நெளிந்து இறங்கும் வீரர்களின் அணிவகுப்பு. இயற்கையின் பிரமாண்டத்தின் முன், மனிதனின் லட்சியம் எவ்வளவு அற்பமானது என்பதை அந்தக் காட்சி ஒரு கவிதைபோல் உணர்த்தும். அடர்ந்த காடு ஒரு சிறைக்கூடமாகவும், நதி ஒரு பேய்த்தெய்வமாகவும் உருமாறுகிறது. கிளவுஸ் கின்ஸ்கி ஏற்ற அகிர்ரே பாத்திரத்தின் அதிகார வெறியும், பித்தும், அந்த இயற்கையின் அடக்குமுறைக்கு எதிர்வினையாற்றுவது போலவே தோன்றும். இறுதிக் காட்சியில், குரங்குகளால் சூழப்பட்ட மிதவையில், தனித்து விடப்பட்ட அகிர்ரே, இயற்கையின் முன் தோற்றுப்போன மனித ஆணவத்தின் சின்னமாக நிற்கிறான். இங்கு நிலப்பரப்பு, அகிர்ரேயின் மனப்பிறழ்வின் புறவடிவமாகவே மாறிவிடுகிறது.
‘ஃபிட்ஸ்கரால்டோ’ (Fitzcarraldo, 1982) திரைப்படத்திலும் இயற்கை ஒரு பிரதான பாத்திரம். பெரு நாட்டின் அமேசான் காட்டில், அணுக முடியாத ரப்பர் மரங்களை அடையவும், அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு ஓபரா மாளிகையைக் கட்டவும் கனவு காணும் பிரையன் ஸ்வீனி ஃபிட்ஸ்கரால்டோவின் (மீண்டும் கிளவுஸ் கின்ஸ்கி) கதை இது. இந்தக் கனவின் உச்சகட்டமாக, ஒரு பெரிய நீராவிக் கப்பலை ஒரு செங்குத்தான மலை மீது பழங்குடியினரின் உதவியுடன் இழுத்துச் செல்ல முயல்கிறான். இந்தக் காட்சி, ஹெர்சாக்கின் "பரவசமான உண்மையை" நோக்கிய தேடலின் உச்சம்.
எந்தவிதமான கிராஃபிக்ஸ் தந்திரங்களும் இல்லாமல், நிஜமாகவே ஒரு கப்பலை மலை மீது இழுத்த அந்த முயற்சி, மனிதனின் அடங்காத மனவுறுதிக்கும், இயற்கையின் பிரமாண்டமான சவாலுக்கும் இடையிலான ஒரு காவியப் போராட்டத்தைத் திரையில் வடித்தது. காடு ஒருபுறம் தடையாகவும், மறுபுறம் ஃபிட்ஸ்கரால்டோவின் கனவிற்குச் சாட்சியாகவும் நிற்கிறது. ‘பர்டன் ஆஃப் ட்ரீம்ஸ்’ (Burden of Dreams, 1982) என்ற லெஸ் பிளாங்கின் ஆவணப்படம், இந்தப் பட உருவாக்கத்தின்போது ஹெர்சாக்கும் அவரது குழுவினரும் சந்தித்த நிஜமான சவால்களையும், இயற்கையின் சீற்றத்தையும் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
‘காஸ்பர் ஹவுசரின் புதிர்’ (The Enigma of Kaspar Hauser, 1974) படத்தில், வாழ்நாள் முழுவதும் ஒரு இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்டுச் சமூக நாகரிகத்துக்கு வெளியே வளர்ந்த காஸ்பர் (புரூனோ எஸ். அற்புதமாக நடித்திருப்பார்) முதன்முதலில் வெளி உலகையும், இயற்கையையும் பார்க்கும்போது, அவனது கண்களில் தெரியும் பிரமிப்பும், குழப்பமும், இயற்கையின் தூய்மையையும், மனித சமூகத்தின் செயற்கைத்தனத்தையும் ஒருசேரப் பிரதிபலிக்கின்றன. வயல்வெளிகள், மரங்கள், வானம் என அவன் காணும் ஒவ்வொன்றும் அவனுக்கு ஒரு புதிர், ஒரு அதிசயம். இங்கு இயற்கை, காஸ்பரின் அப்பாவித்தனத்திற்கும், உலகின் விசித்திரத்திற்கும் ஒரு உருவகமாகிறது. அவனது சோகமான வரலாறு, நாகரிகம் என்று சொல்லப்படும் கட்டமைப்பால் சிதைக்கப்படும் இயற்கையுடன் ஒன்றிய மனிதனின் கதை.
‘ஃபட்டா மோர்கானா’ (Fata Morgana, 1971) இது ஒரு வழக்கமான ஆவணப்படம் அல்ல; கவித்துவமான கனவுப் பயணம். சஹாரா பாலைவனத்தின் எல்லையற்ற மணல்வெளியில், கானல் நீராய்த் தோன்றி மறையும் காட்சிகள், துருப்பிடித்த இயந்திரங்கள், விசித்திரமான மனிதர்கள் என விரியும் இந்தப் படம், படைப்பின் புராணக் கதைகளால் ஈர்க்கப்பட்டு, நாகரிகத்தின் சிதைவுகளையும், மனிதனின் தனிமையையும், பிரபஞ்சத்தின் மர்மங்களையும் ஒரு மாயாஜாலப் பார்வைக்கு உட்படுத்துகிறது. பாலைவனம் இங்கு ஒரு உருவகக் களமாக, மனிதனின் பிரமைகளையும், அர்த்தமின்மையையும் பிரதிபலிக்கிறது.
மிகச் சமீபத்திய ஆவணப்படமான ‘உலகின் முடிவில் சந்திப்புகள்’ (Encounters at the End of the World, 2007) இல், ஹெர்சாக் நம்மை அண்டார்டிகாவின் உறைபனி உலகிற்கு அழைத்துச் செல்கிறார். அங்குள்ள விஞ்ஞானிகள், தொழிலாளர்கள் மற்றும் சாகச விரும்பிகளின் விசித்திரமான கதைகள் வழியே, மனிதனின் தீராத தேடல் உணர்வையும், இயற்கையின் வசீகரமான அழகையும், அதே சமயம் அதன் கடுமையையும் படம் பிடிக்கிறார். எரிமலைகளுக்குள் டைவ் செய்யும் விஞ்ஞானி, திசை தெரியாமல் கடலை நோக்கி நடந்து செல்லும் பென்குவின் என ஹெர்சாக் கட்டமைக்கும் காட்சிகள், வாழ்வின் அபத்தத்தையும், அழகையும் ஒருங்கே தொடுகின்றன.
ஹெர்சாக்கின் படங்களில் இயற்கை ஒருபோதும் மென்மையான, காதல்வயப்பட்ட ஒன்றாகச் சித்தரிக்கப்படுவதில்லை. அது அழகானது, வசீகரமானது, அதே சமயம் அது கொடூரமானது, அலட்சியமானது, மனிதனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதது. ‘கிரிஸ்லி மேன்’ (Grizzly Man, 2005) இந்த உண்மையை மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது. அலாஸ்காவின் காடுகளில் கிரிஸ்லி கரடிகளுடன் பதின்மூன்று கோடைகாலங்களைச் செலவழித்த டிமோதி ட்ரெட்வெல் என்ற மனிதனின் நிஜக்கதை இது. ட்ரெட்வெல், கரடிகளைத் தன் நண்பர்களாகவும், அவற்றின் பாதுகாவலனாகவும் தன்னைக் கருதினார். அவற்றுடன் ஒரு ஆழமான ஆன்மீக உறவு இருப்பதாக நம்பினார். ஹெர்சாக், ட்ரெட்வெல்லின் சொந்த வீடியோ பதிவுகளைப் பயன்படுத்தி, அவரது ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் மரியாதையுடன் அணுகுகிறார். ஆனால், அதே சமயம், தன் அழுத்தமான வர்ணனை வழியே, ட்ரெட்வெல்லின் பார்வை எவ்வளவு அபாயகரமான கற்பனாவாதம் என்பதையும் சுட்டி காட்சிப்படுத்துகிறார். "பிரபஞ்சத்தின் பொதுவான வகுப்பான் நல்லிணக்கம் அல்ல, மாறாகக் குழப்பம், விரோதம் மற்றும் கொலை என்பதே என் நம்பிக்கை" என்று ஹெர்சாக் ஒரு காட்சியில் கூறுவது, அவரது இயற்கை குறித்த பார்வையைத் தெளிவுபடுத்துகிறது. இறுதியில், ட்ரெட்வெல்லும் அவரது காதலியும் ஒரு கரடியால் கொல்லப்படுவது, இயற்கையின் இரட்டை முகத்தையும் – அதன் வசீகரத்தையும், அதன் தவிர்க்க முடியாத கொடூரத்தையும் – ஒரு சோகமான எச்சரிக்கையாக முன்வைக்கிறது.
இயற்கை, ஹெர்சாக்கின் படங்களில், மனிதனின் அகங்காரத்தைச் சிதைக்கும் ஒரு சக்தியாகவும், அவனது உள்மனப் போராட்டங்களின் குறியீடாகவும் விளங்குகிறது. மனிதன் இயற்கையை ஆள நினைக்கும்போதும், அதன் விதிகளை மீற நினைக்கும்போதும், இயற்கை தன் கோர முகத்தைக் காட்டத் தயங்குவதில்லை. அதே சமயம், இயற்கையின் பிரமாண்டத்தின் முன் தன் சிறுமையை/அற்பத்தனத்தை உணரும் மனிதன், ஒருவித ஆன்மீகத் தெளிவையும் அடைகிறான். ஹெர்சாக்கின் கேமரா, இந்தச் சிக்கலான உறவை, அதன் எல்லா முரண்பாடுகளுடனும், கவித்துவத்துடனும் பதிவு செய்கிறது.
வெர்னர் ஹெர்சாக்கின் திரைப்பட உலகம், சாதாரண மனிதர்களால் நிரம்பியது அல்ல. அது, அடங்காத ஆசைகளால் உந்தப்பட்டு, சாத்தியமற்ற கனவுகளைத் துரத்தி, சமூகத்தின் விளிம்புகளில் வாழும், சில சமயங்களில் பித்தின் எல்லைகளைத் தொடும் அசாதாரணமான கதைமாந்தர்களால் ஆனது. அவர்களின் லட்சியங்கள் பிரமாண்டமானவை, அவர்களின் மனவுறுதி மலைகளைப் புரட்டக்கூடியது, ஆனால் அவர்களின் பாதைகள் பெரும்பாலும் அழிவை நோக்கியே செல்கின்றன. ஹெர்சாக், இந்தக் கதைமாந்தர்களை விமர்சிப்பதில்லை; மாறாக, அவர்களின் மனிதத்தன்மையின் ஆழங்களையும், அவர்களின் போராட்டங்களையும் ஒருவித புரிதலுடனும், சில சமயம் பச்சாதாபத்துடனும் அணுகுகிறார்.
‘அகிர்ரே, கடவுளின் கோபம்’ படத்தில் வரும் டான் லோப் டி அகிர்ரே, அதிகாரத்தின் மீதும், பொன் மீதும் கொண்ட தீராத ஆசையால், தன்னையும் தன் சகாக்களையும் அழிவின் பாதைக்கு அழைத்துச் செல்கிறான். அவனது மெகலோமேனியா, அவனைத் தனது சீற்றத்தை "கடவுளின் கோபம்" என்று சுயமாக அறிவித்துக்கொள்ளும் அளவிற்குச் செல்கிறது. அவனது கனவு, அமேசான் காட்டின் யதார்த்தத்தின் முன் தூள்தூளாகிறது. ‘ஃபிட்ஸ்கரால்டோ’வின் பிரையன் ஸ்வீனி ஃபிட்ஸ்கரால்டோ, தன் ஓபரா கனவிற்காக ஒரு மலையின் மீது கப்பலை இழுக்கும்போது, அவனது செயல் ஒருபுறம் பிரமிப்பூட்டினாலும், மறுபுறம் அது ஒருவித பித்தின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது. இந்தக் கனவுகளின் தீவிரம், அவனை யதார்த்த உலகிலிருந்து அந்நியப்படுத்தி, ஒரு தனிப்பட்ட நரகத்திற்குள் தள்ளுகிறது.
இந்த அசாதாரணமான கதைமாந்தர்களுக்கு உயிர் கொடுத்தவர்களில் முக்கியமானவர், நடிகர் கிளவுஸ் கின்ஸ்கி. ஹெர்சாக்கும் கின்ஸ்கியும் இணைந்து ஐந்து படங்களில் பணியாற்றினார்கள். அவர்களின் உறவு, ஒரு எரிமலைக்கும் பூகம்பத்திற்கும் இடையிலான உறவை போன்றது – ஆக்கப்பூர்வமானது, ஆனால் அதே சமயம் மிகவும் கொந்தளிப்பானது. ‘எனது ஆருயிர் நண்பன்’ (My Best Friend, 1999) என்ற ஆவணப்படத்தில், ஹெர்சாக் கின்ஸ்கியுடனான தனது சிக்கலான உறவை வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கிறார்.
கின்ஸ்கியின் தீவிரமான, கணிக்க முடியாத நடிப்பு முறை, ஹெர்சாக்கின் கதைமாந்தர்களின் உள்மனப் போராட்டங்களையும், அவர்களின் பித்தையும் திரையில் தத்ரூபமாக வடித்தது. அகிர்ரேயின் வெறித்தனமான கண்கள், ஃபிட்ஸ்கரால்டோவின் அடங்காத ஆர்வம், ‘நோஸ்ஃபெராட்டு தி வாம்பயர்’ (Nosferatu the Vampyre, 1979) படத்தில் வரும் டிராகுலாவின் சோகம் கலந்த கொடூரம் – இவை கின்ஸ்கியின் நடிப்பால் மறக்க முடியாத சித்திரங்களாகியுள்ளன.
புரூனோ எஸ்., ஹெர்சாக்கின் மற்றொரு முக்கியமான நடிகர். ‘காஸ்பர் ஹவுசரின் புதிர்’ மற்றும் ‘ஸ்ட்ரோஸ்செக்’ (Stroszek, 1977) ஆகிய படங்களில் நடித்த புரூனோ, நிஜ வாழ்க்கையிலும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட ஒரு மனிதர். ‘ஸ்ட்ரோஸ்செக்’ படத்தில், ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவிற்குத் தன் காதலி இவாவுடனும், ஒரு வயதான நண்பனுடனும் குடிபெயரும் கதாநாயகன் ஸ்ட்ரோஸ்செக் புரூனோவின் கதை, அமெரிக்கக் கனவின் இருண்ட பக்கத்தைக் காட்டுகிறது. அவனது அப்பாவித்தனமும், உலகின் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாத நிலையும், இறுதியில் அவனை ஒரு சோகமான முடிவுக்கு இட்டுச் செல்கின்றன. அவன் ஓட்டிய ட்ரக் பற்றி எறிகிறது. அவன் பயணித்த சேர்லிஃப்ட்டில் (நாற்காலி ஊர்தி)யில் அவன் (போலிஸின் குண்டு பாய்ந்து) தனது கையிலுள்ள டர்கியை போலவே உறைந்து போகிறான். ஹெர்சாக், புரூனோ போன்ற விளிம்புநிலை மனிதர்களின் கதைகள் வழியே, சமூகத்தின் கருணையற்றத் தன்மையையும், தனிமனிதனின் கையறுநிலையையும் கேள்விக்குள்ளாக்குகிறார்.
‘இதயக் கண்ணாடி’ (Heart of Glass, 1976) எனும் திரைப்படம், ஒரு வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டது. ஒரு பவேரிய கிராமத்தில், சிவப்பு ரூபி கண்ணாடிகளைத் தயாரிக்கும் ரகசியம் தெரிந்த ஒரே கைவினைஞர் இறந்துவிட, அந்தக் கிராமமே ஒருவித கூட்டு மனநோய்க்கு ஆளாகிறது. எதிர்காலத்தைக் கணிக்க அந்த ரூபி கண்ணாடிகளை நம்பியிருந்த மக்கள், இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்கள்.
இந்தப் படத்தில், நடிகர்கள் அனைவரையும் ஹிப்னாடிஸத்திற்கு உட்படுத்தி நடிக்க வைத்ததன் மூலம், ஹெர்சாக் ஒரு கனவு போன்ற, மாயத்தன்மை வாய்ந்த சூழலை உருவாக்குகிறார். இது, பகுத்தறிவின் போதாமையைக் குறித்தும், மனிதனின் மூடநம்பிக்கைகளையும், வெகுஜன ஹிஸ்டீரியாவையும் பற்றிய ஒரு ஆழமான விமர்சனமாக அமைகிறது.
ஹெர்சாக்கின் கதைமாந்தர்கள், பெரும்பாலும் அதிகார அமைப்புகளுடன் மோதும் தனிநபர்களாக இருக்கிறார்கள். ‘அகிர்ரே’யும், ‘ஃபிட்ஸ்கரால்டோ’வும், காலனித்துவத்தின் கோர முகத்தையும், பழங்குடி மக்களின் மீதான அதன் தாக்கத்தையும் வெவ்வேறு கோணங்களில் காட்டுகின்றன. அகிர்ரே, ஸ்பானிய காலனித்துவத்தின் ஆணவத்தையும், அழிவையும் உருவகப்படுத்தினால், ஃபிட்ஸ்கரால்டோ, ஐரோப்பிய கலாச்சாரத்தை உலகின் பிற பகுதிகளில் திணிக்க நினைக்கும் மேற்கத்திய மனப்பான்மையின் ஒரு விமர்சனமாக வாசிக்கப்படலாம். இருப்பினும், ஃபிட்ஸ்கரால்டோ பாத்திரம், அகிர்ரேயைப் போல் முழுமையான எதிர்மறை பாத்திரம் அல்ல; அவனிடம் ஒருவித அப்பாவித்தனமும், தன் கனவின் மீது ஒரு தீராத காதலும் இருக்கிறது.
‘பச்சை எறும்புகள் கனவு காணும் இடம்’ (Where the Green Ants Dream, 1984) ஆஸ்திரேலிய பழங்குடியினரின் நில உரிமைப் போராட்டத்தை நேரடியாகக் கையாள்கிறது. ஒரு சுரங்க நிறுவனம், பழங்குடியினரின் புனிதமான ஒரு நிலத்தில் யுரேனியம் தோண்ட முயலும்போது, அவர்கள் அதை எதிர்க்கிறார்கள். அந்த நிலம், பச்சை எறும்புகள் கனவு காணும் இடம் என்றும், அதைத் தொந்தரவு செய்தால் உலகம் அழிந்துவிடும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஹெர்சாக், இந்தப் படத்தின் மூலம், மேற்கத்திய நவீன அறிவியலுக்கும், பழங்குடியினரின் தொன்மையான நம்பிக்கைகளுக்கும் இடையிலான மோதலையும், கலாச்சாரப் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறார்.
அதிகாரத்தின் தன்மை, அதன் சீரழிவு மற்றும் தனிமனிதனின் எதிர்ப்பு ஆகியவை ஹெர்சாக்கின் படைப்புகளில் தொடர்ந்து ஆராயப்படும் கருப்பொருள்கள். அவர், அதிகாரத்தில் இருப்பவர்களின் மனிதாபிமானமற்ற செயல்களையும், அதே சமயம், ஒடுக்கப்பட்டவர்களின் மனவுறுதியையும், அவர்களின் போராட்டங்களையும் தன் படங்களில் தற்சார்பற்ற விதத்தில் பதிவு செய்கிறார்.
ஹெர்சாக்கின் கதைமாந்தர்கள், சமூகத்தின் பொதுவான அளவுகோல்களுக்குள் அடங்காதவர்கள். அவர்களின் எண்ணங்கள், செயல்கள், கனவுகள் எல்லாமே அசாதாரணமானவை. அகிர்ரேயின் கொடுங்கோன்மை, ஃபிட்ஸ்கரால்டோவின் பிடிவாதம், காஸ்பர் ஹவுசரின் உலகத்தைப் புரிந்துகொள்ள முடியாத நிலை, ஸ்ட்ரோஸ்செக்கின் அப்பாவித்தனம் – இவையெல்லாம் அவர்களைச் சமூகத்திலிருந்து அந்நியப்படுத்துகின்றன. அவர்களை மேதைகள் என்பதா, இல்லை மனப்பிறழ்வு கொண்டவர்கள் என்பதா என்ற கேள்வி எழுகிறது. ஹெர்சாக், இந்தக் கேள்விக்கு நேரடியான பதிலைத் தருவதில்லை. மாறாக, மேதைமைக்கும் பித்துக்கும் இடையிலான கோடு எவ்வளவு மெல்லியது, சில சமயங்களில் அது முற்றிலுமாக மங்கி இல்லாமல் போய்விடுகிறதா என்பதை அவர் தன் படங்கள் வழியே ஆராய்கிறார். ஒருவேளை, இந்த அசாதாரணமான மனிதர்களால்தான், உலகின் வழக்கமான சிந்தனை முறைகளை உடைத்து, புதிய உண்மைகளைக் கண்டறிய முடிகிறதோ என்ற எண்ணத்தையும் அவர் விதைக்கிறார். அவர்களின் தோல்விகளும், அழிவுகளும்கூட, ஒருவித காவிய சோகத்துடன், மனித இருப்பின் ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன.
வெர்னர் ஹெர்சாக்கிற்கு, திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்குச் சாதனம் அல்ல; அது ஒரு தத்துவ விசாரணை, உண்மையைத் தேடும் ஒரு புனிதப் பயணம். ஆனால், அவர் தேடும் உண்மை, செய்தித்தாள்களில் வரும் வரட்டு உண்மைகளோ, அல்லது அறிவியல் ஆய்வகங்களில் நிரூபிக்கப்படும் புறவயமான உண்மைகளோ அல்ல. அவர் தேடுவது, "பரவசமான உண்மை" – கவித்துவமான, ஆழ்மனதைத் தொடும், சில சமயம் விவரிக்க முடியாத, ஆனால் ஆழமாக உணரக்கூடிய ஒரு உண்மை. இந்த உண்மையை அடைய, அவர் வழக்கமான திரைப்பட இலக்கணங்களையும், கதை சொல்லும் முறைகளையும் துணிச்சலாக மீறுகிறார்.
"நவீன நாகரிகம் புதிய படிமங்களுக்காகப் பட்டினி கிடக்கிறது. நாம் அவற்றைக் கண்டுபிடிக்காவிட்டால், நாம் அழிந்துவிடுவோம்" என்பது ஹெர்சாக்கின் புகழ்பெற்ற கூற்று. இந்தப் புதிய படிமங்களைத் தேடி, அவர் உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் பயணிக்கிறார், மனித அனுபவத்தின் உச்சங்களையும், பாதாளங்களையும் தன் கேமராவில் பதிவு செய்கிறார். அவர் பெரும்பாலும் ஸ்டோரிபோர்டுகளைப் பயன்படுத்துவதில்லை; படப்பிடிப்புத் தளத்தில் ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகளையும், நடிகர்களின் தன்னிச்சையான மேம்படுத்தல்களையும் (improvisation) அவர் தன் படைப்பின் ஒரு பகுதியாகவே ஏற்றுக்கொள்கிறார்.
நிஜமான மனிதர்கள், நிஜமான இடங்கள், நிஜமான ஆபத்துகள் – இவை ஹெர்சாக்கின் திரைப்படங்களின் நம்பகத்தன்மைக்கு அடித்தளமாக அமைகின்றன. ‘ஃபிட்ஸ்கரால்டோ’ படத்தில், ஒரு பெரிய நீராவிக் கப்பலை நிஜமாகவே ஒரு மலை மீது இழுத்துச் சென்றது, திரைப்பட வரலாற்றில் நிகரில்லாத (சாகசமான) முயற்சி. அந்தப் பட உருவாக்கத்தின்போது ஏற்பட்ட சிரமங்களையும், ஆபத்துகளையும் பதிவு செய்துள்ள லெஸ் பிளாங்கின் ‘பர்டன் ஆஃப் ட்ரீம்ஸ்’ ஆவணப்படம், ஹெர்சாக், தன் கனவிற்காக, தன் பார்வையின் மெய்யான பதிவிற்காக எந்த எல்லைக்கும் செல்லத் துணிபவர் என்பதை விவரிக்கிறது.
புனைவுக்கும் ஆவணத்திற்கும் இடையிலான கோடுகளை ஹெர்சாக் தன் படங்களில் தொடர்ந்து கலைத்து வருகிறார். அவரது பல ஆவணப்படங்கள், புனைவுகளின் கவித்துவத்தையும், நாடகீயத்தையும் கொண்டிருக்கின்றன. அதே சமயம், அவரது புனைவுப் படங்கள், ஆவணப்படங்களின் யதார்த்தத்தையும், நேரடித்தன்மையையும் பிரதிபலிக்கின்றன. ‘இருளின் பாடங்கள்’ (Lessons of Darkness, 1992) என்ற ஆவணப்படம், முதல் வளைகுடாப் போருக்குப் பிந்தைய குவைத்தின் பற்றி எரியும் எண்ணெய் வயல்களை, ஒரு அறிவியல் புனைகதைப் படத்தின் காட்சிகளைப் போலவும், ஒரு அபோகாலிப்டிக் தரிசனமாகவும் காட்டுகிறது.
‘லிட்டில் டீட்டர் நீட்ஸ் டு ஃப்ளை’ (Little Dieter Needs to Fly, 1997) என்ற ஆவணப்படத்தில், வியட்நாம் போரில் சிக்கி, லாவோஸ் காடுகளில் இருந்து தப்பித்த டீட்டர் டெங்லர் என்ற விமானியின் நிஜக் கதையை, ஹெர்சாக் அவருடனேயே மீண்டும் அந்த இடங்களுக்குச் சென்று படமாக்குகிறார். இதில், டெங்லரின் அனுபவங்களை அவரே நடித்துக் காட்டுவது, ஆவணத்திற்கும் புனைவிற்கும் இடையிலான ஒரு விசித்திரமான கலவையை உருவாக்குகிறது.
ஹெர்சாக்கின் வாழ்க்கையிலும், அவரது திரைப்படங்களிலும் நடைப்பயணம் ஒரு முக்கிய அங்கம். அவருக்கு, நடைப்பயணம் என்பது வெறும் உடல் ரீதியான செயல்பாடு மட்டுமல்ல; அது ஒரு தியானம், ஒரு அறிதல் முறை, உலகத்துடன் உரையாடும் ஒரு வழி. 1974 இல், அவரது வழிகாட்டியும், புகழ்பெற்ற திரைப்பட விமர்சகருமான லாட்ட ஐஸ்னர், பாரிஸில் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தபோது, அவர் குணமடைய வேண்டும் என்ற நம்பிக்கையில், ஹெர்சாக் ம்யுனிக்கிலிருந்து பாரிஸ் வரை பனிக்காலத்தில் நடந்தே சென்றார். இந்த அனுபவத்தை அவர் ‘பனியில் நடத்தல்’ (Of Walking in Ice, 1978) என்ற தனது நாட்குறிப்பு நூலில் பதிவு செய்திருக்கிறார். அந்தப் பயணம், உடல் ரீதியான சவால்களையும், தனிமையையும், இயற்கையின் கடுமையையும் அவர் எதிர்கொண்ட விதத்தையும், அதன் மூலம் அவர் அடைந்த ஆன்மீகத் தெளிவையும் காட்டுகிறது. "நடைப்பயணம் ஒரு புண்ணியம், சுற்றுலா ஒரு கொடிய பாவம்" என்று அவர் அதில் குறிப்பிடுகிறார்.
பயண எழுத்தாளரான புரூஸ் சாட்வின் உடனான ஹெர்சாக்கின் ஆழமான நட்பு, அலைந்து திரிதல், கதைசொல்லல், மற்றும் நாடோடி வாழ்க்கை ஆகியவற்றின் மீதான அவர்களின் பொதுவான ஈர்ப்பை வெளிப்படுத்துகிறது. சாட்வின் இறந்த பிறகு, ஹெர்சாக் ‘நாடோடி: புரூஸ் சாட்வின் அடிச்சுவடுகளில்’ (Nomad: In the Footsteps of Bruce Chatwin, 2019) என்ற ஆவணப்படத்தை இயக்கினார். இதில், சாட்வின் பயணம் செய்த இடங்களுக்கு ஹெர்சாக் சென்று, அவரது நினைவுகளையும், எழுத்துகளையும், தத்துவங்களையும் அசைபோடுகிறார். சாட்வினின் தோள் பை (rucksack), ஹெர்சாக்கிற்கு ஒரு புனிதமான பொருளாகிறது. இந்தப் படம், இரு நண்பர்களுக்கிடையிலான ஆன்மீகப் பிணைப்பையும், பயணத்தின் மூலம் உண்மையைத் தேடும் அவர்களின் பொதுவான வேட்கையையும் காட்சிப்படுத்துகிறது.
ஹெர்சாக்கின் கதைமாந்தர்கள் பலரும் பயணிகளாக, அலைந்து திரிபவர்களாக இருக்கிறார்கள். அகிர்ரேயின் நதிப் பயணம், ஃபிட்ஸ்கரால்டோவின் காட்டுப் பயணம், காஸ்பர் ஹவுசரின் உலகினுள் முதல் காலடிகள், ஸ்ட்ரோஸ்செக்கின் அமெரிக்கப் பயணம் – இவை எல்லாமே வெறும் இடப்பெயர்ச்சி மட்டுமல்ல; அவை அக உலகப் பயணங்களும் கூட. இந்தப் பயணங்கள், அவர்களை மாற்றுகின்றன, சிதைக்கின்றன, சில சமயம் ஒரு புதிய புரிதலுக்கு இட்டுச் செல்கின்றன.
ஹெர்சாக்கின் ஆவணப்படங்களின் ஒரு தனித்துவமான அம்சம், அவரே வர்ணனையாளராக வருவது. அவரது குரல், ஒரு புறவயமான வர்ணனையாளரின் குரல் அல்ல; அது ஒரு அகநிலையான, தத்துவார்த்தமான, சில சமயம் கவித்துவமான குரல். அவர், திரையில் தெரியும் காட்சிகளை வெறுமனே விவரிப்பதில்லை; மாறாக, அவற்றின் ஆழமான அர்த்தங்களையும், தனக்கு அவை உணர்த்தும் எண்ணங்களையும் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். ‘கிரிஸ்லி மேன்’ படத்தில், டிமோதி ட்ரெட்வெல்லின் செயல்களை அவர் விமர்சிக்கும்போதும், அவரது ஆர்வத்தைப் பாராட்டும்போதும், ஹெர்சாக்கின் குரலில் ஒருவித சோகமும், புரிதலும் இழையோடும். ‘உலகின் முடிவில் சந்திப்புகள்’ படத்தில், அண்டார்டிகாவின் விசித்திரமான மனிதர்களையும், நிகழ்வுகளையும் அவர் வர்ணிக்கும்போது, அதில் ஒருவித ஆச்சரியமும், நகைச்சுவையும், தத்துவார்த்தமான கேள்விகளும் கலந்திருக்கும்.
ஹெர்சாக்கின் இந்தக் குரல், பார்வையாளனை வெறுமனே ஒரு சாட்சியாக இருக்க விடாமல், படத்தின் நிகழ்வுகளோடும், அதன் மையக் கருத்துகளோடும் ஒரு ஆழமான உரையாடலுக்கு அழைக்கிறது. அவர், தன் சந்தேகங்களையும், கேள்விகளையும், முடிவுகளையும் பார்வையாளன் மீது திணிப்பதில்லை; மாறாக, அவனைச் சிந்திக்கத் தூண்டுகிறார், அவனது சொந்த முடிவுகளுக்கு வர ஊக்குவிக்கிறார். இது, அவரது திரைப்படங்களை ஒரு வெறும் காட்சி அனுபவமாக இல்லாமல், ஒரு அறிவுபூர்வமான, உணர்வுபூர்வமான பயணமாக மாற்றுகிறது.
வெர்னர் ஹெர்சாக் எனும் திரைக்கலைஞனின் பிரபஞ்சம், வெறும் காட்சிகளின் தொகுப்பு மட்டுமல்ல; அது ஒலிகளின், மௌனங்களின், மொழிகளின், மற்றும் மொழி கடந்த தரிசனங்களின் ஒரு பிரமாண்டமான அரங்கம். மனித இருத்தலின் விளிம்புகளையும், இயற்கையின் ஆதி மர்மங்களையும் தன் கேமரா வழியே தேடும் ஹெர்சாக், மொழியை ஒரு கருவியாக மட்டுமல்ல, ஒரு கலாச்சாரக் குறியீடாக, மனித மனதின் சிக்கலான வெளிப்பாடாக, சில சமயம் மனிதர்களுக்கிடையேயான புரிதலின் தடையாகவும்கூடத் தன் படைப்புகளில் சித்தரிக்கிறார். அவரது ஆவணப்படங்களான "உலகின் முடிவில் சந்திப்புகள்" (Encounters at the End of the World, 2007) மற்றும் "சூரியனின் ஆயர்கள்" (Herdsmen of the Sun, 1989) ஆகியவை, இந்த மொழி சார்ந்த தேடலின் இருவேறு துருவங்களை நமக்குக் காட்டுகின்றன. ஒன்று, அறிவியலும் தனிமையும் உறையும் பனிப்பிரதேசத்தின் விசித்திர மனிதர்களையும் அவர்களின் சிதறிய மொழிகளையும் பேசுகிறது; மற்றொன்று, ஆப்பிரிக்கப் பழங்குடியினரின் சடங்கு மொழியையும், அழகின் ஆதி வெளிப்பாட்டையும் காட்சிப்படுத்துகிறது.
அண்டார்டிகா – உலகின் தென்கோடியில், மனித நாகரிகத்தின் ஆரவாரங்களிலிருந்து விலகி, பனியும் பாறைகளும் மட்டுமே ஆட்சி செய்யும் ஒரு பெருவெளி. ஹெர்சாக்கின் "உலகின் முடிவில் சந்திப்புகள்" நம்மை இந்த உறைபனிப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்கிறது. ஆனால், இது வெறும் பனிபடர்ந்த நிலப்பரப்பின் ஆவணம் மட்டுமல்ல; இது, அந்தத் தனிமையைத் தேர்ந்தெடுத்து, அங்கு வாழும், ஆய்வு செய்யும், அல்லது வெறுமனே தப்பித்து வந்திருக்கும் விசித்திரமான மனிதர்களின் கதைகளின் தொகுப்பு. மெக்மர்டோ நிலையம் (McMurdo Station) எனும் அமெரிக்க ஆய்வுத்தளத்தை மையமாகக் கொண்டு விரியும் இந்தப் படம், அங்குள்ள ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு தனி உலகம், ஒரு தனி மொழி பேசுபவன் என்பதைக் காட்டுகிறது.
மெக்மர்டோ நிலையத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தொழிலாளர்கள், தத்துவஞானிகள், கனவு காண்பவர்கள் எனப் பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் ஆங்கிலம் பேசினாலும், ஒவ்வொருவரின் பின்னணியும், இங்கு வந்ததற்கான காரணமும், அவர்களின் உலகப்பார்வையும் வெவ்வேறானவை. ஹெர்சாக் தன் வழக்கமான பாணியில், இவர்களின் விசித்திரமான கதைகளையும், அவர்களின் உள்மனப் போராட்டங்களையும் தன் கேமரா வழியே தேடி விரித்தெடுக்கிறார். எரிமலைகளுக்குள் நீந்தும் விஞ்ஞானி, பென்குவின்களின் மனநிலையை ஆராயும் ஆய்வாளர், "தொழில்முறை கனவு காண்பவராக" தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பெண், கைகளில் உலக உருண்டையை வைத்துக்கொண்டு விசித்திரமான தத்துவங்களைப் பேசும் டிரக் ஓட்டுநர் என ஒவ்வொருவரும் தத்தமது மொழியில், தத்தமது உண்மைகளை வெளிப்படுத்துகிறார்கள். இங்கு "மொழி" என்பது வெறும் சொற்கள் மட்டுமல்ல; அது அவர்களின் அனுபவங்கள், அவர்களின் காயங்கள், அவர்களின் நிறைவேறாத ஆசைகள், அவர்களின் தனித்துவமான உலகப்பார்வைகள்.
ஹெர்சாக், மொழியியலாளர் ஒருவரையும் சந்திக்கிறார். அவர், அழிந்துவரும் பழங்குடி மொழிகளைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். இது, படத்தின் மையமான ஒரு கருப்பொருளைத் தொடுகிறது: மொழிகளின் நிலையாமை, கலாச்சாரங்களின் சிதைவு, மற்றும் நவீன உலகின் தாக்கத்தால் மெல்ல மெல்ல மௌனமாகிவிடும் குரல்கள். அண்டார்டிகாவின் அந்த ஸ்திரமான கரையாத வெண்பனிவெளியில், மனித மொழிகளின் பன்முகத்தன்மையும், அவற்றின் அழிவும் ஒரு விசித்திரமான முரண்நகையாக ஒலிக்கிறது.
மனிதர்களின் சிதறிய மொழிகளுக்கு அப்பால், அண்டார்டிகாவின் இயற்கை தன் சொந்த மொழியில் பேசுகிறது. பனிக்கட்டிகள் உடையும் பேரொலி, கடல்வாழ் உயிரினங்களின் விசித்திரமான சப்தங்கள், காற்றின் ஊளை – இவை மனித மொழிகளுக்கு அப்பாற்பட்ட, ஆதியான ஒரு மொழியின் வெளிப்பாடுகள். ஹெர்சாக், இந்த இயற்கையின் மொழியை மிக நுட்பமாகப் பதிவு செய்கிறார். ஒரு காட்சியில், கடல் பனிக்கட்டியின் அடியில் இருந்து வரும் விசித்திரமான ஒலிகளை விஞ்ஞானிகள் பதிவு செய்வதைக் காட்சிப்படுத்துகிறார். அந்த ஒலிகள், ஏதோவொரு வேற்றுலக ஜீவராசியின் குரலைப் போலவும், பிரபஞ்சத்தின் ஆழத்திலிருந்து வரும் ஒரு செய்தியைப் போலவும் இருக்கின்றன.
சில சமயங்களில், மனித மொழி தோற்றுப்போகும் இடத்தில், மௌனம் ஒரு சக்திவாய்ந்த மொழியாகிறது. திசை தெரியாமல், தன் கூட்டத்தை விட்டு விலகி, மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்லும் ஒரு பென்குவினை ஹெர்சாக் காட்சிப்படுத்துகிறார். அந்தப் பென்குவின் ஏன் அப்படிச் செல்கிறது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. அதன் பயணம், ஒரு தீர்க்கமுடியாத புதிர். அந்த மௌனமான பயணம், மனிதனின் தனிமை, இலக்கற்ற தேடல் மற்றும் இருப்பின் அபத்தம் குறித்த பல கேள்விகளை எழுப்புகிறது. இங்கு மௌனம், சொற்களை விட ஆழமான அர்த்தங்களைத் தருகிறது.
"உலகின் முடிவில் சந்திப்புகள்" படத்திலும், அவரது ஜெர்மானிய ஆங்கில உச்சரிப்புடன் கூடிய குரல், காட்சிகளுக்கு ஒரு தத்துவார்த்தமான, சில சமயம் முரண்நகையான பரிமாணத்தைக் கொடுக்கிறது. அவர், ஒரு புறவயமான வர்ணனையாளராக இல்லாமல், ஒரு ஆர்வமுள்ள, சில சமயம் குழப்பமடைந்த அந்நியனைப் போல, தன் பார்வைகளையும், கேள்விகளையும் முன்வைக்கிறார். அவரது மொழி, பார்வையாளனை சிந்திக்கத் தூண்டுகிறது, காட்சிகளின் மேற்பரப்பிற்கு அடியில் இருக்கும் ஆழமான உண்மைகளைத் தேடச் சொல்கிறது.
"உலகின் முடிவில் சந்திப்புகள்" வழியே, ஹெர்சாக் மொழியின் பன்முகத்தன்மையையும், அதன் சிதைவுகளையும், மனிதர்களுக்கிடையேயான புரிதலின் சிக்கல்களையும், இயற்கையின் மொழி கடந்த மௌனத்தையும் ஒருங்கே படம் பிடிக்கிறார். இது, மனிதனின் தனிமை பற்றியும், அவனது தீராத தேடல் பற்றியுமான ஒரு கவித்துவமான தியானம்.
சஹாரா பாலைவனத்தின் விளிம்பில், நைஜர் மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் வொடாபே (Wodaabe) எனும் நாடோடிப் பழங்குடியினரின் வாழ்வியலையும், அவர்களின் தனித்துவமான கலாச்சாரத்தையும் ஹெர்சாக் "சூரியனின் ஆயர்கள்" (Wodaabe – Die Hirten der Sonne, 1989) என்ற ஆவணப்படத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்தப் படம், மேற்கத்திய உலகின் அறிவார்ந்த மொழிகளிலிருந்தும், அறிவியல் பார்வைகளிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டு, சடங்குகளையும், உடல் அலங்காரங்களையும், மௌனமான பார்வைகளையுமே மொழியாகக் கொண்ட ஒரு சமூகத்தின் சித்திரத்தை வரைகிறது.
வொடாபே மக்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு, கெரவோல் (Gerewol) எனப்படும் ஆண்களின் அழகுப் போட்டி. ஆண்டுக்கொருமுறை நடைபெறும் இந்த விழாவில், இளைஞர்கள் தங்களை மிக நுட்பமாக அலங்கரித்துக்கொண்டு, நீண்ட வரிசையில் நின்று, தங்கள் அழகையும், கவர்ச்சியையும் வெளிப்படுத்த நடனமாடுவார்கள். கண்களை உருட்டி, பற்களைக் காட்டி, முகபாவனைகளால் பெண்களைக் கவர முயல்வார்கள். பெண்கள், தங்களுக்குப் பிடித்தமான ஆணைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்தக் கெரவோல் சடங்கு, வெறும் அழகுப் போட்டி மட்டுமல்ல; அது வொடாபே சமூகத்தின் அழகியல் கோட்பாடுகளையும், பாலின உறவுகளையும், சமூகக் கட்டமைப்பையும் பிரதிபலிக்கும் ஒரு சிக்கலான மொழி.
ஹெர்சாக், இந்தச் சடங்கை மிக அருகிலிருந்து, எந்தவிதமான தீர்ப்புகளும் இன்றிப் பதிவு செய்கிறார். ஆண்களின் விரிவான ஒப்பனைகள், அவர்களின் ஆடைகள், அவர்களின் மெதுவான, தாளலயத்துடன் கூடிய நடன அசைவுகள், அவர்களின் கண்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் – இவை எல்லாமே சொற்களற்ற ஒரு மொழியில் பேசுகின்றன. அழகு, கவர்ச்சி, காதல், தேர்வு செய்தல், நிராகரித்தல் என மனித உறவுகளின் எல்லா நுட்பமான பரிமாணங்களும் இந்தச் சடங்கு மொழியில் வெளிப்படுகின்றன. இங்கு, உடல் ஒரு கேன்வாஸாகிறது; அலங்காரம் ஒரு கவிதையாகிறது; நடனம் ஒரு உரையாடலாகிறது.
வொடாபே மக்கள், வறண்ட பாலைவனப் பகுதியில் கால்நடைகளை மேய்த்து வாழும் நாடோடிகள். அவர்களின் வாழ்க்கை, இயற்கையின் சுழற்சியோடும், கால்நடைகளின் தேவைகளோடும் பின்னிப் பிணைந்த ஒன்று. அவர்களின் அன்றாட வாழ்வில், சொற்களை விட மௌனமும், சைகைகளும், பழக்கவழக்கங்களுமே அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. ஹெர்சாக், அவர்களின் இந்த மௌன மொழியையும், இயற்கையோடு அவர்கள் கொண்டிருக்கும் ஆழமான உறவையும் ஊடுருவாமல் பதிவு செய்கிறார்.
வறண்ட நிலப்பரப்பில் கால்நடைகளை ஓட்டிச் செல்லும் ஆயர்கள், சூரியனின் வெப்பத்தையும், புழுதியையும் தாங்கிக்கொண்டு, மிகக் குறைந்த சொற்களுடன் தங்கள் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். அவர்களின் முகங்களில் தெரியும் சகிப்புத்தன்மையும், அவர்களின் கண்களில் தெரியும் அமைதியும், சொற்களால் விவரிக்க முடியாத ஒரு ஆழமான அறிவுநுட்பத்தையும் வெளிப்படுத்துகின்றன.
"சூரியனின் ஆயர்கள்" படத்தில், ஹெர்சாக் ஒரு மானுடவியலாளனின் கூர்மையான பார்வையுடனும், ஒரு கவிஞனின் உணர்திறனுடனும் வொடாபே மக்களின் உலகை அணுகுகிறார். அவர், அவர்களின் கலாச்சாரத்தை வெறும் எக்ஸோட்டிக்கான (விந்தையான) ஒன்றாகக் காட்டாமல், அதன் உள்ளார்ந்த அழகையும், தத்துவத்தையும் புரிந்துகொள்ள முயல்கிறார். மேற்கத்திய பார்வையாளனுக்கு விசித்திரமாகத் தோன்றும் சடங்குகளுக்குப் பின்னால் இருக்கும் சமூக, உளவியல் காரணிகளை அவர் ஆராய்கிறார். அவரது வர்ணனை, இங்குக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும், காட்சிகளே பேசுகின்றன. வொடாபே மக்களின் பாடல்களும், இசையும், அவர்களின் சடங்கு மொழியின் ஒரு பகுதியாக, படத்தின் உணர்வுபூர்வமான தாக்கத்தை அதிகரிக்கின்றன.
"சூரியனின் ஆயர்கள்" மூலம், ஹெர்சாக் மொழி என்பது வெறும் சொற்களின் தொகுப்பு மட்டுமல்ல என்பதை ஆழமாக உணர்த்துகிறார். சடங்குகள், உடல் அலங்காரங்கள், இசை, நடனம், மௌனம் என மொழிக்குப் பல்வேறு வடிவங்கள் உண்டு என்பதையும், இந்த வடிவங்கள் வழியே மனிதர்கள் தங்கள் உணர்வுகளையும், நம்பிக்கைகளையும், கலாச்சாரத்தையும் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும் இந்தப் படம் ஒரு கவித்துவமான காண்பியல் மொழியாக்குகிறது.
வெர்னர் ஹெர்சாக்கின் படைப்புகளில் மொழி ஒரு சிக்கலான, பன்முகத்தன்மை வாய்ந்த கருப்பொருளாக விளங்குகிறது.
சொல் கடந்த "பரவச உண்மை" : ஹெர்சாக் தன் கலையின் மைய நோக்கமாகக் கருதும் "பரவச உண்மை" (ecstatic truth) என்பது, பெரும்பாலும் சொற்களால் விவரிக்க முடியாத, அறிவார்ந்த புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆழமான, உள்ளுணர்வு ரீதியான அனுபவம். அவரது படங்கள், இந்த உண்மையை அடைய, மொழியின் எல்லைகளைத் தாண்டி, காட்சிகளின் வீரியம், மனித உணர்ச்சிகளின் தீவிரம், மற்றும் இயற்கையின் பிரமாண்டம் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன. ‘அகிர்ரே’யின் பித்துநிலையோ, ‘ஃபிட்ஸ்கரால்டோ’வின் அடங்காத ஆசையோ அல்லது ‘கிரிஸ்லி மேன்’ ட்ரெட்வெல்லின் சோகமான முடிவோ – இவை சொற்களால் முழுமையாக விளக்கிவிட முடியாத, ஆனால் பார்வையாளனின் ஆன்மாவைத் தொடும் அனுபவங்கள்.
மொழியும் அதிகாரமும்: ஹெர்சாக்கின் சில படங்கள், மொழியை அதிகாரத்தின் (அறிஞர் ஃபூக்கோவின் கோட்பாட்டுகளின்படி) ஒரு கருவியாகவும், ஒடுக்குமுறையின் ஒரு வடிவமாகவும் காட்டுகின்றன. காலனித்துவவாதிகள் தங்கள் மொழியையும், கலாச்சாரத்தையும் பழங்குடி மக்கள் மீது திணிப்பது, அல்லது அதிகார வர்க்கத்தினர் தங்கள் மொழியின் மூலம் உண்மையை மறைப்பது போன்றவை அவரது படங்களில் சித்தரிக்கப்படுகின்றன. ‘காஸ்பர் ஹவுசர்’ படத்தில், காஸ்பரை "நாகரிகப்படுத்தும்" முயற்சியில், அவனது இயற்கையான மொழியும், சிந்தனை முறையும் சிதைக்கப்படுகின்றன.
மனிதர்களுக்கிடையேயான புரிதலுக்கான ஒரு பாலமாக மொழி செயல்பட வேண்டிய இடத்தில், அது சில சமயம் ஒரு தடையாக மாறிவிடுகிறது. ஹெர்சாக்கின் கதைமாந்தர்கள் பலர், தங்கள் எண்ணங்களையும், உணர்வுகளையும் மற்றவர்களுக்கு முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் தனிமைப்படுத்தப்பட்ட ஆன்மாக்களாக இருக்கிறார்கள். இந்தத் தொடர்பாடல் தோல்வி, அவர்களின் தனிமையையும், அந்நியமாதலையும் மேலும் அதிகரிக்கிறது.
வெர்னர் ஹெர்சாக், தன் திரைப்படங்கள் வழியே, மொழியின் சாத்தியக்கூறுகளையும், அதன் எல்லைகளையும் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார். சொற்களின் உலகத்திற்கு அப்பால், மௌனத்தின் மொழியையும், சடங்குகளின் மொழியையும், இயற்கையின் மொழியையும், மனித ஆன்மாவின் ஆழத்திலிருந்து எழும் தொன்ம (ஆதி) குரல்களையும் அவர் நமக்குக் காட்சிப்படுத்துகிறார். "உலகின் முடிவில் சந்திப்புகள்" காட்டும் பனிபடர்ந்த தனிமையின் சிதறிய மொழிகளானாலும் சரி, "சூரியனின் ஆயர்கள்" சித்தரிக்கும் பாலைவனத்து சடங்குகளின் ஆதி அழகின் மொழியானாலும் சரி, ஹெர்சாக்கின் கேமரா, மனித அனுபவத்தின் அந்தப் "பரவச உண்மையை" தேடும் ஒரு தீராத பயணத்தில் இருக்கிறது. அந்தப் பயணத்தில், மொழியும் ஒரு கருவி, மௌனமும் ஒரு மொழி, காட்சியே ஒரு பெரும் தரிசனம். ஹெர்சாக்கின் உலகம், நம் செவிகளை மட்டுமல்ல, நம் ஆன்மாவையும் தீண்டும் ஒரு பெருவெளி.
வெர்னர் ஹெர்சாக்கின் திரைக்காவியங்களில், 1976-ல் ஜெர்மானிய மொழியில் உருவான "ஹார்ட் ஆஃப் கிளாஸ்" (Herz aus Glas – கண்ணாடியின் இதயம்), ஒரு கனவின் சித்திரம்; மெய்யுலகின் விளிம்பில் தள்ளாடும் ஒரு கிராமத்தின் ஆன்மாவைச் செதுக்கிய சிற்பம். இது வெறும் திரைப்படமன்று, காலத்தின் திரையில் வரையப்பட்ட ஒரு மாயாஜால ஓவியம்.
பதினெட்டாம் நூற்றாண்டின் பவேரியப் பள்ளத்தாக்கில், பனிபடர்ந்த மலைகளின் மடியில், ஒரு கிராமம் தன் வாழ்வின் ஆதாரத்தை ஒரு கண்ணாடித் தொழிற்சாலையின் சுவாசிப்பில் கண்டது. அங்கு வடிக்கப்பட்ட செந்நிறக் கண்ணாடி (Ruby Glass) – அது வெறும் பொருளல்ல, கிராமத்தின் பெருமை, அதன் ஆன்மாவின் நிறம். ஆனால், அந்தச் செந்நிற மாயாஜாலத்தை வடித்தெடுத்த கரங்களின் சொந்தக்காரன், காலதேவனின் அழைப்பில் மறைந்தான்; அவனோடு மறைந்தது அந்த ரகசியத்தின் திறவுகோல்.
ரகசியத்தின் இழப்பு, கிராமத்தின் இதயத்தில் விழுந்த பேரிடி. தொழிற்சாலையின் அதிபதி, தொலைந்துபோன சூத்திரத்தைத் தேடி அலைகிறான், பைத்தியத்தின் விளிம்பில். கிராமமோ, ஒரு கூட்டு மயக்கத்தின் ஆழத்தில் மூழ்கி, தன் சுயத்தை இழந்து, நிழல்களின் நடனத்தில் சிக்கிக்கொள்கிறது. ஹியாஸ், மலைகளின் மௌனத்தில் ஞானம் பெற்ற தீர்க்கதரிசி, வரப்போகும் பேரழிவின் சித்திரங்களையும், தொழிற்சாலையின் இறுதிப் பயணத்தையும் தன் ஞானதிருஷ்டியில் காண்கிறான். நம்பிக்கையின் மெழுகுவர்த்தி அணைந்து, கிராமம் இருளின் ஆழத்தில் மெல்ல மெல்ல கரைகிறது.
"ஹார்ட் ஆஃப் கிளாஸ்" திரைப்படத்தின் ஆன்மா, ஹெர்சாக்கின் துணிச்சலான கலைப்பார்வையில் உறைகிறது. ஹியாஸ் பாத்திரத்தைத் தவிர்த்து, மற்றெல்லா நடிகர்களையும் ஹிப்னாடிஸ உறக்கத்தில் ஆழ்த்தி, அவர்களின் ஆழ்மனதின் உணர்வுகளைத் திரையில் வடித்தெடுத்தார் ஹெர்சாக். இது, கிராமத்து மக்களின் கனவுபோன்ற நிலைகொள்ளாத தன்மையையும், அவர்களின் செயல்களில் படிந்திருந்த மெய்நிகர் உணர்வையும் பார்வையாளர்களின் இதயத்தில் ஆழமாகப் பதியவைத்தது. ஒரு நிஜமற்ற உலகின் நிஜமான பிரதிபலிப்பு அது.
பவேரியாவின் அழகு – அதன் அடர்காடுகள், மௌனமாய்த் தவமிருக்கும் மலைகள், பனிபடர்ந்த பள்ளத்தாக்குகள் – இவை வெறும் பின்னணியல்ல, கதையின் மௌன சாட்சிகள். அவை, மனித உணர்வுகளின் ஆழத்தையும், இயற்கையின் பிரமாண்டத்தையும் ஒருசேரப் பிரதிபலித்து, திரைப்படத்திற்கு ஒரு தத்துவார்த்த ஒளியூட்டின.
• அறிவின் அஸ்தமனம்: "ஹார்ட் ஆஃப் கிளாஸ்" ஒரு சமூகத்தின் உயிர்நாடியான ஒரு கலை அல்லது தொழில்நுட்பம் மறையும்போது, அதன் ஆன்மா எவ்வாறு சிதைந்துபோகும் என்பதன் சோக கீதம்.
• கூட்டு மனதின் பிரமைகள்: "ஹார்ட் ஆஃப் கிளாஸ்" நெருக்கடியின் பிடியில் சிக்கிய சமூகம், பகுத்தறிவின் பாதையை விட்டு விலகி, மாயைகளின் வலையில் சிக்குண்டு, கூட்டு மனப்பிறழ்வின் ஆழத்தில் வீழ்வதைக் காட்டும் கண்ணாடி.
• விதியின் விளையாட்டு: ஹியாஸின் தீர்க்கதரிசனங்கள் வழியே, எதிர்காலத்தின் நிழல்களும், மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட விதியின் கரங்களும் கதையினூடே இழையோடுகின்றன.
• சமுதாயத்தின் சிதைவு: "ஹார்ட் ஆஃப் கிளாஸ்" ஒரு சிறிய சமூகத்தின் பொருளாதாரமும், நம்பிக்கையும் நொறுங்கும்போது, அது எவ்வாறு முழுமையான வீழ்ச்சியின் படுகுழியில் தள்ளப்படுகிறது என்பதன் துயரச் சித்திரம்.
• இயற்கையின் மடியில் மனிதன்: இப்படத்தில் ஹெர்சாக்கின் கலைப்பார்வையில், மனிதனின் அகப்போராட்டங்களுக்கும், அவனைச் சூழ்ந்திருக்கும் இயற்கையின் மௌன மொழிக்கும் இடையிலான பிரிக்க முடியாத பிணைப்பு, அழுத்தமான கவிதை வரிகளாய் ஒலிக்கிறது.
"ஹார்ட் ஆஃப் கிளாஸ்" இது மெல்லிசையாய் நகரும் ஒரு கலைப்படைப்பு. அதன் ஆழமான தத்துவ விசாரணைகளும், ஹெர்சாக்கின் நிகரற்ற இயக்கமும், காலத்தால் அழியாத ஒரு திரை அனுபவத்தை நமக்கு வழங்குகின்றன. இது வெறும் பொழுதுபோக்கின் எல்லைகளைக் கடந்து, மனித வாழ்வின் அர்த்தங்களையும், சமூகத்தின் இருப்பியலையும், அறிவின் ஒளியையும் குறித்த கேள்விக் கணைகளை நம்முள் எழுப்புகிறது. வெர்னர் ஹெர்சாக்கின் திரைவானில், இது ஒரு தனித்துவமான, பிரகாசமான நட்சத்திரம்.
வெர்னர் ஹெர்சாக் எனும் திரைக்கலைஞன், மனித ஆன்மாவின் விளிம்புகளில் நின்று, அதன் அடங்காத தாகங்களையும், அச்சங்களையும், பரவசங்களையும் தன் ஒளிப்படக்கருவியால் காட்சிப்படுத்தும் ஒரு தீராத பயணி. அவரது படைப்புலகில், "மரச்சிற்பி ஸ்டைனரின் மகா பரவசம்" ஒரு தனித்துவமான, மறக்க முடியாத சித்திரம். இது, வால்டர் ஸ்டைனர் எனும் சுவிஸ் நாட்டு மரச்சிற்பியும், பனிச்சறுக்கு வீரருமான (குறிப்பாக ஸ்கை-ஃப்ளையிங் எனும் அதி உயரப் பனிப்பறத்தலில்) ஒரு மனிதனின் அசாதாரணமான வாழ்வையும், அவனது உள்மனப் போராட்டங்களையும், அவன் அடையும் அந்தத் தெய்வீகப் பரவசத்தையும் கவித்துவமாகப் பதிவு செய்கிறது. ஹெர்சாக்கின் பார்வையில், ஸ்டைனர் வெறும் விளையாட்டு வீரன் அல்ல; அவன், புவியீர்ப்பை மீறி, மரணத்தின் விளிம்பில் நின்று, வாழ்வின் உச்சபட்ச ஆனந்தத்தைத் தேடும் ஒரு கலைஞன், ஒரு தத்துவஞானி.
வால்டர் ஸ்டைனரின் வாழ்க்கை, இருவேறு துருவங்களால் ஆனது. ஒருபுறம், அவன் தன் கைகளால் மரக்கட்டைகளுக்கு உயிர் கொடுக்கும் ஒரு தேர்ந்த மரச்சிற்பி. அவனது பட்டறையில், உளியின் மெல்லிய தாளமும், மரத்தின் வாசனையும், ஒருவித அமைதியையும், நிதானத்தையும் உருவாக்குகின்றன. அவன் செதுக்கும் உருவங்களில், அவனது கலைத்திறனும், பொறுமையும், ஆழ்ந்த தியானமும் வெளிப்படுகின்றன. இது, பூமிக்கு நெருக்கமான, ஸ்திரமான, படைப்பாற்றல் நிறைந்த ஒரு உலகம்.
மறுபுறம், ஸ்டைனர் ஒரு ஸ்கை-ஃப்ளையர். பனிபடர்ந்த மலைகளின் உச்சியிலிருந்து, ராட்சத சறுக்கு மரங்களில் (skis) அதிவேகமாகப் பாய்ந்து, வானில் ஒரு பறவையைப் போல் சில கணங்கள் மிதந்து, பின் மீண்டும் பூமியில் இறங்கும் ஒரு தீர விளையாட்டு இது. இங்கு, நிதானத்திற்கு இடமில்லை; இருப்பது, கணக்கிட முடியாத வேகம், கண நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவுகள், மரணபயம் மற்றும் அந்த அச்சத்தை மீறி எழும் ஒருவித மகா பரவசம். இது, புவியீர்ப்பை மீறிய, கணநேர, ஆனால் தீவிரமான அனுபவங்கள் நிறைந்த ஒரு உலகம்.
ஹெர்சாக், ஸ்டைனரின் இந்த இருவேறு உலகங்களையும் மிக நுட்பமாக இணைக்கிறார். மரச்சிற்பியின் கைகளில் உளி பேசும் அதே நேர்த்தியுடன், பனிப்பறத்தலின்போது ஸ்டைனரின் உடல் வானில் வரையும் கவிதையையும் அவர் படம் பிடிக்கிறார். ஒன்று, அக உலகின் படைப்பு; மற்றொன்று, புற உலகின் அறைகூவல். ஆனால், இரண்டுக்குமே தேவைப்படுவது, ஆழ்ந்த கவனம், மனவுறுதி மற்றும் தன் கலையின் மீது ஒரு தீராத காதல். ஸ்டைனரின் ஆன்மா, இந்த இரு உலகங்களிலும் ஒருசேர வாழ்கிறது, ஒன்றிலிருந்து மற்றொன்று சக்தியைப் பெறுகிறது. மரச்சிற்பியின் நிதானம், பனிப்பறத்தலின்போது அவனுக்குத் தேவையான மனக்கட்டுப்பாட்டைக் கொடுக்கலாம்; பனிப்பறத்தலின் பரவசம், அவனது சிற்பங்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுக்கலாம்.
"மரச்சிற்பி ஸ்டைனரின் மகா பரவசம்" திரைப்படத்தின் மிக முக்கியமான அம்சம், ஹெர்சாக் ஸ்கை-ஃப்ளையிங் காட்சிகளைப் படமாக்கியிருக்கும் விதம். அது, வெறும் விளையாட்டுப் போட்டியின் பதிவல்ல; அது ஒரு கவித்துவமான, தத்துவார்த்தமான தரிசனம்.
ஸ்டைனர் வானில் பறக்கும் காட்சிகளை ஹெர்சாக் பெரும்பாலும் மெதுவான இயக்கத்தில் (slow motion) காட்சிப்படுத்துகிறார். இது, அந்தப் பறத்தலின் ஒவ்வொரு கணத்தையும், ஸ்டைனரின் உடலின் ஒவ்வொரு அசைவையும், காற்றில் அவன் வரையும் கோடுகளையும் மிகத் தெளிவாகவும், அழகாகவும் பதிவு செய்ய உதவுகிறது. காலம் உறைந்து நிற்பது போன்ற ஒரு உணர்வை இது ஏற்படுத்துகிறது. மிக மெதுவான அந்த இயக்கத்தில், ஸ்டைனர் வானில் மிதக்கும்போது, அவன் முற்றிலும் தனியாக இருப்பது தெரிகிறது. சுற்றிலும் பனிபடர்ந்த மலைகளின் பிரமாண்டம், கீழே தெரியும் சிறிய உலகம், மேலே விரிந்திருக்கும் எல்லையற்ற வானம். இந்த விசாலமான பிரபஞ்சத்தில், ஸ்டைனர் ஒரு சிறிய புள்ளியாக, ஆனால் அதே சமயம், அந்தப் பிரபஞ்சத்தையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயலும் ஒரு மாபெரும் சக்தியாகத் தெரிகிறான். இந்தத் தனிமை, ஒருவித ஆன்மீகத் தனிமை; அது, அச்சத்தையும், அதே சமயம் ஒருவித விடுதலையையும் ஒருங்கே அளிக்கிறது.
ஸ்கை-ஃப்ளையிங் என்பது அபாயகரமான விளையாட்டு. ஒரு சிறிய தவறு கூட மரணத்திற்கு இட்டுச் செல்லலாம். ஹெர்சாக், இந்தக் காட்சிகளில், பறத்தலின் அழகை மட்டுமல்ல, அதன் உள்ளார்ந்த அச்சத்தையும் பதிவு செய்யத் தவறுவதில்லை. ஸ்டைனரின் முகத்தில் தெரியும் தீவிரமான கவனம், அவன் தரையிறங்கும்போது ஏற்படும் பதற்றம், ஒருமுறை அவன் தடுமாறிக் கீழே விழும் காட்சி – இவை எல்லாமே அந்த விளையாட்டின் கொடூரமான யதார்த்தத்தைக் காட்டுகின்றன. ஆனால், இந்த அச்சத்திற்கு மத்தியில்தான், அந்த மகா பரவசம் பிறக்கிறது. புவியீர்ப்பை வென்று, மரணத்தின் விளிம்பில் நின்று, சில கணங்கள் வானில் சுதந்திரமாகப் பறக்கும் அந்த அனுபவம், ஒரு தெய்வீக அனுபவத்திற்கு ஒப்பானது. அது, சாதாரண மனிதர்களால் உணர முடியாத ஒரு உச்சபட்ச ஆனந்தம். ஹெர்சாக், தன் கேமரா வழியே, இந்த "பரவச உண்மையை" பார்வையாளர்களுக்கும் கடத்த முயல்கிறார். பாப் டிலானின் (Bob Dylan) இசை, இந்தக் காட்சிகளின் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை மேலும் அதிகரிக்கிறது.
பனிபடர்ந்த மலைகள், இந்தப் படத்தின் மௌன சாட்சிகளாக நிற்கின்றன. அவை, ஸ்டைனரின் வீரத்தையும், அவனது அச்சங்களையும், அவனது பரவசங்களையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. அவை, காலத்தின் பிரமாண்டத்தையும், மனித வாழ்வின் நிலையாமையையும் உணர்த்துகின்றன. ஹெர்சாக், இயற்கையின் இந்தக் கம்பீரமான அழகையும், அதன் உதாசீனத்தையும் தன் படங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருபவர். ஸ்டைனரின் தனிமனிதப் போராட்டம், இந்த இயற்கையின் பின்னணியில் ஒரு புதிய பரிமாணத்தைப் பெறுகிறது.
வால்டர் ஸ்டைனரின் பனிப்பறத்தல், வெறும் ஒரு விளையாட்டுச் சாகசம் மட்டுமல்ல; அது, மனித சாத்தியக்கூறுகளின் எல்லைகளை மீறும் ஒரு இருத்தலியல் தேடல். அவன், தன் உடலின் வலிமையையும், மனதின் உறுதியையும் சோதித்துப் பார்க்கிறான். ஒவ்வொரு முறையும் அவன் மலையுச்சியிலிருந்து பாயும்போது, அவன் மரணத்தை எதிர்கொள்கிறான், வாழ்வின் மதிப்பை உணர்கிறான்.
ஸ்டைனர் ஒரு காட்சியில் கூறுகிறான், "நான் தனியாக இருக்கும்போது, சறுக்கு மரங்களில் பாய்வதற்குச் சற்று முன்பு, நான் மரணத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வது போல் உணர்கிறேன். ஒருவேளை, இதுவே என் கடைசிப் பாய்ச்சலாக இருக்கலாம்." இந்த வார்த்தைகள், அவன் தன் விளையாட்டை எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்கிறான் என்பதையும், அவன் எதிர்கொள்ளும் அபாயத்தையும் காட்டுகின்றன. ஹெர்சாக்கின் பல கதைமாந்தர்களைப் போலவே, ஸ்டைனரும் மரணத்தின் நிழலில் வாழ்பவன். ஆனால், இந்த மரணபயம்தான், அவனுக்கு வாழ்வின் மீது ஒரு தீராத பற்றையும், ஒவ்வொரு கணத்தையும் முழுமையாக வாழ வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுக்கிறது.
வானில் பறக்கும் அந்தச் சில கணங்கள், ஸ்டைனருக்கு ஒரு முழுமையான சுதந்திரத்தைக் கொடுக்கின்றன. புவியீர்ப்பின் பிடியிலிருந்து விடுபட்டு, உலகின் சுமைகளிலிருந்து விலகி, அவன் ஒரு பறவையைப் போல் உணர்கிறான். இந்தச் சுதந்திரத்திற்கான தாகம்தான், அவனை மீண்டும் மீண்டும் அந்த அபாயகரமான விளையாட்டை நோக்கி இழுக்கிறது. இது, ஹெர்சாக் தன் படங்களில் தொடர்ந்து ஆராயும் ஒரு கருப்பொருள்: மனிதனின் அடங்காத சுதந்திர வேட்கை மற்றும் அதற்காக அவன் கொடுக்க விழையும் விலை.
ஸ்டைனர், ஒரு தனிமனிதனாகத் தன் அச்சங்களோடும், தன் லட்சியங்களோடும் போராடுகிறான். அவனுக்குப் பின்னால் ஒரு பெரிய குழுவோ, ஆதரவோ இல்லை. அவன், தன் சொந்த பலத்தையும், தன் உள்ளுணர்வையும் நம்பிச் செயல்படுகிறான். இந்தத் தனிமனிதப் போராட்டம், ஹெர்சாக்கின் பார்வையில், ஒரு வீர காவியத்திற்கு நிகரானது. சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கும், தன் உள்மனதின் அழைப்பிற்கும் இடையில் அவன் தத்தளிக்கும் காட்சிகள், அவனது மனிதத்தன்மையின் ஆழத்தைக் காட்டுகின்றன.
வால்டர் ஸ்டைனர், ஒரு அசாதாரணமான திறமைசாலி. அவனது பனிப்பறத்தல், மற்ற வீரர்களை விட மிகத் தொலைவிற்குச் செல்கிறது. ஆனால், இந்தத் திறமையே அவனுக்கு ஒரு பெரிய சுமையாக மாறிவிடுகிறது.
ஒவ்வொரு போட்டியிலும், ஸ்டைனர் தன்னைத்தானே மிஞ்ச வேண்டும் என்ற ஒரு கட்டாயத்திற்கு ஆளாகிறான். முந்தைய சாதனைகளை முறியடித்து, இன்னும் அதிகத் தூரம் பறக்க எதிர்பார்ப்பு, அவனுக்கு ஒரு பெரிய மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. அவன், தன் உடலின் வரம்புகளை மீறிச் செயல்பட வேண்டியிருக்கிறது.
பார்வையாளர்களும், ஊடகங்களும் ஸ்டைனரிடமிருந்து அதிசயங்களை எதிர்பார்க்கிறார்கள். அவனது ஒவ்வொரு பாய்ச்சலும் ஒரு சாதனையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இந்த வெளிப்புற அழுத்தம், அவனது சுதந்திரமான செயல்பாட்டைப் பாதிக்கிறது. அவன், ஒரு கலைஞனாக இல்லாமல், ஒரு கேளிக்கைப்பொருளாக மாற்றப்படும் அபாயம் ஏற்படுகிறது. ஹெர்சாக், இந்தக் காட்சிகளின் மூலம், விளையாட்டு உலகில் நிலவும் வணிகமயமாக்கலையும், தனிமனிதன் மீது அது சுமத்தும் பாரத்தையும் விமர்சிக்கிறார்.
தொடர்ச்சியான ஆபத்து, மன அழுத்தம் மற்றும் அதீத எதிர்பார்ப்புகள் ஆகியவை ஸ்டைனரின் மனநிலையைப் பாதிக்கின்றன. அவன், சில சமயங்களில் சோர்வாகவும், விரக்தியாகவும் காணப்படுகிறான். மரச்சிற்பம் செதுக்கும்போது அவன் அடையும் அமைதி, பனிப்பறத்தல் உலகில் அவன் எதிர்கொள்ளும் கொந்தளிப்பிற்கு ஒரு மாற்றாக இருக்கிறது. ஹெர்சாக், ஸ்டைனரின் இந்த உளவியல் போராட்டங்களையும் மிக நேர்மையாகப் பதிவு செய்கிறார்.
"மரச்சிற்பி ஸ்டைனரின் மகா பரவசம்" திரைப்படத்தில், ஹெர்சாக் ஒரு வர்ணனையாளராகவும், ஒரு நண்பனாகவும், ஒரு தத்துவவாதியாகவும் ஸ்டைனரின் உலகை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அவரது குரல், ஸ்டைனரின் செயல்களுக்கு ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுக்கிறது, பார்வையாளனை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுகிறது.
ஹெர்சாக், ஸ்டைனரை ஒரு புறவயமான ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. மாறாக, அவனது உள்மன உலகிற்குள் சென்று, அவனது உணர்வுகளையும், எண்ணங்களையும் புரிந்துகொள்ள முயல்கிறார். ஸ்டைனருடனான அவரது உரையாடல்கள், மிக இயல்பாகவும், நேர்மையாகவும் இருக்கின்றன. இது, பார்வையாளனுக்கும் ஸ்டைனருக்கும் இடையில் ஒரு நெருக்கமான உறவை உருவாக்குகிறது.
ஹெர்சாக்கின் கலைப்பயணத்தின் மைய நோக்கம், "பரவச உண்மையை" (ecstatic truth) கண்டடைவது. இந்த உண்மை, வெறும் தகவல்களிலோ, புள்ளிவிவரங்களிலோ இல்லை; அது, மனித அனுபவத்தின் உச்சபட்ச தருணங்களில், கவித்துவமான தரிசனங்களில், ஆழ்மனதைத் தொடும் உணர்வுகளில் இருக்கிறது. ஸ்டைனர் வானில் பறக்கும்போது அடையும் அந்த மகா பரவசம், ஹெர்சாக்கின் பார்வையில், இந்த "பரவச உண்மை"யின் ஒரு வெளிப்பாடு. அந்த அனுபவத்தை, தன் திரைமொழி வழியே பார்வையாளர்களுக்கும் கடத்துவதே ஹெர்சாக்கின் நோக்கம்.
இந்தப் படத்திலும், ஹெர்சாக் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான சிக்கலான உறவை ஆராய்கிறார். பனிபடர்ந்த மலைகளின் பிரமாண்டம், மனிதனின் சிறுமையை உணர்த்துகிறது. அதே சமயம், அந்த இயற்கையின் சவால்களை எதிர்கொண்டு, அதன் மீது ஆதிக்கம் செலுத்த முயலும் மனிதனின் அடங்காத மனவுறுதியையும் ஹெர்சாக் காட்சிப்படுத்துகிறார். ஸ்டைனரின் பனிப்பறத்தல், இந்த உறவின் ஒரு குறியீடாகிறது.
"மரச்சிற்பி ஸ்டைனரின் மகா பரவசம்" திரைப்படம், பல ஆழமான தத்துவார்த்தக் கேள்விகளை எழுப்புகிறது:
மனித லட்சியத்தின் எல்லை என்ன?
படைப்பாற்றலுக்கும், அபாயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
உச்சபட்ச ஆனந்தத்தை அடைய, மனிதன் எந்த விலையையும் கொடுக்கத் துணிவானா?
வாழ்வின் அர்த்தம், பாதுகாப்பான நிதானத்திலா அல்லது அபாயகரமான சாகசத்திலா இருக்கிறது?
மரணபயம், வாழ்வின் மீதான பற்றை அதிகரிக்கிறதா?
இந்தப் படத்தைப் பார்க்கும்போது, ஸ்டைனரின் அனுபவங்கள் வழியே, நாமும் இந்தக் கேள்விகளை நம்மையே கேட்டுக்கொள்கிறோம். ஹெர்சாக், இந்தக் கேள்விகளுக்கு நேரடியான பதில்களைத் தருவதில்லை. மாறாக, தன் கவித்துவமான திரைமொழி வழியே, நம்மைச் சிந்திக்கவும், நம் சொந்த பதில்களைக் கண்டறியவும் தூண்டுகிறார்.
"மரச்சிற்பி ஸ்டைனரின் மகா பரவசம்", வெர்னர் ஹெர்சாக்கின் மிக முக்கியமான ஆவணப்படங்களில் ஒன்று. இது, ஒரு தனிமனிதனின் அசாதாரணமான திறமையையும், அவனது உள்மனப் போராட்டங்களையும், அவன் அடையும் அந்தத் தெய்வீகப் பரவசத்தையும் பற்றிய ஒரு ஆழமான, கவித்துவமான தியானம். வால்டர் ஸ்டைனரின் பனிப்பறத்தல், வெறும் விளையாட்டுச் சாகசமாக இல்லாமல், மனித ஆன்மாவின் அடங்காத தேடலின் ஒரு குறியீடாக, வானில் வரையப்பட்ட ஒரு காவியமாக நம் மனதில் நிற்கிறது. ஹெர்சாக்கின் கேமரா, அந்தப் பரவசத்தின் சில கணங்களையாவது நமக்குப் பரிசளித்து, வாழ்வின் மர்மங்களையும், அதன் உச்சங்களையும் பற்றி நம்மை மீண்டும் ஒருமுறை சிந்திக்க வைக்கிறது. உளியின் நிதானமும், வானின் வேகமும், அச்சமும் ஆனந்தமும் பின்னிப்பிணைந்த இந்த மகா பரவசம், ஹெர்சாக்கின் திரைக்கலையின் ஒரு உச்சபட்ச சாட்சியம்.
வெர்னர் ஹெர்சாக், தனது புனைக்கதைத் திரைப்படங்களைப் போலவே, ஆவணப்படங்களிலும் ஒரு தனித்துவமான மற்றும் ஆழமான முத்திரையைப் பதித்தவர். அவரது ஆவணப்படங்கள் வெறும் தகவல்களை வழங்குவதோடு நின்றுவிடுவதில்லை; அவை மனித அனுபவத்தின் விளிம்புகளையும், இயற்கையின் பிரமாண்டத்தையும், மனித மனதின் விசித்திரங்களையும் ஆராய்கின்றன. ஹெர்சாக்கின் ஆவணப்படங்களில் காணப்படும் சில பொதுவான அம்சங்கள்:
உண்மையும் புனைவும் கலந்த நடை: ஹெர்சாக் பெரும்பாலும் ஆவணப்படத்தின் எல்லைகளைத் தாண்டி, சில சமயங்களில் காட்சிகளை மறுஉருவாக்கம் செய்தோ அல்லது தனது பார்வையைச் செருகியோ ஒருவித "மெய்மறந்த உண்மையை" (ecstatic truth) வெளிப்படுத்த முயல்கிறார்.
தனித்துவமான வர்ணனை: ஹெர்சாக்கின் ஆழமான, தத்துவார்த்தமான மற்றும் சில சமயங்களில் நகைச்சுவையான வர்ணனை அவரது ஆவணப்படங்களின் ஒரு முக்கிய அங்கமாகும்.
தீவிரமான மனித அனுபவங்கள்: அசாதாரணமான சூழ்நிலைகளில் வாழும் அல்லது தீவிரமான சவால்களை எதிர்கொள்ளும் தனிநபர்களின் கதைகளை அவர் பெரும்பாலும் தேர்வு செய்கிறார்.
இயற்கையின் சக்தி மற்றும் அலட்சியம்: மனித முயற்சிகளுக்கு மத்தியில் இயற்கையின் சக்தி, அதன் அழகு மற்றும் சில சமயங்களில் அதன் கொடூரமான அலட்சியம் ஆகியவற்றை ஹெர்சாக் தனது படங்களில் அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.
அவரது வேறு சில முக்கிய ஆவணப்படங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்:
1. லெசன்ஸ் ஆஃப் டார்க்னெஸ் (Lessons of Darkness - இருளின் பாடங்கள், 1992)
• பின்னணி: முதல் வளைகுடாப் போரின் முடிவில், குவைத்தில் ஈராக்கியப் படைகளால் தீ வைக்கப்பட்ட எண்ணெய்க் கிணறுகளின் பேரழிவை இந்தப் படம் ஆவணப்படுத்துகிறது.
• ஹெர்சாக்கின் அணுகுமுறை: இது ஒரு வழக்கமான போர் ஆவணப்படம் அல்ல. ஹெர்சாக், இந்தப் பேரழிவை ஒரு அறிவியல் புனைகதைத் திரைப்படத்தைப் போல, ஒரு அந்நிய கிரகத்தில் நடக்கும் நிகழ்வாகச் சித்தரிக்கிறார். மனிதர்கள் இல்லாதது போன்ற உயிர்களற்ற காட்சிகள், எரியும் எண்ணெய்க் கிணறுகளின் பயங்கரமான மேலெழும் விழிகளுக்குள் அடக்கமுடியாத (sublime) அழகு மற்றும் புகையால் மூடப்பட்ட நிலப்பரப்பு ஆகியவை ஒருவித அமானுஷ்யமான உணர்வை ஏற்படுத்துகின்றன. ரிச்சர்ட் வாக்னர், ஆர்டோ பார்ட், குஸ்டாவ் மாலர் போன்றோரின் சக்திவாய்ந்த மேற்கத்திய செவ்வியல் இசை பின்னணியில் பயன்படுத்தப்பட்டிருப்பது, காட்சிகளின் தீவிரத்தை மேலும் கூட்டுகிறது. ஹெர்சாக்கின் வர்ணனை, பைபிளில் வரும் பேரழிவுக் காட்சிகளை நினைவுபடுத்துகிறது.
• முக்கிய கருப்பொருள்கள்: மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு, சுற்றுச்சூழலின் மீதான வன்முறை, அழிவின் பயங்கரமான அழகு, மனிதகுலத்தின் அறியாமை மற்றும் அகங்காரம். இந்தப் படம், போரின் பின்விளைவுகளை ஒரு தத்துவார்த்தமான கோணத்தில் அணுகி, பார்வையாளர்களை ஆழ்ந்த சிந்தனைக்கு உள்ளாக்குகிறது.
2. கேவ் ஆஃப் ஃபர்காட்டன் ட்ரீம்ஸ் (Cave of Forgotten Dreams - மறக்கப்பட்ட கனவுகளின் குகை, 2010)
• பின்னணி: தெற்கு பிரான்சில் உள்ள ஷாவே குகையில் (Chauvet Cave) கண்டுபிடிக்கப்பட்ட, உலகின் பழமையான குகை ஓவியங்களை (சுமார் 32,000 ஆண்டுகள் பழமையானவை) இந்தப் படம் ஆராய்கிறது. இந்தக் குகை, அதன் நுண்தன்மை காரணமாகப் பொதுமக்களின் பார்வைக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது.
• ஹெர்சாக்கின் அணுகுமுறை: ஹெர்சாக், தனது குழுவினருடன் சிறப்பு அனுமதி பெற்று இந்தக் குகைக்குள் சென்று, 3D தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஓவியங்களைப் படம்பிடித்தார். குகையின் சுவர்களின் வளைவுகளும், ஓவியங்களின் ஆழமும் 3D தொழில்நுட்பத்தின் மூலம் தத்ரூபமாக வெளிப்படுத்தப்பட்டன. விஞ்ஞானிகள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கலை வரலாற்றாசிரியர்களுடனான நேர்காணல்கள் மூலம், இந்த ஓவியங்களின் முக்கியத்துவம், அவற்றை வரைந்த மனிதர்களின் வாழ்க்கைமுறை மற்றும் அவர்களின் ஆன்மீக நம்பிக்கைகள் குறித்து ஹெர்சாக் ஆராய்கிறார். அவரது வர்ணனை, ஆதி மனிதனின் கலை உணர்வு, கனவுகள் மற்றும் பிரபஞ்சத்துடனான அவனது தொடர்பு குறித்த தத்துவார்த்தமான கேள்விகளை எழுப்புகிறது.
• முக்கிய கருப்பொருள்கள்: மனிதக் கலையின் தோற்றம், படைப்பாற்றலின் மர்மம், காலத்தின் ஓட்டம், மனித ஆன்மாவின் ஆழம், கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் உள்ள தொடர்பு, மனிதகுலத்தின் நினைவுகளின் முக்கியத்துவம். இந்தப் படம், நம் முன்னோர்களின் கலைத்திறனையும், அவர்களின் உள் உலகத்தையும் நமக்கு அறிமுகம் செய்து, மனித நாகரிகத்தின் வேர்களைப் பற்றி நம்மைச் சிந்திக்க வைக்கிறது.
3. லிட்டில் டீட்டர் நீட்ஸ் டு ஃப்ளை (Little Dieter Needs to Fly - குட்டி டீட்டருக்கு பறக்க வேண்டும், 1997)
• பின்னணி: ஜெர்மனியில் பிறந்து, அமெரிக்க விமானப்படையில் சேர்ந்து, வியட்நாம் போரின்போது லாவோஸில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு, சிறைபிடிக்கப்பட்டு, பின்னர் நம்பமுடியாத வகையில் தப்பித்த டீட்டர் டெங்லரின் (Dieter Dengler) உண்மைக் கதையை இந்தப் படம் கூறுகிறது.
• ஹெர்சாக்கின் அணுகுமுறை: ஹெர்சாக், டெங்லரை வியட்நாம் மற்றும் லாவோஸில் உள்ள அவர் சிறைபிடிக்கப்பட்ட மற்றும் தப்பித்த இடங்களுக்கு அழைத்துச் சென்று, அந்த நிகழ்வுகளை டெங்லரே நடித்துக் காட்டும்படி செய்கிறார். இது வழக்கமான ஆவணப்பட நேர்காணல்களிலிருந்து மாறுபட்டு, டெங்லரின் அனுபவங்களை மிகவும் உணர்வுபூர்வமாகவும், தீவிரமாகவும் வெளிப்படுத்த உதவுகிறது. டெங்லரின் குழந்தைப்பருவ கனவுகள், விமானத்தின் மீதான அவரது காதல், சிறைவாசத்தின் கொடூரங்கள் மற்றும் உயிர் பிழைப்பதற்கான அவரது இடைவிடாத போராட்டம் ஆகியவற்றை ஹெர்சாக் அழுத்தமாகப் பதிவு செய்கிறார். ஹெர்சாக்கின் வர்ணனை, டெங்லரின் மன உறுதியையும், மனித ஆன்மாவின் தாங்குதிறனையும் பாராட்டுகிறது.
• முக்கிய கருப்பொருள்கள்: மனிதனின் விடாமுயற்சி, உயிர் பிழைப்பதற்கான உள்ளுணர்வு, போரின் கொடூரம், சுதந்திரத்தின் மீதான ஏக்கம், கனவுகளைத் துரத்துதல், மனித மனதின் எல்லைகள். இந்தப் படம், ஒரு தனிமனிதனின் அசாதாரணமான தைரியத்தையும், நம்பிக்கையையும் கொண்டாடுகிறது. பின்னர், ஹெர்சாக் இதே கதையை "ரெஸ்க்யூ டான்" (Rescue Dawn) என்ற புனைக்கதைத் திரைப்படமாகவும் இயக்கினார்.
வெர்னர் ஹெர்சாக்கின் ஆவணப்படங்கள், வெறும் தகவல்களைத் தாண்டி, மனிதகுலத்தின் சிக்கலான தன்மைகளையும், பிரபஞ்சத்தின் மர்மங்களையும் ஆராயும் ஆழ்ந்த கலைப்படைப்புகளாகும். அவை நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன, கேள்வி கேட்க வைக்கின்றன, சில சமயங்களில் நம்மை நிலைகுலையவும் செய்கின்றன.
வெர்னர் ஹெர்சாக், தனது புகழ்பெற்ற படங்களுக்காக உலகளவில் அறியப்பட்டாலும், அவர் ஒரு தேர்ந்த எழுத்தாளரும் கூட. அவரது எழுத்துகள், அவரது திரைப்படங்களைப் போலவே, மனித மனதின் ஆழங்களையும், இயற்கையின் வினோதங்களையும், வாழ்வின் விளிம்புநிலை அனுபவங்களையும் ஆராய்கின்றன. அவரது மொழியும், பார்வையும் தனித்துவமானவை.
ஹெர்சாக் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் சில குறிப்பிடத்தக்கவை:
• "Of Walking in Ice" (Vom Gehen im Eis): இது ஹெர்சாக்கின் மிகவும் பிரபலமான புத்தகங்களில் ஒன்று. 1974 ஆம் ஆண்டில், தனது நண்பரும் வழிகாட்டியுமான லாட்ட ஐஸ்னர் (Lotte Eisner) நோய்வாய்ப்பட்டிருந்தபோது, ம்யுனிக்கிலிருந்து பாரிஸுக்குப் பனிக்காலத்தில் நடந்தே சென்ற அனுபவத்தை இந்தப் புத்தகம் பதிவு செய்கிறது. இந்த நடைப்பயணம், ஒருவிதமான புனித யாத்திரையாகவும், மன உறுதியின் வெளிப்பாடாகவும் அமைந்தது. இதில் ஹெர்சாக்கின் உள்மனப் போராட்டங்களும், இயற்கையுடனான அவரது ஆழமான தொடர்பும் வெளிப்படுகின்றன.
• "Conquest of the Useless: Reflections from the Making of Fitzcarraldo" (Eroberung des Nutzlosen): ஹெர்சாக்கின் காவியத் திரைப்படமான "ஃபிட்ஸ்கரால்டோ" உருவான காலகட்டத்தில் அவர் எழுதிய நாட்குறிப்புகளின் தொகுப்பு இது. அமேசான் காடுகளில் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட எண்ணற்ற சவால்கள், மன அழுத்தங்கள் மற்றும் கலை உருவாக்கத்தின் தீவிரம் ஆகியவற்றை இந்தப் புத்தகம் அப்பட்டமாகப் பதிவு செய்கிறது. இது ஒரு திரைப்பட இயக்குநரின் மன உலகிற்குள் ஒரு ஆழமான பார்வையை வழங்குகிறது.
• "Werner Herzog: A Guide for the Perplexed" (Paul Cronin உடன் உரையாடல்கள்): இது ஹெர்சாக்குடன் பால் க்ரோனின் நடத்திய நீண்ட உரையாடல்களின் தொகுப்பு. இதில் ஹெர்சாக் தனது திரைப்படங்கள், தத்துவம், வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் கலை குறித்த தனது பார்வைகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
"The Twilight World" (Das Dämmern der Welt) (2023): அவரவர் வானம்
வெர்னர் ஹெர்சாக்கின் சமீபத்திய மற்றும் பெரிதும் பேசப்பட்ட நாவல் "The Twilight World". இது ஜப்பானிய ராணுவ வீரரான ஹிரூ ஓனோடாவின் (Hiroo Onoda) உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.
• கதைக்கரு:
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பிறகும், பிலிப்பைன்ஸ் தீவில் உள்ள லுபாங் காடுகளில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் ஹிரூ ஓனோடா போரைத் தொடர்ந்தார். போர் முடிந்துவிட்டது என்பதை நம்ப மறுத்து, தனது மேலதிகாரியின் உத்தரவு வரும் வரை தனது நிலையில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று அவர் உறுதியாக இருந்தார். காட்டில் தனிமையில், இயற்கையின் சவால்களையும், மனப் போராட்டங்களையும் எதிர்கொண்டு வாழ்ந்தார். 1974 ஆம் ஆண்டு, அவரது முன்னாள் தளபதி நேரில் வந்து உத்தரவிட்ட பின்னரே அவர் சரணடைந்தார்.
• ஹெர்சாக்கின் அணுகுமுறை:
ஹெர்சாக், ஓனோடாவை 1997 இல் டோக்கியோவில் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார். அந்த உரையாடல்களின் அடிப்படையிலும், தனது சொந்த கற்பனை வளத்தையும் பயன்படுத்தி இந்த நாவலை ஹெர்சாக் புனைந்துள்ளார். இது ஒரு வாழ்க்கை வரலாற்று நூல் என்பதை விட, ஓனோடாவின் அக உலகத்தையும், அவரது அசாதாரணமான மனநிலையையும் ஆராயும் ஒரு புனைவு படைப்பாகும். ஹெர்சாக்கின் தனித்துவமான கதைசொல்லல் பாணி, ஓனோடாவின் அனுபவத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கிறது.
• முக்கிய கருப்பொருள்கள்:
o உண்மை மற்றும் மாயை (Reality and Illusion): ஓனோடாவின் உலகம், யதார்த்தத்திற்கும் அவர் உருவாக்கிக் கொண்ட மாயைக்கும் இடையில் ஊசலாடுகிறது. போர் முடிந்துவிட்ட உண்மையை ஏற்க மறுத்து, தனது கடமையின் பெயரால் ஒரு கற்பனையான போரை அவர் தொடர்கிறார்.
o கடமை மற்றும் அர்ப்பணிப்பு (Duty and Dedication): ஓனோடாவின் செயல்கள், கடமை உணர்ச்சியின் தீவிரமான வெளிப்பாடாக அமைகின்றன. ஒரு உத்தரவுக்காக முப்பது ஆண்டுகள் காத்திருப்பது என்பது மனித மனதின் விசித்திரமான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்துகிறது.
o தனிமை மற்றும் இயற்கையுடனான போராட்டம் (Solitude and Struggle with Nature): அடர்ந்த காடுகளில் தனிமையில் வாழ்வது, இயற்கையின் சீற்றங்களை எதிர்கொள்வது, பசி, நோய் போன்றவற்றை எதிர்கொள்வது ஆகிய அடிபடையானவற்றை ஓனோடா எப்படிச் சமாளித்தார் என்பதை ஹெர்சாக் உணர்வுபூர்வமாக விவரிக்கிறார்.
o காலத்தின் சார்பியல் தன்மை (The Relativity of Time): ஓனோடாவைப் பொறுத்தவரை, வெளி உலகில் கடந்து சென்ற முப்பது ஆண்டுகள், அவரது மனதளவில் வேறுபட்ட கால அளவைக் கொண்டிருக்கின்றன.
o மனித மனதின் விளிம்புகள் (The Extremities of the Human Psyche): ஹெர்சாக்கின் பல படைப்புகளைப் போலவே, இந்தப் புத்தகமும் மனித மனதின் அசாதாரணமான நிலைகளையும், அதன் தாங்குதிறனையும் ஆராய்கிறது.
• நடை மற்றும் மொழி:
ஹெர்சாக்கின் எழுத்து நடை கவித்துவமாகவும், அதே சமயம் நேரடியாகவும் இருக்கும். "The Twilight World" நாவலில், அவர் ஓனோடாவின் மனநிலையை விவரிக்கும்போது, ஒருவித கனவுத்தன்மையையும், பதற்றத்தையும் ஒருங்கே உருவாக்குகிறார். இயற்கையின் வர்ணனைகள் மிகவும் துல்லியமாகவும், சக்தி வாய்ந்ததாகவும் உள்ளன.
• வரவேற்பு:
"The Twilight World" வெளியானதிலிருந்து பரவலான கவனத்தையும், நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. ஹெர்சாக்கின் கதைசொல்லும் திறனும், ஓனோடாவின் அசாதாரணமான கதையை அவர் அணுகிய விதமும் பாராட்டப்பட்டுள்ளன. இது மனிதனின் விடாமுயற்சி, பிடிவாதம் மற்றும் யதார்த்தத்தைப் பற்றிய நமது புரிதல்களைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு காத்திரமான படைப்பாகக் கருதப்படுகிறது.
வெர்னர் ஹெர்சாக்கின் புத்தகங்கள், அவரது திரைப்படங்களைப் போலவே, நம்மைச் சிந்திக்கத் தூண்டும், மனித அனுபவத்தின் ஆழமான மற்றும் சில சமயங்களில் குழப்பமான அம்சங்களை ஆராயும் ஒரு தனித்துவமான பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. "The Twilight World" அவரது இலக்கியப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக விளங்குகிறது.
புதிரும் பரவசமும்
வெர்னர் ஹெர்சாக், ஒரு தனித்துவமான, தவிர்க்க முடியாத கலைஞர். அவரது திரைப்படங்கள், அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களையும், விமர்சகர்களையும், சக கலைஞர்களையும் வசீகரித்தும், அறைகூவல் விடுத்தும், சிந்திக்கத் தூண்டியும் வருகின்றன. அவை, சில சமயம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும், சில சமயம் ஆழமான சோகத்தில் ஆழ்த்தும், சில சமயம் விவரிக்க முடியாத ஒரு பரவச நிலைக்கு இட்டுச் செல்லும். அவர் காட்சிப்படுத்தும் உலகம், நாம் அன்றாடம் காணும் உலகின் பிரதிபலிப்பு மட்டுமல்ல; அது கனவுகளின் உலகம், அச்சங்களின் உலகம், மனிதனின் அடங்காத ஆசைகளின் உலகம், இயற்கையின் மர்மங்கள் நிறைந்த உலகம், நாகரிகத்தின் விளிம்புகளில் தள்ளாடும் மனிதர்களின் உலகம்.
ஹெர்சாக்கின் திரைப்படங்களின் நீடித்த தாக்கம், அவை எழுப்பும் அடிப்படையான கேள்விகளிலிருந்து பிறக்கிறது. மனிதன் என்பவன் யார்? அவனது லட்சியங்களின் எல்லை என்ன? மேதைமைக்கும் பித்துக்கும் உள்ள வேறுபாடு என்ன? இயற்கையுடனான அவனது உறவு எப்படிப்பட்டது? அதிகாரம் அவனை எப்படிச் சிதைக்கிறது? கனவுகளின் விலை என்ன? இந்தக் கேள்விகளுக்கு ஹெர்சாக் எளிதான பதில்களைத் தருவதில்லை. மாறாக, தன் அசாதாரணமான கதைமாந்தர்கள், பிரமிப்பூட்டும் நிலப்பரப்புகள் மற்றும் கவித்துவமான படிமங்கள் வழியே, இந்தக் கேள்விகளை நம் மனதின் ஆழத்தில் விதைத்துவிட்டுச் செல்கிறார்.
சினிமாவின் சாத்தியக்கூறுகளையும் அதன் எல்லைகளையும் விரிவுபடுத்தியவர்களில் ஹெர்சாக் முக்கியமானவர். புனைவு, ஆவணப்படம் என்ற பிரிவினைகளை அவர் பொருட்படுத்துவதில்லை. அவருக்கு முக்கியம், தான் சொல்ல விரும்பும் "பரவசமான உண்மை"யை அடைவது மட்டுமே. அதற்காக, அவர் எந்தவொரு வழக்கமான இலக்கணங்களையும் உடைக்கத் தயங்குவதில்லை, எந்தவொரு அறைகூவலையும் எதிர்கொள்ள அஞ்சுவதில்லை. ஒரு கப்பலை மலை மீது இழுத்துச் செல்வதானாலும் சரி, எரிமலைக்குள் இறங்குவதானாலும் சரி, பனிக்கட்டிகளுக்குள் நடப்பதானாலும் சரி, ஹெர்சாக் தன் கலைக்காக எதையும் செய்யத் துணிந்தவர். இந்தத் தீவிரம், அவரது படங்களுக்கு ஒருவித தொன்ம (ஆதி) சக்தியை அளிக்கிறது.
ஹெர்சாக்கின் பார்வை, மனித இருப்பு குறித்த ஒரு ஆழமான புரிதலைக் கொண்டது. அவர், மனிதனின் இருண்ட பக்கங்களையும், அவனது பலவீனங்களையும் தயக்கமின்றிக் காட்சிப்படுத்துகிறார். ஆனால், அதே சமயம், அவனது அடங்காத கனவுகளையும், அவனது மனவுறுதியையும், அவனது தேடல்களையும் அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. அவரது கதைமாந்தர்கள் தோல்வியடையலாம், அழியலாம், ஆனால் அவர்களின் முயற்சிகள், அவர்களின் ஆசைகள், ஒருவித காவியத் தன்மையுடன் நம் நினைவில் நிற்கின்றன.
எதிர்காலத் திரைப்பட இயக்குநர்களுக்கும், கலைஞர்களுக்கும் வெர்னர் ஹெர்சாக் ஒரு வற்றாத உந்துசக்தியாக விளங்குகிறார். அவரது நிகரில்லாத மனவலிமை, அவரது தனித்துவமான பார்வை, கலையின் மீதான அவரது அசைக்க முடியாத பிடிப்பு/அர்ப்பணிப்பு, இவை அனைத்துமே புதிய தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமைகின்றன. அவரது படைப்புகள், இன்றும் ஏன் முக்கியமானவையாக இருக்கின்றன என்றால், அவை நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ளவும், நம்மைச் சுற்றியுள்ள உலகை வேறுபட்ட, ஆழமான கோணத்தில் பார்க்கவும் தூண்டுகின்றன. அவை, நம் வசதியான சிந்தனை வட்டங்களிலிருந்து நம்மை வெளியேற்றி, வாழ்க்கையின் சிக்கலான, சில சமயம் குழப்பமான, ஆனால் எப்போதும் வசீகரமான மர்மங்களை எதிர்கொள்ள அழைக்கின்றன.
வெர்னர் ஹெர்சாக்கின் குரல், காலவெள்ளத்தால் கரையாத, காவியம் பேசும் ஓர் ஆன்மாவின் ஆழத்து ஒலி. அது நம்மை, வெறும் கால்களால் அல்ல, கனவுகளால் நடக்கத் தூண்டுகிறது; புறக்கண்களால் மட்டுமல்ல, அகத்தின் விழிகளால் பார்க்கச் சொல்கிறது; செவிகளால் மாத்திரமல்ல, இதயத்தால் கேட்கப் பணிக்கிறது. உறங்கிக் கிடக்கும் கற்பனைகளைத் தட்டி எழுப்பி, நம் ஒவ்வொருவருக்குள்ளும் உறையும் "பரவசப் பேருண்மையை" அந்த ஆதி ஒளியை தரிசிக்க அழைக்கிறது. அவரது யாத்திரை இன்னும் ஓய்ந்தபாடில்லை; அவரது விழிகளின் கேமரா இன்னும் பிரபஞ்ச இரகசியங்களில் சுழன்றுகொண்டே இருக்கிறது; அவரது தாகம் தணியாத தேடல், முடிவிலியின் எல்லையை நோக்கி நீண்டுகொண்டே இருக்கிறது.
அவரது தீராத பயணத்தின் ஆற்றிலிருந்து சில திவலைகளாவது நம் மீது தெறிக்கும்போது, நம் இருப்பின் புதிர்களின் மேல் படிந்திருக்கும் திரைகள் மெல்ல விலகி, வாழ்வு என்பதன் முழுப்பரிமாணத்தை இருந்த இடத்திலேயே அறிந்து கொள்வது என்பது சாத்தியமற்றது என்பதை நாம் உணர்கிறோம். ஆயினும் அதன் புதிர்களில் இழையோடும் பரவசத்தின் உண்மை நம்மைத் தீண்டும்போது நமது எல்லைகள் விலகி அந்த எல்லையற்றதில் ஒருங்கிணைகிறோம். கலையின் வற்றாத சாத்தியங்கள் அந்த நொடியில் தோன்றி மறைகின்றன, கல்பொருசிறுநுரையைப் போன்று. அத்தகைய, வாழ்வில் எளிதில் கிட்டாத அரிய அனுபவத்திற்காக ஹெர்சாக்கிற்கு நாம் நன்றியுடைவர்களாக இருக்கிறோம்.