கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

கால் நடைகள் நமது நண்பர்கள்; பெற்றோர்களைப் போலவும், உற்றார் உறவினர்களைப் போலவும் விளங்கும் இவைகளே உழவுத் தொழிலுக்கு அடிப்படை. இவை உணவையும் பலத்தையும், உடற்பொலிவையும், இன்பத்தையும் அளிக்கின்றன. இதை அறிந்த பண்டைய பிராமணர் கால்நடைகளைக் கொல்வதில்லை.

புத்தர்.

முன்னுரையில் தனது பாடுகளையும் பெற்ற பாராட்டுகளையும் சொல்லிச் செல்லும் பச்சோந்தி, தனது பீஃப் கவிதைகள் முழுக்கவும் வேடிக்கை பார்க்கவும், சொல்லவும், விவரிக்கவுமாகவே இருக்கிறார். அவரது கவிதைகள் உருவத்தில் மட்டுமே தன்னைக் கவிதைகளாக அறிவிக்கிறது. உள்ளடக்கத்தில் விவரணைகளைத் தாண்டி வேறு எதுவாகவும் மிஞ்சவில்லை என்பதே எனது வரையறை. சொற்களை கொஞ்சம் உரசிப் பற்ற வைக்க அவருக்கு கவிதை மொழி கைகூடவில்லை. கவிதையைச் செய்யலாம். அதில் நமக்கு எந்தப் புகாரும் இல்லை. ஆனால் செய்யும் வித்தையை இப்படித்தான் செய்தேன் என ஒளிவுமறைவின்றி காட்டுவது மிகச்சிறந்த வித்தைக் கலைஞனுக்கு அழகல்ல. ஒளித்து வைப்பதில்தான் மாயாஜாலக்காரனின் வித்தையும், வாழ்க்கையும், கனவும் இருக்கிறது. பச்சோந்தி தனது கவிதை வெளியை கண்டுபிடிக்க உரையாடியவர்களாக சொல்பவர்கள் பச்சோந்தியிடம் என்ன கற்றுக்கொண்டார்கள் எனத் தெரியவில்லை. நா.முத்துக்குமாரிலிருந்து தொடங்கி கணையாழி என பல பெயர்களைச் சொல்லுகிறார். கற்றுக்கொடுத்தவர்கள் பச்சோந்திக்கு என்ன கைவரும் என அவரிடம் கண்டுபிடித்திருந்து உரையாடியிருந்தால், அவர் தன் கவிதையில் இன்னும் கொஞ்சம் தூரத்தை எட்டியிருக்கலாம் என்பதே என் நிலைப்பாடு. சகோதரத்துவத்திலும், நட்பிலும் அணைப்பைப் பெறுவது நல்லதுதான். ஆனால் பாசாங்கான அணைப்புகளின் மூலம் எதையும் கற்றுக்கொள்ள முடியாது.

பீஃப் கவிதைகளை வாசித்தேன். கவிதைகள் முழுக்க முழுக்க வேடிக்கை பார்ப்பவனின் மனநிலையில் மட்டுமே உள்ளது. செய் நேர்த்திக்காக வெற்றுச் சொல்லாடல்களை அங்கும் இங்கும் சிதற விட்டிருக்கிறார். பார்ப்பவனுக்கும் காட்சிக்கும் இருக்கும் தூரம் மட்டுமே அவரது கவிதைகளில் காணக்கிடைக்கிறது. அந்த தூரம் சற்று மங்கலான சித்திரத்தையே தருகிறது.

சி.சி.டி.வி என்பது வெறுமனே கருவியல்ல. அதிகாரத்தின் மிக மோசமான, வெட்கங்கெட்ட விசுவாசமான நாய். அனைவரையும் திருடராக்கும் அதன் குரைப்பொலி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஆனால் அதைக் கருவியாகவே பச்சோந்தி பதிவு செய்கிறார். மாறாக சி.சி.டி.வி கேமாராவின் மூலமாக உலகத்தைப் பார்ப்பவர்கள் குறித்து அவர் தன் கவிதையில் பதிவு செய்ய இடமிருந்தும் தவிர்த்துவிடுகிறார். இன்னும் சொல்லப் போனால் அது அவரது உள்ளுணர்வை எட்டவே இல்லை.

இந்த இடத்தில் வேடிக்கை பார்ப்பவர்கள் கவிதை எழுதக் கூடாதா என்கிற கேள்வியைக் கேட்கும் வாசகருக்கும், திறனாய்வாளருக்கும் நான் ஒன்றே ஒன்றுதான் சொல்ல முடியும். அவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாகவாவது மிஞ்சட்டும் என்பதுதான்.

பச்சோந்தி கற்றுக்கொள்வதில் ஆர்வமாய் இருக்கிறார் என்பது மட்டுமே அவரது கவிதைத் தொகுதியில் நான் கண்ட மிக மிக முக்கியமான அம்சம். அவரிடம் சொற்கள் இருக்கின்றன. அவற்றைக் கண்டுகொள்வதற்கு அவரது கவிமனம் இன்னும் கொஞ்சம் தயாராக வேண்டும். உதாரணத்திற்கு,

“மேலத் தெரு பெண் தூக்கில் தொங்கியதாக

செய்திவந்தது.

அவளைக் காதலித்த

பறையடிக்கும் பெருமாளின் தலையைத் தண்டவாளத்தில்

சேரியே தேடியலைந்தது அன்று.

ஆளுக்கொரு பறையைத் தூக்கிக்கொண்டு

அவசரமாய் ஓடுகிறோம்.

பறையைக் காய்ச்ச தீப்பெட்டி கேட்டு நின்றேன்

உதட்டைப் பிதுக்கிச் செல்கிறாள்

மேலத் தெருக்காரி

பின்பு

அடித்துக்களைத்த பறை

அவள் வீட்டுத் திண்ணையில் இளைப்பாறியது.

நீர் தெளித்த அவ்விடத்தை

விளக்கமாற்றால் அடித்து அடித்துக் கழுவினாள்

பறையடிக்கும் அதிர்வில் விம்மிவிம்மிப் புடைக்கும்

என் மார்பை

எலும்புச் சாற்றை உறிஞ்சுவது போலே

வெச்ச கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கிறாள்.”

(பக்கம்- 64)

இக்கவிதையில்

அவசரமாய் ஓடுகிறோம்... என்பதோடு அக்கவிதை தன் பயணத்தை முடித்திருக்க வேண்டும். கொல்லப்பட்டவனின் பேரால் பழிவாங்குவதாய்ச் சொல்லி மேலத்தெருக்காரியின் புணரும் சித்திரத்துக்குள் சென்று விடுகிறார் பச்சோந்தி. கொந்தளிக்கும் மனம் வசைகளையும், பழி தீர்ப்பையும் கொட்டுமென்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அதே சமயம் அவ்வசைகள் கவிதையாகும் பட்சத்தில் உள்ளடக்கத்திற்கேற்ப சாவுக்கவுச்சியுடனே இருக்க வேண்டுமென்பேன் நான். ஆயுதம் என்றால் அது ஆயுதம்தான். சமரசம் கூடாது. அது மொழியாக இருப்பினும் கூர்மையுடன் பாய வேண்டும்.

காமத்துக்கு சாதி கிடையாது என் தோழனே. அது சொத்துடைமைக்கு முதல் போடும் திருமண சம்பந்தத்தில்தான் தன் ஆகிருதியைக் காட்டும். அங்கு சாதியால் ஒரு ஆண் பழிதீர்க்கப்படுவதைப் போல, இங்கு நீங்கள் ஒரு பெண்ணை பழி தீர்க்கிறீர்கள். அவள் காமத்தோடு பார்த்திருந்தால் அதிலென்ன குற்றம் இருக்கப் போகிறது. அதைக் குற்றமெனச் சொல்ல உங்கள் மனம் துடிக்குமா என்ன? அவள் அப்படிப் பார்ப்பதற்கு சாதி அங்கு ஒரு தடையாய் இல்லை என்பதை உங்கள் கவி மனமும் வரலாற்றுணர்வும் அறியும் பட்சத்தில்,

“பறைச்சி ஆவதேதடா பணத்தி ஆவதேதடா

இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ

பறைச்சி போகம் வேறதோ, பணத்தி போகம் வேறதோ

பறைச்சியும் பணத்தியும் பகுத்துப் பாரும் உம்முளே.”

என்ற சிவவாக்கியனின் உடுக்கை உங்களுக்குள் ஒலிக்கும். ஒலிக்கும் உடுக்கைக்குள் உதிரும் வரலாற்றை அறிவீர்கள் நீங்கள். உங்களோடு நானும்?

மேற்கொண்டு மொழிரீதியாக அக்கவிதையை கொஞ்சம் அணுகிப்பார்த்தோமென்றால், அக்கவிதையின் மொழியும் சற்று இடறலாக இருக்கிறது. விளக்கிச் சொல்ல வேண்டுமெனில்,

“மேலத் தெருக்காரி

நாண்டுகொண்டதாக

கிசுகிசுத்தது

ஊர்

பறையடிக்கும் பெருமாளின் தலையை

தண்டவாளத்தில்

தேடியலைந்தது

சேரி

ஆளுக்கொரு பறையைத் தூக்கிக்கொண்டு

அவசரமாய் ஓடுகிறோம்.

பறையை இறுக்கிக் காய்ச்ச

நெருப்பைக் கேட்டு நின்றேன்

உதட்டைப் பிதுக்கிச் செல்கிறாள்

மேலத் தெருக்காரி

அடித்துக்களைத்த பறை

அவள் வீட்டுத் திண்ணையில் அதிர்ந்து கிடந்தது

நெருப்பை மறுத்த கை

நீர் தெளித்து

அவ்விடத்தை விளக்கமாற்றால்

அடித்து அடித்துக் கழுவிக்கொண்டிருந்தது

கண்களோ

பறையடித்துத்  துடிக்கும்

என் மார்பை

எலும்புச் சாற்றை உறிஞ்சுவது போலே

பார்த்துக்கொண்டே இருந்தது.”

இவ்விடத்தில் பார்த்துக் கொண்டே இருக்கும் பெண் திருமணம் ஆனவளாயிருந்தால் இங்கு நான் சொல்லிய சேதி பொருத்தமாக இருந்திருக்கும். இல்லையேல் தூக்கிட்டுச் சாவதில் இன்னொரு பெண்ணாக இருப்பாள். அதுகுறித்து உங்களது கவி மனம் சொல்வது என்னவாக இருக்கும்? இன்னும் ஒன்று சொல்வேன் நாண்டுகொண்டவளில் குரல்வளையில் உறுமும் பறை குறித்தும் எழுத இக்கவிதையில் இடமிருக்கிறது. எழுதியிருக்கலாம். இது எதிர்பார்ப்புகள்தான். உங்கள் கவிதையின் களத்தை சற்று தள்ளி நின்று காண்பதுதான்.

கவிதைகளை அதன் துறை சார்ந்தவர்களிடம் கொடுத்து தணிக்கை (Editing) செய்யும் மரபு இன்னும் தமிழுக்கு வாய்க்கவில்லை. அதை இங்கு ஒரு பெரும்பாவமாகவே எழுத்தாளர்கள்- கவிஞர்கள் கருதுகிறார்கள். கிட்டத்தட்ட ‘என் எழுத்துக்கு நான்தான் முதலாளி’ என்பதைப் போலவே அது பார்க்கப்படுகிறது. உண்மையில் அது அவ்வாறில்லை. அது மொழியை கூர்மை செய்யவும், தேர்ந்தெடுத்த விசயம் குறித்தான பதிவில் அதன் பாய்ச்சல் சரியாக சென்றிருக்கிறதா என்ற தடங்களை உற்றுக் கவனிப்பதற்கும் உதவுகிறது. பச்சோந்தி அது குறித்தும் கொஞ்சம் யோசிக்கலாம்.

செய்தி சொல்பவர்களின் பாவனைகளையும், வேடிக்கை பார்ப்பவர்களின் மனநிலையையும் தள்ளிவிட்டு ரத்தமும் சதையுமாக அதன் அர்த்தங்களைக் கண்டுபிடிக்க பச்சோந்தி நிச்சயம் எத்தனிப்பார் என நம்புகிறேன். “என்னை நானே சுயதணிக்கை செய்கிறேன். என்னை நானே மறுதலிக்கிறேன். இன்னும் ஒன்று செய்யாதது போலத்தான் உள்ளது. இனி வரும் காலங்களில் யாரும் எழுதாதவற்றை எழுதுவேன்” என்று முன்னுரையில் அவரே கூறியது போல் அவரது பிடிவாதம் அவரை உறங்கவிடாது என்பதைப் புரிந்து கொள்கிறேன். அவரது தேடலும் அத்தகையதே. அதே சமயம் சில விமர்சனங்கள், பற்கடிப்புக்களைக் கூட சகியாத ஒருவராகவும் அவர் தன்னை முன்னிருத்துகிறார். அதன்பொருட்டு அவர் தன்னை அழிக்கும் அளவுக்குச் சென்றதாகவும் பதிவு செய்கிறார். அதைத் தவிர்த்துவிட்டு அதற்கான வீரியத்தை அவர் தன் கவிதையில் வரவைக்க வேண்டும். அவரால் முடியும். இது ஆருடம் அல்ல. அவரது தரமான பிடிவாதத்தின் மேல் நான் வைத்திருக்கும் இயல்பான மரியாதை.  இன்னும் ஒன்று, எங்கும் தங்காத அவரது மனநிலை அவரது படைப்பூக்கத்துக்கும் தனித்தன்மைக்கும் வழிவகுப்பதாக தான் உணர முடிவதாகக் கூறுகிறார். இது வெறும் இலக்கியகாரானாக அவர் உணர்வற்றுச் சொன்ன வரிகள் என்றே எண்ணுகிறேன். இந்த மனநிலையை வைத்துக்கொண்டு மாட்டுக்கறிக்காகக் கொல்லப்படும் மனிதர்கள் குறித்த பிரச்சினையை அவரால் அணுகியிருக்க முடியாது. பச்சோந்தி மக்களோடும் அவர்களது பாடுகளோடும் இருக்கவே விரும்புவதாகவே அவரது கவிதைக்கான கச்சாப் பொருட்கள் அறிவிக்கிறது. அவர் அவ்வாறே இருக்க வேண்டும் என நானும் நம்புகிறேன்.

அவரது கவிதைகளுக்கான தொடங்கு முகமாக, ஏன்? அவரது கவிதைகள் குறித்து விவாதிக்கவுமாக அவர் எழுத விரும்பும் கவிதைகளின் முன்னோடியும், எவரும் எழுதமுடியாத கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பவனுமான என்.டி.ராஜ்குமாரை அறிமுகம் செய்து வைக்கிறேன்.

பச்சோந்தி நீங்கள் உழ விரும்பும் வயலில் அறுவடை முடித்து வியர்வையோடு காத்திருக்கும் அவனிடம் உரையாடுங்கள். விளைச்சல் குறித்தும், அதற்கு முன்னதாக உழுவது குறித்தும். அவன் உங்களுக்கு பசு மற்றும் பன்றி இறைச்சியோடு பரிமாறுவான். தொழில்முறையில் அவன் ஆசானும் கூட.

“பரந்து மேய்ந்து தெருவோரம் பேண்டு வைத்த

காய்ந்த ரொட்டியைத் தின்று

குப்பைத் தொட்டியில் கிடக்கும் விலை உயர்ந்த

தூமைத் துணியை மென்று அசைபோட்டு

குண்டி கழுவிப் போட்ட

தேங்கிக் கிடக்கும் நீர் குடித்துச் சென்றது கோமாதா.”

இது என்.டி. ராஜ்குமாரின் கவிதைதான். செல்க பச்சோந்தி... அவனருகே சென்றமர்க. ஆசிரியன் அவன்.  அவ்வளவே. தார்க்குச்சி இருப்பினும் அது கவிதையிலான ஒன்றாகத்தானிருக்கும்.

எழுக புலவ.

உங்களுக்கு என் அன்பு முத்தங்கள்.

பீஃப் கவிதைகள் - பச்சோந்தி 
நீலம் வெளியீடு, பக்கங்கள் :128, விலை:150

போர் சார்ந்த கதைகளை இலக்கியப் புனைவுகளாக மாற்றும்போது, மிக ஆழமான கவனம் தேவை. வெறுமனே ஒரு கதையைச் சொல்லும் சாகசங்களில் இறங்கிவிடக் கூடாது.

சம்பவங்களை ஒருங்கிணைக்கும்போது உருவாகும் கதையாடல் “ஒரு வீரத்தின் கதை”யாக மாறிவிடக்கூடாது .

கட்டளையிடும் நபர்களைவிட, ஒரு சிப்பாயைப் “பாதிக்கப்பட்டவர்” என விவாதிப்பதில் கடினமான எண்ணம் கொண்ட பார்வை அவசியமானது. அது தவறவிடப்படும் தருணங்களில் ஏதோ ஒன்றை மகிமைப்படுத்தும் இழைகள் துருத்திக்கொண்டு வெளியே தலைகாட்டிவிடும்.

யுத்தத்தை நினைவுகூர்வதில் ஏக்கம் மற்றும் உணர்ச்சிகளின் அபாயம் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். இதுவே, ஒரு நாவலினை உருவாக்கப் பாடுபடும் எழுத்தாளர் அதிகக் கவனத்தைச் செலுத்த வேண்டிய இடம்.

எழுத்தாளர் நினைவு கூர்வது குறித்துச் சந்தேகம் எழுப்புவதற்கு வாய்ப்புகளை அந்த நாவல் வழங்க கூடாது. எழுத்தாளர் நினைவுகளை வடிவமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அந்த நினைவுகளைத் தொகுத்துச் சிந்திக்கும்போது உருவாகும் மையக் கதையோட்டம் சந்தேகங்களைத் தர முயலக்கூடாது.

இது போர் என்ற உரிமைக்கும், உரிமைமீறல்களுக்கும் இடையிலான சிக்கலான அம்சங்களால் பின்னப்பட்டிருக்கும் விசயம். ஆகவேதான், போர் குறித்த எழுத்துக்களுக்கு இத்தனை தேவைகளும் இருக்கின்றன.

போர் அனுபவத்தின் சாராம்சத்திற்கு வருவதற்கு, நினைவுகள் மிக நெருக்கமானவை என்பதாலேயே சாத்தியமாகிறது. அந்தச் சாத்தியங்கள் புனைவையும், எதார்த்தத்தையும் ஒன்றிணைக்கும் புள்ளிகளின் அவசியங்களை எளிதில் கண்டடைகிறது. அது நினைவுகளாலேயே சாத்தியப்படும் ஒன்று. இந்தத் தருணத்தில்தான், போர் குறித்த நாவலில் முன்வைக்கப்படும் வரலாற்று ரீதியிலான குறிப்புக்களையும், அதை நெருங்கும் தகவல்களையும் தனித்தனியே வாசிக்கத் துாண்டுகிறது.

எதார்த்தங்களாக ஒரு புறமும், புனைவாக மறுபுறமும் வாசிக்க வழியேற்படுத்தித் தருகிறது. இப்படியாக ஏற்படும் வழி என்பது, நாவலில் பொதிந்திருக்கும் நினைவுகளை ஒருங்கிணைத்து வாசிக்கும் முறையில் வெளிப்பட்டு விடுகிறது.

நாவலில் அடுக்கப்படும் நினைவுகளை நாவல் வளர்த்துச் செல்லும் திசையில், அதன்பாட்டிலேயே விட்டுவிடும்போது, திரட்சியுறும் மையக் கதையாடல் ஏதோ ஒரு சாய்வுகொண்ட அரசியல் தளத்தை உருவாக்கிவிடுகிறது. அதுதான் நான் முன்பே சொன்ன அபாயத்தை விளைவிக்கிறது.

‘இச்சா’ போர் சார்ந்த நினைவுகளைக் கவனமின்றிப் பதிவுசெய்த ஒரு பிரதி. ஈழத்தின் அநேக நாவல்கள் இந்த வகையானவைதான்.

போர்ப் பேரழிவின் அனைத்து மட்டங்களிலும், நிலைகளிலும் மனித அனுதாபத்தின் நிலை புனைகதைகளில் பொருத்தமற்றது. அனுதாபத்தைக் கடந்த ஒரு பார்வைதான் அவசியமானது. ஏனெனில், போரில் பங்குபற்றிய அனைத்துத் தரப்பும் யோக்கியமற்றவைதான் இல்லையா?

ஒப்பீட்டளவில் சிறுபான்மையான ஒரு மக்கள் கூட்டத்திற்கு என்ன நடக்கிறது என்றோ, அது போரில் ஈடுபடும் போது எந்தவகை நிலவரங்களைக் கடைப்பிடிக்கிறதென்றோ ஷோபா சக்தியின் “இச்சா“ நாவல் என்றழைக்கப்படும் பிரதி ஆராயவில்லை. ஒரு பெரிய, அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட அரசாகத் திரட்சியுற்று உலகளாவிய ரீதியில் ஏற்கப்பட்ட ஒரு நாட்டின் மக்கள் கூட்டம், பலவீனமான சிறுபான்மை மக்கள் கூட்டத்தினையும், அவர்களிடம் தோற்றம் பெற்றிருக்கும் உலகளவில் இன்னும் அங்கீகாரம் பெறாத ஒரு இராணுவக் கட்டமைப்பையும் அழிக்க நினைத்துச் செயற்படும் முயற்சிகளை எப்படி எதிர்கொள்கின்றது என்றோ, அதற்காகத் தமது மக்கள் கூட்டத்தை இரு தரப்பும் எப்படிப் பாவிக்கிறது என்றோ இந்த நாவல் என அழைக்கப்படும், இச்சா எனும் பிரதி ஆராயவில்லை.

போரினால் பாதிக்கப்பட்டு ஈழத்தில் இருக்கும் ஏமாற்றங்கள், நன்மைகள் பற்றிய சாத்தியங்கள் குறித்தும் இந்தப் பிரதி கவனங்கொள்ளவில்லை. ஒரு சிப்பாய் ஒரு சிவில் உடலில் வசிப்பது பற்றிக்கூட இந்தப் பிரதி கவனங்கொள்ளவில்லை. சாதாரணமான ஒரு பெண் சிப்பாய் உடலினுள் புகுந்து உருமாறும் சராசரிப் பெண்ணின் விளையாட்டுகளைக் கூட இந்தப் பிரதி கவனத்திற்கொள்ளவில்லை. ஆனால், ஒரு பெண் கதை சொல்வதாக இந்தப் பிரதி நகர்கிறது. உலகளவில் போரைப் பெண்ணின் கோணத்திலிருந்து வியாக்கியானம் செய்த நாவல்கள் அதிகமில்லை. மிகக் குறைவாகவே அவை உள்ளன. ஷோபாசக்தியின் இச்சா நாவலின் கதையை ஒரு பெண் சொல்வதாகக் கூறினேனே தவிர, அது பெண் கதாபாத்திரத்தின் கண்களால் போரைப் பார்க்கத் துாண்டும் வழிமுறைகளைக் கொண்ட ஒரு கதை சொல்லலாக வளர்த்தெடுக்கப்படவில்லை. வெறுமனே ஒரு பெண் கதையைச் சொல்லுதல் என்று சுருங்கிவிடுகிறது. பெண் கதாபாத்திரத்தின் கண்களால் வாசகர்கள் போரைப் புரிந்துகொள்வதாக அமைந்திருந்தால் இருக்கக்கூடிய பெண்ணியப் பார்வையின் நுணுக்கமான நோக்குகள் இந்தப் பிரதியை நிறைத்திருக்கும்.

பெண் போராளிகளைப் போராட்ட இயக்கம் எப்படித் தொந்தரவு செய்தது, பெண் என்ற உடற்சார்ந்த பொருளை எப்படி அணுகியது என்பன தொடங்கி மிக விரிவான சம்பவங்களின் தொகுப்பாக இந்த நாவல் முக்கியப்பட்டு எழுந்து நின்றிருக்கும். ஆனால், அவை எதுவும் இந்த நாவலில் இல்லை. அப்படி இருந்திருக்குமானால், போரின் போது, அல்லது போராட்ட இயக்கமொன்றில் பெண்ணாக இருப்பதற்கான சவால்களையும், நெருக்கடிகளையும் புரிந்துகொள்வதற்கான சிறந்த இலக்கியப் பிரதியாக அது மாற்றமடைந்திருக்கும். அவை எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. போரில் பங்கேற்கும் பெண்ணாக இருப்பதன் சவால்களைச் சிறந்த இலக்கியமாக உருவாக்கிய நாவல்கள் சிலதை இங்குச் சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது. இது ஷோபா சக்தியின் அடுத்த நாவலுக்கான துாண்டுதலாக அமைந்துவிடலாம். அப்படியேனும் அவர் போன்ற முக்கியமான கதைசொல்லிக்கு உதவாமல் போனால் நான் ஒரு இலக்கியவாதியாக இருக்க முடியாது அல்லவா? Sand Queen என்ற Helen Benedict எழுதிய நாவலும், One Hundred and One Nights என்ற Benjamin Bucholz எழுதிய நாவலும், The Watch என்ற Joydeep Roy-Bhattacharya எழுதிய நாவலும் சமகாலத்தில் முக்கியமான நாவல்கள். இந்த நாவல்கள் பெண்ணிய நோக்கில் போர்க் காலத்தைக் குறித்து வெவ்வேறு கோணங்களில் பேசுபவை.

ஷோபா சக்தியின் இச்சா நாவலில் ஒரு பெண் சிப்பாய் கதை சொல்வதாக இருக்கிறதே தவிர, வேறு ஒன்றும் அதில் முக்கியமானவையாகக் கவனத்தை முன்தள்ளவில்லை. ஓர் ஆண் எழுதினால் எப்படி இருக்குமோ (ஆண்மையப் பார்வையை அதிகமாகவும், பெண்மையச் சிந்தனையை ஆதரிப்பதாகக் காட்டிக்கொள்ளும் ஓர் ஆண் என எடுத்துக்கொள்ளவும்) அப்படி அமைந்துவிடுகிறது. இந்நாவல் வீரகேசரி (ஈழத்து நாளிதழ்களில் ஒன்று) தொடர்கதைகளின் சாயலை அதிகம் கொண்டிருக்கிறது.

இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில் இருக்கும் வாய்ப்பான, ஒரு பொருளை வாங்கும் முன்பு அதைப் பயன்படுத்திப் பார்க்கும் முறைமை என்பது புத்தகங்களுக்கும் இருக்குமானால், நிச்சயமாக அதிகமான புத்தகங்கள் வாங்கப்படாமலே வீசப்பட்டுவிடும். அப்படி என்னால் வீசப்படும் புத்தகங்களில் இச்சா நாவலும் அமைந்திருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அதற்கான வாய்ப்பு இல்லாத காரணத்தினால் இச்சா நாவல் பாக்கியம் செய்த ஒன்றுதான்.

நாவல் என்று அழைக்கப்படும் இச்சா என்ற பிரதி குறித்து எனது பார்வைகளை முன்வைப்பதற்கு முன்பு அதன் கதைச் சுருக்கத்தைச் சொல்லிவிடுவது நல்லது எனக் கருதுகிறேன். அதனோடு இச்சா பிரதியின் பிரதானமான கதை ஓட்டம் அதாவது, அதன் மையத்தில் உள்ள ஐடியா வேறொருவருடையது என்ற விமர்சனங்களும் பரவலாக வெளிவந்திருக்கின்றன. சேனன் என்ற மற்றுமோர் ஈழத்து எழுத்தாளரின் கதை ஐடியாவை ஷோபா சக்தி ஆட்டையைப் போட்டுவிட்டதாகச் சேனனே தனது நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, நாவலின் மையமாக முன்னெடுக்கப்படும் “பெண் போராளி ஒருவரின் கதையைச் சொல்லும் கோணம்” என்ற ஐடியாவைதான் ஷோபா திருடியதாகச் சொல்கிறார். இந்த ஐடியாவைக் கொண்ட சேனனின், “சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்” என்ற நாவல் இன்னும் கைவசம் வந்து கிடைக்கவில்லை. கிடைத்ததும் அவை குறித்து அலசலாம். நிச்சயமாக அது குறித்தும் ஒரு கட்டுரையை எழுதுவேன்.

பெண் போராளி கதை சொல்லியாக அமைந்த கோணத்தில் நாவலின் மைய ஓட்டத்தை யாரும் தேர்வு செய்யலாம், ஆனால், அந்தக் கதை சொல்லியான பெண் போராளி வெளிப்படுத்தும் அனுபவங்களும், சம்பவங்களும் இரண்டு நாவல்களுக்குமிடையே உருவாக்கும் ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் போன்ற கதைச் சம்பவங்களிலிருந்தே இந்த மைய ஐடியா திருட்டா இல்லையா என்பதைப் புரிந்துகொள்ளும் வாசிப்பை முன்னெடுக்க முடியும். எனவே, சேனனின் நாவல் வரும்வரை காத்திருப்பதுதான் நல்லது. எனக்கு அந்த நாவல் அனுப்பப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. என்னிடம் இன்னும் வந்து சேரவில்லை.

ஷோபா சக்தியின் இச்சா நாவல் பிரதானமான இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. வெள்ளிப்பாவை என்ற சிறுமியாக இருந்து, ஆலா என்ற பெண்போராளியாக உருமாறி, கரும்புலியாகப் பதவி உயர்வு பெற்று ஒரு தற்கொலைச் சம்பவத்தில் இயக்கக் கட்டுப்பாட்டை மீறி, பின்னர் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு, இந்திய மற்றும் இலங்கைப் புலனாய்வாளர்களால் விசாரிக்கப்பட்டு இலங்கை நீதிமன்றத்தால் முன்னுாறு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வரையான காலம்.

இரண்டாவது பகுதி, அந்தச் சிறையிலிருந்து புலம்பெயர் ஊடகவியலாளரான ஒரு புத்திஜீவியால் மீட்கப்பட்டுத் திருமணம் முடித்து ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டு, கணவராலேயே சித்திரவதை செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் தனது குழந்தையோடு எங்காவதொரு நாட்டுக்குத் தப்பிச் செல்லும் முயற்சியில் கொல்லப்பட்டு இறந்துபோகும் வரையான காலம். முதலாவது காலம், ஆலா என்ற பெண் போராளியின் எதார்த்தமான காலமாகவும், இரண்டாவது காலம் ஆலா என்ற பெண் போராளியின் புனைவான காலமாகவும் நாவல் முன்வைக்கிறது. இதை வெளிப்படையாக நாவல் குறிப்பிடாது போயினும், ஒரு தேர்ந்த வாசகரால் புரிந்துகொள்ள முடியும்.

இந்த இரண்டு காலத்திலும் நடைபெறும் நிகழ்வுகளால் பிணைந்திருப்பதுதான் இச்சா நாவலின் கதையாடல். இந்த இரண்டு பகுதிகளைச் சம்பவங்களாக உருவாக்கும் போது, ஷோபாசக்தி கொஞ்சம் பலவீனமான சம்பவங்களையும், அடிப்படையான தவறுகளையும் முன்வைத்தே நகருகிறார். அவர் உருவாக்கும் நாவலுக்கான மையக் கதையின் ஓட்டம் நகரும் அச்சு கதைகளைக் கோர்ப்பதில் காட்டிய ஆர்வத்தை, மையக் கதையோட்டத்தை உருவாக்குவதில் வெளிப்படுத்தவில்லை. இதை, இந்த நாவலைக் குறித்து எழுதிய எவரும் சுட்டிக்காட்டவில்லை என்பதையும் இங்குக் குறிப்பிட வேண்டும். தமிழ் நாட்டைச் சேர்ந்த, “ஈழ உணர்ச்சியும் அனுதாபங்களும்” மூளையில் நிரம்பி பலரால் காணமுடியாது என்பதும் முக்கியமான விசயங்கள். கட்டுரையின் பிற்பகுதியில் நான் இது குறித்து விமர்சனங்களைப் பதியும்போது நீங்கள் வாசிக்கலாம்.

நாவலின் இரண்டு பகுதிகளை முன்னமே குறிப்பிட்டிருக்கிறேன். இப்போது கதைச் சுருக்கத்திற்கு வரலாம்.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இலுப்பங்கேணி என அழைக்கப்பட்டு, சிங்களக் குடியேற்றத்தின் காரணமாக, “மடுப்பகம்” எனப் பேர் மாற்றப்பட்ட அறுபது குடும்பங்களே வசித்து வந்த ஒரு கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில் வெள்ளிப்பாவையாகப் பிறந்த ஒரு பெண், தனக்குக் கிடைத்த வாய்ப்பாக ஆறாம் தரம் வரை சிங்கள மொழியில் ஆரம்பப் படிப்பை மேற்கொண்டு, பின்னர்த் தமிழ்மொழியில் இலுப்பங்கேணி ஊரிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள அம்பாறை என்ற சிங்கள நகரத்தில் உள்ள ஒரே ஒரு தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்கிறாள். (இந்தப் பாடசாலையில்தான் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் கல்வி கற்றார். இந்தத் தகவல் ஷோபா சக்திக்குத் தெரிந்திருந்தால் அதையும் இணைத்திருப்பார்). இந்தக் கிராமத்திற்கு அருகிலிருந்த ஊறாப்பிட்டிய எனும் சிங்களக் கிராமத்திலிருந்து சிங்களக் குடும்பங்கள் முப்பத்தி ஐந்தை அவர்களின் ஊருக்குள் புலிகள் புகுந்து கொன்றதினால், அவர்கள் வெளிவந்து இலுப்பங்கேணியைத் தாக்குகின்றனர். அதன் பின் இலுப்பங்கேணி நான்கு தமிழ்க் குடும்பங்களாகச் சுருங்கிப்போகிறது.

யுத்த நிறுத்த காலம் வருகிறது. வெள்ளிப்பாவையின் அம்பாறைத் தமிழ்ப் பாடசாலைக்கு இயக்கத்திற்கு ஆட்சேர்க்கும் இரண்டு பெண்கள் வந்து உரையாற்றுகிறார்கள். அதைக் கேட்டு சில பெண்கள் இயக்கத்தில் இணைகின்றனர். அப்போதும் வெள்ளிப்பாவை இயக்கத்தில் இணைந்து கொள்ளவில்லை. இலுப்பங்கேணி என்ற கிராமம், பட்டிப்பளை ஆறு எனப் பேர் போன ஆற்றின் வலது கரையோரத்தில் ஆற்றின் அருகாக அமைந்திருக்கிறது. அந்த ஆற்றைத் தமிழர்கள் களியோடை ஆறு எனக் காலங்காலமாக அழைத்து வருகின்றனர். இன்று அதன் உத்தியோகபூர்வமான பெயராகக் கல்லோயா என்ற சிங்களப் பெயரால் அழைக்கப்படுகிறது. இதுவும் சிங்களக் குடியேற்றத்தின் காரணமாக வந்தது.

வெள்ளிப்பாவை தனது பதினைந்தாம் வயதில் பத்தாம் ஆண்டுப் படிக்கும் காலமான 2004 வைகாசி பூரணை அன்று, (2004.06.03 ஆங்கில மாதப்படி இன்றுதான் அந்தப் பூரணை தினம் வருகிறது) அம்பாறையில் கோவில் திருவிழாவில் கலந்துவிட்டு தம்பியோடு சைக்கிளில் வரும்போது, காட்டுப் பகுதியில் மறைந்திருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய சிலரைச் சந்திக்கின்றனர். அதில் ஒரு சிறுவன் கடும் சோர்வாக இருக்கிறான். இவர்களிடம் தண்ணீர் கேட்கிறார்கள். வீடுவந்து சேர்ந்து தண்ணீரும், தேநீருமாக எடுத்துச் சென்று அந்தச் சிறுவர் புலிப் போராளிகளுக்கு வெள்ளிப்பாவையின் (பிறகு ஆலாவாக மாறும் வெள்ளிப்பாவை) தம்பி கொடுத்துவிட்டு வருகிறான். இந்தச் செய்தியை கஞ்சா அடித்த போதையில், தம்பி அவனது நண்பர்களான ஊர்காவற்படையைச் சேர்ந்தவர்களிடம் சொல்லி விடுகிறான். காலையில் வெள்ளிப்பாவையின் தம்பி, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் செத்துக் கிடக்கிறான். அவனைக் கொன்றது ஊர்காவற்படையைச் சேர்ந்த தம்பியின் நண்பர்கள்தான் என வெள்ளிப்பாவை அறிந்துகொள்கிறாள். தாங்க முடியாத வேதனையிலும், கோபத்திலும் ஊர்காவற்படை சிப்பாயை ஏசுகிறாள். உன்னைப் பல துண்டுகளாக வெட்டிப்போடுவேன் என்ற வார்த்தைகளும் வெளிவந்து விடுகிறது.

அடுத்த நாள் ஊர்காவற்படையினர் வெள்ளிப்பாவையைப் பிடித்துக்கொண்டு போகிறார்கள். கொல்லப்பட்டுவிடுவோம் என்ற எண்ணத்தில் போகும்போது, வெள்ளிப்பாவையும், தம்பியும் உதவி செய்த சிறுவர் புலிப் போராளி வருகிறான். துப்பாக்கியால் ஊர்காவற் படையினர் அனைவரையும் சுட்டு வீழ்த்துகிறான். அதன் பின்னர், அம்பாறையில் கடை வைத்திருக்கும் ஒருவரிடம் காட்டுவழியாக வெள்ளிப்பாவை சென்று சேர்கிறாள். அவரின் ஏற்பாட்டில், சம்மாந்துறையைச் சேர்ந்த ஒய்த்தாமாமி என்ற முஸ்லிம் பெண் ஒருவரோடு, முஸ்லிம் பெண்ணாக மாறுவேடமிட்டு திருகோணமலைக்குத் தனது சொந்தக்கார வீட்டுக்குச் செல்கிறாள்.

அங்கு நல்ல நிலையில் வெள்ளிப்பாவை கவனிக்கப்படவில்லை. அந்த வீட்டிலுள்ள முதியவர் ஒருவர் (இவர் வெள்ளிப்பாவை சிறுமியாக இருந்தபோதும் பாலியல் தொந்தரவுகளைச் செய்தவர்தான்) பாலியல் தொந்தரவு செய்கிறார். தடுமாற்றத்தில் வெள்ளிப்பாவையின் கை இடித்துவிடுகிறது. அந்த முதியவர் கிணற்றினுள் விழுந்து விடுகிறார். அவரைக் காப்பாற்றுவதற்கான பதட்டத்தில் துணைக்கு ஆள்தேடி வீதிக்கு ஓடிவருகிறாள். அந்த நேரம் பார்த்துத் தமிழ் சினிமாவில் ‘ஹீரோக்கள் என்ட்ரி’ ஆவதைப்போல, இரண்டு பெண் போராளிகள் மோட்டார் சைக்கிளில் வருகிறார்கள். வெள்ளிப்பாவையின் பதட்டத்தைப் பார்த்துவிட்டு ஏதோ தப்பு நடந்திருக்கிறது என ஊகிக்கிறார்கள். வெள்ளிப்பாவை நடந்ததைச் சொல்லி முதியவரைக் காப்பாற்ற அழைக்கிறாள். வந்த பெண் போராளிகள் கிணற்றுக்குள்ளேயே வைத்து, ஜேம்ஸ் போண்ட் ஸ்டைலில் முதியவரைப் போட்டுத் தள்ளுகிறார்கள்.

வெள்ளிப்பாவைக்கு “ஆலா” எனப் பெயர் மாற்றப்படுகிறது. அன்றிலிருந்து புலிப் போராளியாக மாறிவிடுகிறாள். ட்ரெயினிங் காலத்தில் அனைத்திலும் சிறந்தவளாக வருகிறாள். ஒருமுறை சிங்களத்திலிருந்த ஒரு செய்தியை மொழிபெயர்த்ததின் காரணமாகக் கிளிநொச்சியிலிருந்து புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர் ஒருவரால் பாராட்டு மடலொன்று வருகிறது. அதன் பின் ஆலா என்ற பெண் போராளிச் சிறுமி, கிளிநொச்சியில் இயங்கும் புலி முக்கியஸ்தரின் தலைமைச் செயலகத்தில் பணியில் அமர்த்தப்படுகிறாள். அந்தத் தலைமைச் செயலகத்தின் பொறுப்பாளரை அவள் காதலிக்கிறாள். ஒரு நாள் அதைக் கவிதையாக அவரிடம் வெளிப்படுத்திவிடுகிறாள். அவரோ மீண்டும் அவளைப் பழைய இடத்திற்கே அனுப்பிவிடுகிறார். 2006ம் ஆண்டுச் சமாதானம் முறிவடைந்து புலிகளுக்கும் அரசுக்கும் போர் ஆரம்பிக்கிறது. ஒரு போரில் கலந்துகொண்ட ஆலாவுக்கு வயிற்றில் செல்லின் இரும்புத் துண்டு ஒன்று சிக்கிவிடுகிறது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறாள்.

கிளிநொச்சி புலித்தலைமைப் பொறுப்பாளரால் ஆலாவுக்கு “கரும்புலி” எனப் பதவியுயர்வு வழங்கப்பட்டுத் தற்கொலைப் போராளியாக மாற்றப்படுகிறாள். அதற்காகத் தயார்படுத்தப்பட்ட பின்பு, கொழும்புக்கு வருகிறாள். அங்கு ஒரு சிங்களவரின் பார்மசியில் தொழிலில் இருக்கிறாள். அவளுக்கான வேலை மிக வேகமாகவே வந்துவிடுகிறது. மேம்பாலம் ஒன்றின் திறப்புவிழாவில் தற்கொலை செய்து வெடித்து அதில் கலந்துகொள்ளும் அரச அமைச்சர்களையும், இராணுவ முக்கியஸ்தர்களையும் கொல்வதுதான் புலிகள் இயக்கத்தால் கரும்புலி ஆலாவுக்கு வழங்கப்பட்ட கண்ணியமான வேலை. எதிர்பாராதவிதமாக அந்த மேம்பாலத் திறப்புவிழாவிற்கு, வெளிநாட்டு துாதுவர் ஒருவர் வந்துவிடுகிறார். எனவே, அந்த இடத்தில் வெடித்துச் சாகக்கூடாது. அருகில் இருந்த பாலத்தின் சுவர்களில் மோதி, தனியாகவே வெடிக்க வேண்டும். வேறு பாதிப்புகள் வரக்கூடாது எனப் புலிகள் இயக்கத்தின் உயர்பீடம் முடிவெடுக்கிறது. ஆனால், போரில் ஒரு மாட்சிமை தாங்கிய மரணத்தைக் கனவு கண்டிருந்த கரும்புலி ஆலாவுக்கு இது பிடிக்கவில்லை. தற்கொலை செய்து வெடிக்காமல் அரச படையிடம் சரணடைந்துவிடுகிறாள்.

அதன் பின் விசாரணைகள் என்ற பேரில் நடைபெறும் சித்திரவதைகளும், மரணதண்டனை வழங்கப்பட்டு முன்னுாறு ஆண்டுச் சிறைத்தண்டனைக்குள்ளும் வருகிறாள். சிறையில் இருக்கும் தருணத்தில் புலிகள் இயக்கமே அழிந்து விடுவதை அறிந்துகொள்கிறாள். தான் வெடிக்காமல் சரணடைந்ததன் காரணமாகத் தப்பித்த வெளிநாட்டு அதிகாரி சிறையில் ஆலாவை சந்திக்க வருகிறார். அவரின் கூடவே மொழிபெயர்ப்பாளராகப் புலம்பெயர் ஊடகவியலாளரான புத்திஜீவியும் வருகிறார். அந்தப் புத்திஜீவி, ஆலாவைத் திருமணம் முடிக்க விரும்புகிறார். முன்னுாறு ஆண்டுச் சிறைத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வாமன் என்ற ஊடகவியலாளரோடு கற்பனையான ஒரு நகரத்துக்குப் போகிறாள். போகும் வழியில் விமானம் மாறும் இடைவெளியில், மத்திய கிழக்கில் ஒரு ஹோட்டலில் வைத்து தனது கணவனான வாமனால் மோசமான உடலுறவுக்குள் சிக்குகிறாள். மூன்றுமுறை நடைபெறுகிறது. அதன் பின் அவர்களுக்கிடையில் எப்போதும் உடலுறவு நடைபெற்றதில்லை. இதனால், கர்ப்பமுற்று ஓர் ஆண் குழந்தையைப் பெறுகிறாள்.

ஊடகவியலாளர் வாமன், முன்னாள் போராளியைத் திருமணம் முடித்து மீட்டு வந்ததாகத் தான் நடாத்தும் வானொலியில் அடிக்கடி பேசுகிறார். பிற புலம்பெயர் சமூகத்தை நோக்கி விமர்சனங்களையும், அவர்களின் பாராட்டுகளையும் பெறுகிறார். ஆனால், ஆலாவைச் சிறையில் வைத்திருப்பதைப்போல் மோசமாக நடத்துகிறார். குழந்தையைப் பிரித்தெடுத்துவிட்டு ஆலாவை நாட்டுக்கு அனுப்புவது என்ற தீர்மானத்தில் தந்திரமான வழிகளில் செயற்படுகிறார். கடைசியில் அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறார். அந்தப் புலம்பெயர் கற்பனையான நகரத்தில், யாரோடும் ஆலாவுக்கு உறவுகள் இல்லை. அங்குத் தற்செயலாக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வொன்றில் சிறிய ரகத் துப்பாக்கி ஒன்று கிடைக்கிறது. அவளுக்கு ஒரு தைரியம் வருகிறது. இறுதி வாரத்தில் சுதந்திரமாகத் துப்பாக்கியோடு அந்தக் கற்பனையான நகரத்தில் தனியாக வெளியேறி நடமாடிய போதும், தனது பிரச்சினைகளை யாரோடும் சொல்வதற்கோ, அந்த அரசிடம் எடுத்துக் கூறுவதற்கோ, அல்லது வாமனின் வானொலி ஒலிபரப்பு நடைபெறும்போது, தடாலடியாக நுழைந்து கத்துவதற்கோ ஆலாவின் சிறிய மூளைக்குத் தெரிந்திருக்கவில்லை என்று கதை நகருகிறது. இறுதியில் தனது குழந்தையோடு தப்பிச் செல்லும் முயற்சியில் குழந்தையோடு சுடுபட்டு செத்துப்போகிறாள். இதுதான் கதைச் சுருக்கம்.

இந்த நாவலின் கதைச் சுருக்கத்தின் சாரத்தை இலக்கியக் கதையாடலின் அர்த்தத்தில் இப்படிச் சொல்ல முடியும். இலுப்பங்கேணி என்ற சிறு கிராமத்தில் பிறந்த அப்பாவியான வெள்ளிப்பாவை, சிறுவர் போராளியாகப் புலிகளில் இணைந்திருந்து, புலம்பெயர் சமூகப் பிரதிநிதி ஒருவரால் இப்படிச் சாகடிக்கப்படுகிறாள். தனது நான்கு வருட போராட்ட வாழ்வில் ஒருவரைக் கூடக் கொல்லாத அப்பாவிச் சிறுமி அவள். இவளுக்கு நடந்த கதையைப் பாருங்கள் என இந்த நாவல் சொல்ல முற்படுகிறது. வாசகர்களிடமிருந்து ஓர் அனுதாப உணர்வை வேண்டிநிற்கிறது. இது ஈழத் தமிழர்கள் மீதும், போராளிகள் மீதும் அனுதாபங்களைக் கொட்டித் தீர்ப்பதற்குக் குழுமியிருக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கு வாய்ப்பை வழங்கி புனைவாகத் திறந்துவிடுகிறது. இன்று “ட்ரென்டாக” மாறியிருக்கும் இந்த அனுதாப அலையைப் புனைவு என்ற பெயரிலும், நாவல் என்ற பெயரிலும், பிற முன்னாள் போராளிகளின் ஒப்பாரிகள் பெற்றுக்கொள்ளும் ஆதரவையும் பாராட்டுகளையும் இடையில் புகுந்து தட்டிச் செல்லும் ஒரு வழிமுறையின் தந்திரமான பக்கமே இந்த இச்சா நாவலினுாடாக ஷோபாசக்தி செய்திருப்பது.

ஒரு புனைபிரதி குறித்து இப்படியான குறுகிய பார்வையை ஒரு பந்தியில் விமர்சனமாக வைத்துவிடக்கூடாது. இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பவர், அதற்கான உதாரணங்களை நாவலை முன்வைத்து வியாக்கியானம் செய்வதுதான் நேர்மையான பார்வையாக அமையும். எனவே, அந்த நேர்மையான பார்வையை இனி காணலாம்.

முதலில் நிலவியல் சார்ந்த ஒரு விசயத்தைக் கவனிப்போம். ஆலா என்ற போராளிச் சிறுமி, பிறந்த ஊராக இலுப்பங்கேணி சுட்டிக்காட்டப்படுகிறது. அந்தக் கிராமத்தைப் பற்றிய சில தகவல்கள் நாவலில் முன்வைக்கப்படுகின்றன. ஆலா பிறந்த போது, களியோடை ஆறு பெருக்கெடுத்து ஊருக்குள் வந்ததாகக் குறிப்பிடுகிறது. அதுபோல், களியோடை ஆற்றின் வலது கரையில் இலுப்பங்கேணி இருப்பதாகவும் கூறுகிறது. அது பின்னர்க் குடியேற்றக் கிராமமாக இருந்ததாலும், ஆலாவை ஊர்காவற் படையினர் பிடித்துச் செல்லும்போதும் வளைவில் மாடிவீடொன்றைக் கட்டுவதாகவும் தகவல் இருக்கிறது. இந்த இலுப்பங்கேணி என்ற ஊர் எனது ஊரிலிருந்து சுமார் 20 கிலோமீற்றருக்குள்தான் இருக்க வேண்டும். அது குறித்த தகவல்களை ஆராய்ந்தால் அப்படி ஒரு ஊர் இல்லை. களியோடை ஆற்றின் வலது கரையில் அதுவும் ஆற்றுக்கு நெருக்கமாக ஒரு ஊர் இல்லை. இந்தச் சம்பவங்கள் நடந்த பின்னர்ப் புலிகள் அழிந்துபோனதாலும், அந்த ஊரில் ஊர்காவற்படைகள் இருந்ததாலும் இன்றும் கூட அது ஒரு சிங்களக் கிராமமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு ஊர் நாவலில் குறிப்பிடுவது போன்ற நிலவியலில் இல்லை. இதை ஒரு நிலவியல் சார்ந்த பிழை என்றே எடுத்துக்கொள்ள முடியும். இப்போது அப்படியே எடுத்துக்கொள்வோம்.

இலக்கிய அர்த்தத்தில் வேறுமொரு கோணத்தில் இதைப் புரிந்து கொள்ளலாம். இது ஒரு புனைவான ஊரும் நிலவியலும் எனக் கருதி வாசிப்பைத் தொடரலாம்.

புனைவு என்ற வகையில் நாவலில் முன்வைக்கப்டும் சம்பவங்கள், உருவாக்கும் அரசியல் சார்புகள் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். சம்பவங்களால்தான் கதையாடலே உருவாகிறது என்பது முக்கியமில்லையா?

ஆலா தனது ஊரிலிருந்த பல குடும்பங்கள் வெளியேறிச் செல்வதற்கு, ஊறாப்பிட்டிய என்ற சிங்களக் கிராமத்திற்குள் புலிகள் நுழைந்து முப்பத்தைந்து பேரைச் சுட்டுச் சாவடித்ததாகச் சொல்லும் அதே நேரம், வீர முனைக்கிராமத்தை ஊர்காவற்படையினர் அழித்ததாகப் போகிற போக்கில் சொல்ல வைக்கப்படுகிறார். வீரமுனைக் கிராம கலவரம் அப்படி, சும்மா இருந்த கிராமமொன்றுக்கு நிகழ்ந்த அழிவு அல்ல. 1985 தொடங்கித் தமிழ் இயக்கங்களால் சம்மாந்துறைக் கிராமத்திற்கும், முஸ்லிம்களுக்கும் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்ட கொலைகள், கொள்ளைகள், சொத்துப் பறிப்புகளின் அடியாக வளர்ந்து தொண்ணுாறுகளின் தொடக்கத்தில், வயலுக்குச் சென்ற முஸ்லிம்கள் புலிகளால் கொன்று குவிக்கப்பட்ட உச்ச நிகழ்வில் உருவான உணர்ச்சி சார்ந்த ஒரு நடவடிக்கை என்பதே விசயம். (அதற்காக அதை நான் ஆதரிக்கவில்லை). சும்மா இருந்த வீரமுனைக் கிராமத்திற்கு நடந்ததுபோல் ஒரு சிறு தகவலாக அது முடிவடைகிறது.

அதுபோல், வெருகல் பகுதியில் புலிகள் இரு பிரிவுகளாகப் பிரிந்த குழுக்களிடையே மோதல்கள் நடைபெற்றதாகக் குறிப்பிடுவார். ஆனால், அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற மாபெரும் வெருகல் படுகொலைகள் பற்றி ஏதும் சொல்லாமல் மறைக்கும்படி ஆலா என்ற கதாபாத்திரம் வளர்த்தெடுக்கப் பட்டிருக்கிறது. கருணா அணியைச் சேர்ந்த பலநுாறுபேர் கொல்லப்பட்டும், புதைக்கப்பட்டும், அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களைக் கொன்றும் பெரும் அழிச்சாட்டியமே நடைபெற்றிருக்கும். இது நடைபெற்றது 2004.04.10ம் திகதி, இதன் பின்னர்க் கிழக்கைச் சேர்ந்த பொதுமக்களைக் கூடப் புலிகள் இயக்கம் சந்தேகத்தோடே அணுகியது என்பது முக்கியம்.

இச்சா நாவலின் பிரதான கதாபாத்திரமான ஆலாவின் தம்பி கொல்லப்படுவதும், ஆலா கொலை செய்யப்படுவதற்காக ஊர்காவற் படையினரால் கூட்டிச் செல்லப்படுவதும், ஊர்காவற்படையினர், புலிச் சிறுவர் போராளியால் கொல்லப்படுவதும், ஆலா புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும், இலங்கையின் அரசியலில் மிக முக்கியமான காலகட்டத்தில் நடைபெறுபவை. ரணில் அரசும், புலிகளும் நோர்வேயின் மத்தியஸ்தத்தின் கீழ் போரைக் கைவிட்டுச் சமாதானப் பேச்சை தொடர்ந்த காலம். அதுபோல. புலிகள் அமைப்பு இரண்டாகப் பிளந்து கிழக்குப் புலிகள் என்ற வகையில் கருணா தலைமையிலும், பிற புலிகள் பிரபாகரன் தலைமையிலும் இயங்கிய காலம். அதிலும், சொந்த இனத்தின் மீதே, கிழக்குப் புலிகள் என்ற தோரணையில் பெரும் படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட காலம்.

ஆக, இலுப்பங்கேணி கொலையும், ஊர்காவற் படைக் கொலைகளும் சமாதான கால மீறல் சம்பவங்களாக எங்கும் பதிவாகவில்லை. நாவலில் சொல்லப்படும் சம்பவமான புலிகள் காட்டுக்குள் ஒளிந்த சம்பவமும், ஆலாவின் தம்பி புலிகளுக்கு உதவிய சம்பவமும் சமாதான காலத்தில் நடைபெற்றவை ஆகையால், ஊர்காவற்படையினர் புலிகளுக்கு உதவி செய்தார் என்ற போர்வையில் கொன்றது என்பது கேள்வியை எழுப்புகிறது. சமாதான காலத்தில், அரச பாடசாலையான அம்பாறை தமிழ்ப் பாடசாலையில் இயக்கத்திற்கு ஆட்சேர்க்கும் நிலையிலுள்ள ஒரு சூழலில் புலிகளுக்குத் தண்ணீரும் தேநீரும் கொடுத்தது என்பது எப்படி “புலிக்கு” உதவியதாக நாவலில் சம்பவமாக ஆனது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டியுள்ளது.

நாவலின் பிரதான கதாபாத்திரமான ஆலா, வடக்கு – கிழக்குப் புலிகள் எனப் பிரிந்த பின்னரே புலிகள் இயக்கத்தில் இணைகிறார் என்பது நாவலின் முக்கியமான விசயம். அந்தக் கதாபாத்திரத்தின் வழியேதான் நாவலே உருப்பெறுகிறது. அதுதான் நாவலின் மைய ஓட்டம். இப்படியான சமாதான காலத்தில் மாறுவேடம் பூண்டு ஆலா திருகோணமலையைச் சேர்வது ஏன்? இது கூடப் புரியவில்லை.

கிழக்கிலுள்ள மக்களைச் சந்தேகத்தோடு அணுகும் வடக்குப் புலிகள் – கிழக்கைச் சேர்ந்த ஒரு பெண்ணை இயக்கத்தில் சேர்த்தும், அவளுக்குத் தனிப் பாதுகாப்புத் துப்பாக்கி ஒன்றை கிளிநொச்சியில் இயங்கும் புலிகளின் முக்கியஸ்தர் வழங்குவதும் எப்படி நிகழ்ந்திருக்க முடியும்?

அப்படி நிகழ்ந்திருக்கிறது என நாவல் உருவாக்கும் சம்பவங்கள், கிழக்கு மக்களையும், முன்னாள் இயக்கப் போராளிகளையும் விரோதமாகப் புலிகள் பார்க்கவில்லை என்பதை முன்னிறுத்தும் ஓர் அரசியல் செயற்பாடாக மாற்றப்படுகிறது என்றே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

யுத்தநிறுத்த காலத்தை எடுப்போம். புலிகள் தான் ஆயிரக்கணக்கான யுத்தநிறுத்த மீறலை, சொந்த மக்களுக்கு எதிராகச் செய்தனர். 2002-2005 நவம்பர் வரையான காலத்தில், யுத்த நிறுத்த மீறலாக யாரால் என்று இனம் காணப்பட்டுப் பதிவுக்கு வந்தது 3560யாகும்;. இதில் புலிகள் மீறியது 3424 ஆகும். இது அனைத்தும் சொந்த மக்களுக்கு எதிராக இருந்தது. அதுவும் கிழக்கு மக்கள் மீது சந்தேகப்பட்டு நிகழ்ந்தவை. அரசு மீறியது 153 ஆகும். பதிவுக்கு வராது போனது, பல ஆயிரம். ஆனால் கணக்கில் இல்லை. சொந்த மக்களுக்கு எதிராகப் புலிகளால் நிகழ்த்தப்பட்டவைதான் அதிகம்.

இந்தக் காலத்தில் இடம்பெற்ற அதிகக் கொலைகள் கிழக்குத் தமிழர்களை, புலிகளையும், மக்களையும் கொன்றொழித்த நிகழ்வுதான். குறுகிய நேரத்திற்குள், ஒரு பெரும் நிலப்பரப்பில் அதிகக் கொலைகளும், இரத்தப் பெருக்கும் நடைபெற்று இலங்கைப் போர் வரலாற்றில் நடந்தேறிய சம்பவம் கிழக்கில்தான் நிகழ்ந்தது. அப்படியான சம்பவத்தை இச்சா நாவல் பதிவு செய்யவில்லை.

ஆனால், இத்தனை பெரிய அழித்தொழிப்புக்கும் பிறகு, கிழக்கைச் சேர்ந்த ஒருவரைப் போராளியாகப் பிரபாகரன் தலைமையிலான வடக்குப் புலிகள் சேர்த்துக் கொண்டனர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. புனைவுசார்ந்த பெரும் கேள்வியையும் எழுப்புகிறது. ஆலா வடக்குப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழையும்போது, ஆயுதங்களுடன் நின்ற புலிகள் சோதனை செய்யவில்லை என்றும் புன்னகையோடு உலவித் திரிந்தனர் என்றும் நாவலின் சம்பவம் கூறுகிறது. ஆனால், இராணுவப் பகுதியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக நாவலில் பிறிதொரு சம்பவம் முன்வைக்கிறது. சமாதான கால மீறல்கள் அதிகமாகப் புலிகளாலேயே நடந்தேறின. அதுவும் தனது சொந்தத் தமிழ் மக்கள் மீதுதான். அதுவும் கிழக்கு மக்கள் மீதுதான் என்பது வேறு. இதை மறைக்கும் ஒரு கதைச் சம்பவத்தைப் புனைவாக்குவது பற்றியே எனது இந்தக் கேள்வி எழுகிறது.

நாவலில் புனையப்படும் கதை நடைபெறுவதாக நாவலே கூறும் காலச் சூழலையும், பிரதான கதாபாத்திரமான ஆலாவின் ஊரும், கதை நடைபெறும் கால அரசியல் நிகழ்வுகளில் அந்த ஊர் என்னவகையான அடையாளத்தைக் கொண்டு அணுகப்படுகிறது என்பதையும் அறிந்த, அல்லது அனுபவரீதியாகத் தெரிந்த ஒருவருக்கு இச்சா நாவல் ஒரு நகைச்சுவையான அம்சமாகவே தோன்றும்.

ஆகவே, இச்சா நாவல், தனது கதை எல்லைக்குள்ளாகச் சேகரிக்கும் கதைச் சம்பவங்கள், கதை நடக்கும் கால அரசியல் செயற்பாடுகளை மாற்றியமைக்க முயல்கிறது அல்லது, அறியாமையின் வழியாக ஒரு கதையைப் புனைகிறது. இந்த இரண்டில் ஒன்றாகவே “இச்சா“ இருக்கும்.

சரி, பெண்ணின் கோணத்திலிருந்து இந்த நாவல் கதையைச் சொல்கிறது என ஆரம்பத்தில் குறிப்பிட்டிருப்பேன். அது பெண்ணிய நோக்கிலிருந்தல்ல என்றும் இந்தக் கதையை ஒரு பெண் சொல்வதாகவுமே அமைவதாக முன்வைத்திருப்பேன். எனவே, இந்த நாவலில் உருவாக்கப்படும் அல்லது வரும் பெண்களைப் பற்றிச் சிறிது பேச வேண்டும்.

ஷோபா சக்தியின் இச்சா நாவலில் விரித்துச் சொல்லப்படும் பாத்திரங்கள் அதிகமில்லை. எனினும், அவர்களின் பண்புகள் வெளிப்படும் வகையில் சம்பவங்கள் உருவாக்கப் பட்டிருக்கின்றன. அதிகமான பெண் கதாபாத்திரங்கள் வந்துபோகின்றன. அதில், பண்புகளின் அடிப்படையில் பெண் பாத்திரங்களே மோசமானவர்களாக இருக்கின்றனர். ஒரே ஓர் ஆண் கதாபாத்திரம் புலம்பெயர் ஊடக அறிவுஜீவியாக வரும் வாமன் மட்டுமே மோசமான கதாபாத்திரமாக வருகிறார். அரச புலனாய்வு அதிகாரியாக வரும் குமாரநாயக்கா கூட அவரின் பாத்திர வெளிப்பாட்டின் அடிப்படையில் நல்லவராக மாறி நிற்கிறார். விசாரணைகளின் போது சித்திரவதை செய்பவர்கள் பால் அடையாளங்களினுாடாக நாவலில் வெளிப்பட்டு நிற்கவில்லை.

இலுப்பங்கேணிக் கிராமத்தில் பேய்களைத் துாஷணம் சொல்லி விரட்டும் மரபு இருக்கிறது. இருந்தும், பெத்தாப்பா என்ற ஆண் கதாபாத்திரத்தினால் சொல்லப்படும் துாஷணங்களால் அவரைப் பின்தொடரும் பேயை விரட்ட முடியவில்லை. அந்தத் துாஷணங்கள் அத்தனை மென்மையானவை. ஆனால், பெத்தாச்சி என்ற பெண் கதாபாத்திரம் சொல்லும் துாஷணத்தைக் கேட்டுப் பேய் தலைதெறிக்க ஓடுகிறது. ஆலா புலிகள் அமைப்பில் இணைந்து பயிற்சி எடுக்கும் முகாமின் பொறுப்பாளராக இருக்கும் பெண் கதாபாத்திரமான செந்துாரி அக்காவும் இதைப் போல் கடுமையான துாஷணங்களைச் சொல்பவராக இருக்கிறார். அதுபோல், சிறைக் காவலாளியாக இருக்கும் பெண் கதாபாத்திரமான ஆந்தை நோனாவும் கடுமையான பெண்ணாகக் கதையில் வருகிறது. அதுபோல், வாமனின் சகோதரியும் மோசமான பெண்பாத்திரமாக வருகிறார்.

சிறை மேலதிகாரியும், ஆலா சிறையில் எழுதிய குறிப்புக்களை, நாவலுக்கு வெளியே கதை சொல்லியாக இருப்பவருக்குக் கொடுப்பவரும், ஈஸ்டர் குண்டுவெடிப்பில் இறப்பவருமான லொக்கு நோனா என்ற கதாபாத்திரம் இரக்கமுள்ள பெண் கதாபாத்திரமாகக் கதையில் நடமாடுகிறார். அவரோர் அரச அதிகாரி என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். இப்படி நினைவில் கொள்வது நாவலில் கதையாடப்படும் பிறிதொரு சம்பவத்தைப் புரிந்துகொள்ள உதவும். அரசு சார்பாக இந்த நாவலில் உருவாக்கப்பட்டிருக்கும் எந்தக் கதாபாத்திரங்களும் மோசமானவர்களல்லர் என்பதைப் புரிந்துகொள்ள உதவும். அதாவது, இன்றுவரை சாதாரணமான அரசியல் கைதிகளாக இருக்கும் எவரையும் கூட மன்னித்துச் சிறையிலிருந்து வெளியேற்ற விரும்பாத அரசு, அந்த அரசின் தலைவர் பொது மன்னிப்பின் பேரில் ஒரு கரும்புலி தற்கொலைப் போராளியை விடுதலை செய்யுமளவு நல்லவராக உருவாகி நிற்கிறார்.

புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் நல்லவர்களாகவே நாவலினுள் நடமாட விடப்பட்டுள்ளனர். அறாப்பிட்டிய கிராமத்திற்குள் நுழைந்து முப்பத்தைந்து பேரைக் கொன்றதும், சிறுவர்களை இயக்கத்தில் இணைத்ததும் தவிர, (கட்டாயமாக இணைத்தல், வந்தவர்களைச் சேர்த்துக்கொள்ளல்) வேறு குற்றங்களற்ற அப்புராணிகளாக அவர்கள் உலவுகின்றனர். இலங்கை அரசையும், இராணுவத்தையும் நோக்கி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டாகச் சோதனைச் சாவடியில் இறக்கிச் சோதனை செய்வதைத் தவிர வேறில்லை. (விசாரணைக்காலச் சித்திரவதைகளை இங்குச் சேர்க்க முடியாது). ஆனால், இதற்கு முந்திய அரசுகள் குடியேற்றம் என்ற வகையில் தமிழ்க் கிராமங்களை அபகரித்ததாக வருகிறது. ஆனால், நாவலின் கதை நகரும் கால எல்லைக்குள்ளாக இருக்கும் இலங்கை அரசுகள், நேர்மையானவை போல உருவாக்கப்படுகின்றன. அதேநேரம் புலிகளும் அப்பாவிகளாக உருவாக்கப்படுகிறார்கள்.

பெண் கதாபாத்திரங்களைக் கடுமையோடும், துாஷணத்தோடும் இணைக்க வேண்டிய தேவை என்பது, ஆண்மைய சிந்தனையின் வெளிப்பாட்டில் கதை உருவாக்கப்படுகிறது என்பதன்றி வேறென்ன? ஆயினும், பெண்மைய நோக்கில் சொல்லப்படாது, ஒரு பெண் கதை சொல்வதாக இருந்தாலும், இந்த நாவலில் இரண்டு சந்தர்ப்பங்களில் சிறு மூளையுள்ள, அப்பாவியான, முட்டாள் பெண்ணாக இருந்தாலும் தன்னை வெளிப்படுத்தி இருக்க வேண்டிய தருணங்கள் இந்த நாவலில் அவசியப்பட்டிருக்கிறது. அதைக்கூடக் கவனத்திற் கொண்ட மாதிரி தெரியவில்லை. அந்தச் சந்தர்ப்பங்களை இங்குச் சுட்டிக்காட்டுவது அவசியமானது.

முதலாவது சந்தர்ப்பம், சுல்தான் பப்பா என்ற கிளிநொச்சி தலைமையகத்தின் பொறுப்பாளரை ஆலா காதலித்த சம்பவமாகும். தனது காதலை வெளிப்படுத்திய நேரத்தில் சுல்தான் பப்பா, ;உனக்குப் பதினெட்டு வயசாகட்டும்’ எனப் புத்திமதி சொல்லும் தருணத்தில், எந்தவொரு கிறுக்குப் பெண்ணாக இருந்தாலும், தனது காதலை மேலும் வலுவாக்க எதையாவது கூற வேண்டியிருந்திருக்கும். ஆலாவுக்குப் புலிகளின் தலைவரோடு பேசுவதற்குக் கூடத் தயங்காத மனநிலை கொண்டவர் என நாவல் மேலும் சொல்கிறது. எனவே, ‘பதினெட்டு வயதிற்குக் கீழ்ப்பட்ட என்னைப் போரில் பங்குபற்றுவதற்கு ஏற்றுக்கொண்ட நீங்கள், காதலிப்பதற்கு ஏன் வயது பார்க்கிறீர்கள்?’ என நகைச்சுவைக்குக் கூடக் கூறவில்லை.

இரண்டாவது சந்தர்ப்பம். புலம்பெயர் கற்பனையான தேசத்தில் சிறைக் கைதிபோல் ஒரு வருடமாக அடைத்து வைத்து நடாத்தியதை எதிர்க்கும் வழிமுறைகள் எதையும் முன்வைக்கவில்லை. இறுதி வாரமான ஆறு நாட்களில் கூட, அதாவது ஆலாவிற்குத் தைரியம் கொடுக்கும் குறளி என அழைக்கப்படும் ஆயுதம் கையில் கிடைத்த பின்னர்கூட ஆலா மேற்கொள்ளவில்லை என்பது இரண்டாவது சந்தர்ப்பம்.

ஆக, பெண்களை மோசமானவர்களாகவும், சூழ்நிலைக்கேற்ப யோசிக்கும் திறனற்ற சின்ன மூளையுள்ளவர்கள் என்றும், அதிகமாகத் துாஷணங்களைக் கக்கும் நாகரிகமற்றவர்களாகவும் நாவலிலுள்ள கதைச் சம்பவங்களால் ஒரு கதையாடலை ‘இச்சா’ உருவாக்குகிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

மொத்தத்தில், அரசு மற்றும் புலிகள் என்ற பாசிச அமைப்புகளின், முழுமையான தன்மையை மறைத்து, பெண்கள் சிந்திக்கும் திறனற்றவர்கள், சிறிய மூளை உள்ளவர்கள் என்ற வழமையான ஆணாதிக்கச் சிந்தனையின் பிரதான கூறை எடுத்து, கதை நடக்கும் காலத்தின் அரசியல் சூழலை மறந்து, ஜனரஞ்சக பத்திரிகைகளில் தொடர்கதையாக வரும் கதைகளின் ஆழத்தைத் தாண்டிவிடாமல் எழுதப்பட்ட ஒன்றுக்கு, பின்நவீன புனைகதைகளுக்குப் பயன்படுத்தப்படும் பெயரான பிக்ஷன் என்பதையும், நவீன இலக்கியத்தின் முக்கியப் பேசுபொருளான நாவல் என்றும் கூறி அச்சிட்டு விடுவது அவ்வளவு பொருத்தமானதல்ல. இதைச் சில இலக்கியக் குஞ்சுகள் துாக்கிப்பிடித்து நிற்பது தமிழ் நவீன இலக்கியத்தின் இன்றைய அவல நிலையைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.

உங்களுக்குச் சில கேள்விகள் எழக்கூடும். பின்நவீன பிக்ஷன்களிலும், நவீன இலக்கியத்தில் நாவல் எனப் பயன்படும் சில அம்சங்களும் இந்த ‘இச்சா’ பிரதியில் காணப்படுகிறதுதானே என நீங்கள் நினைக்கக் கூடும். அப்படித் தென்படும் சிங்கள மற்றும் தமிழ்க் கதைகள் இன்ரடெக்சுவாலிட்டியாக வருவதும், சில சொலவடைகளும், பாடல்களும் இணைக்கப்பட்டிருப்பதையும் கவனிக்கலாம். அதில் இன்ரடெக்சுவாலிட்டியாக (Intertextuality) வரும், மந்திரி குமாரியின் கதை, இச்சாவின் இறுதியில் மீண்டும் வந்து நின்று தனது வகிபாகத்தைத் தெளிவுபடுத்துகிறது. அது குறித்தும் சிறு அலசலை இங்குச் செய்யலாம்.

மந்திரிகுமாரியின் கதை இதுதான். கண்டி அரசனின் மந்திரிசபையில் மந்திரியாக இருந்த ஒருவன் (எஹலேபொல), அரசுக்கு எதிராக நடந்துகொள்கிறான். அதனால், அந்தக் குடும்பத்தையே கண்டி அரசன் கொன்றொழிக்கிறான். அதில், பத்து மாதமே ஆன குழந்தையை உரலில் இட்டு இடித்து, அந்தக் குழந்தையின் தாயே கொல்ல வேண்டுமென்று கட்டளை பிறப்பிக்கிறான். தப்பிக்க வழியேதுமற்ற நிலையில் அந்தத் தாய் கட்டளையை நிறைவேற்றுகிறாள். இச்சா நாவலின் இறுதியில், ஆலா தனது குழந்தையோடு சுடுபட்டு இறந்துவிடுகிறாள்.

குழந்தையைக் கொல்ல வேண்டும் என யாரும் கட்டளை இடாத சூழலில், குழந்தை தந்தையோடு அல்லது அந்த நாட்டு அரசின் பாதுகாப்பில் வளரக்கூடிய வாய்ப்பிருந்தும் குழந்தையையும் சேர்த்தே கொல்லப்படக் கூடிய நிலையை ஆலா உருவாக்குகிறாள். இது மந்திரிகுமாரியின் சந்தர்ப்பத்திற்கு நேரெதிரானது. ஆலா ஊர்காவற்படையால் கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்டுத் திருகோணமலைக்குப் போகும்போது கூட, அவளின் அம்மா தனது குழந்தை எங்காவது உயிர் வாழட்டும் என்றே விட்டுவிடுகிறாள் என்பதையும் இந்த நாவல் கதைச் சம்பவமாக முன்வைக்கிறது. ஆனால், ஆலா ஒரு தாயாக மாறியபின் தனது குழந்தை எங்காவது, எப்படியாவது வாழட்டும் என விட்டுவிடவில்லை. மந்திரி குமாரியின் கதைகூட ஆலாவுக்குத் தெரிந்திருக்கிறது. வாழ்வில் எதிர்கொண்ட, அனுபவித்த, அறிந்த சம்பவங்களைக் கொண்டும் ஒரு முடிவை எடுக்குமளவு திறனற்ற பெண்ணாக, சிறு மூளையுள்ளவளாக ஆலா என்ற பெண் மாற்றப்படுகிறாள்.

மாட்சிமையுடைய மரணத்தை எதிர்பார்த்து, இயக்கக் கட்டுப்பாடுகளைக் கூட மீறும் திறனுள்ளவளாக, தற்கொலை வெடிப்பைத் தவிர்க்கும், ஆலா நாவலில் இத்தனை மோசமான பெண்ணாக வளர்த்தெடுக்கப்படுவது கவனிக்க வேண்டிய ஒன்று. இந்த இடத்தில்தான் பின்நவீன பிக்ஷனில் உருவாக்கப்படும் இந்த இன்ரடெக்சுவாலிட்டி என்பது, அந்தக் கருத்தியலைப் புரிந்துகொள்ளாதவர்களால் எப்படி எல்லாம் மோசமாகப் பயன்படுத்தப்படும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். அதுபோல், ஏசுவின் இறுதி உணவு போன்ற கதைகள் இன்ரடெக்சுவாலிட்டியாக வளரவில்லை. சாதாரணமான சம்பவமாகவே சுருங்கி விடுகிறது.

அரச பாசிசம் மற்றும் புலிப் பாசிசம் போன்றவற்றின் பின்னணியில் இருந்து உருப்பெற்று, அதன் கதையாடல்களைத் தடங்காட்டியபடி, நாவலின் கதைக்களம் விசாரணைக்குட்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், ஆலா என்ற கதாபாத்திரத்தை ஓர் அப்பாவித்தனமான பெண்ணாக உருவாக்குவதென்பது விமர்சனத்துக்குரியது. தனிநபர்களின் வரலாற்றையே ஒரு காலகட்டத்தின் வரலாறாகப் புரிந்துகொள்ளப்பட்டு வந்த நவீன காலத்து எழுத்துக்கள் இன்று பரிசீலனைக்குட்பட்ட காலத்தில் இலக்கிய மற்றும் சிந்தனைச் செயற்பாட்டாளராக இருப்பதின் விளைவுகள் பிரதிகளில் வெளிப்பட வேண்டியது முக்கியமான ஒன்று.

ஹிட்லரின் இலட்சக்கணக்கான கொலைகளோ, ஸ்டாலினின் சரித்திரமே ரஷ்யாவின் சரித்திரமாகவோ, அல்லது அந்த நாட்டு மக்களின் சரித்திரமாகவோ எழுதப்பட முடியாது. இவர்களின் கொலைகள் அனைத்துமே அவர்களின் தனிச்சொத்து அல்ல. இவர்களின் பாசிசம், ஹிட்லர், ஸ்டாலின் என்ற தனிநபர்களின் பாசிசம் அல்ல. அந்த மக்கள் கூட்டத்தின் பாசிசமும் கூட. எனவே இலங்கை அரசினதும், புலிகள் இயக்கத்தினதும் தலைவர்களின் பாசிசமல்ல. இந்த நிறுவனங்களை ஆதரித்து ஊக்குவித்த மக்கள் கூட்டத்தின் பாசிசம். ஒரு மக்கள் கூட்டத்தின் பாசிசத்தில், அந்தப் பாசிசத்தை நடைமுறைப்படுத்தும் இயக்கத்தின் உறுப்பினர், ஓர் அப்பாவியாகத் தனித்துப் பிரித்தெடுக்கப்பட்டுப் புனைவாக்கப்பட முடியாத நிலையிலேயே இருக்கிறார். ஆக, இந்த மக்கள் கூட்டத்தின் பாசிச ஆதரவையும், பங்களிப்புக்களையும் உள்ளடக்கி, அதைத் தலைமையேற்று வழிநடாத்திச் செல்லும் புலிகளின் இயக்க உறுப்பினர் என்றவகையில் ஒருபோதும் அப்பாவியாக மாறிவிட முடியாத நிலையில் உள்ளவர் என்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.

இச்சா நாவலில் உள்ள கதைப்படி, ஆலா புலிகள் இயக்கத்திற் சேருவதற்கான தருணமாக முதியவரொருவர் ஆலாவை பாலியல் தொந்தரவு செய்த நேரத்தில் தற்செயலாகக் கையால் தட்டுப்பட்டுக் கிணற்றில் விழுகிறார். பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கான விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை. தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது. அதுவும் கொலைத் தண்டனை. அந்தத் தண்டனையை வழங்கியவர்களுக்கோ, அல்லது இன்னும் புலியாக மாறாமல் பார்த்துக்கொண்டிருந்த ஆலாவுக்கோ அது பற்றி எந்தக் குற்ற உணர்வையும் எழுப்பவில்லை. ஆனால், ஆலா அரச இராணுவத்தால் பிடிபட்டு விசாரிக்கப்படும்போது சித்திரவதை செய்வது மனித உரிமைக்கும், சட்டத்திற்கும் விரோதமானது எனத் தனது கருத்தை முன்வைக்காமலில்லை. அதேநேரம், பெரும் பாசிச அரச நிறுவனம் கூட, ஒரு தற்கொலைப் போராளியை விசாரணைகளின் பின்பு கூடக் கொன்றுவிடவில்லை என்றும், அவருக்குப் பொது மன்னிப்பு வழங்குவதாகவும் கதைச் சம்பவங்கள் உருவாக்கப்படுகின்றன. புலிகள் இயக்கத்தைவிட அரச பாசிசம் ஒப்பீட்டளவில் குறைவானது. நல்லது. கடுமை குறைந்தது என்ற தொனி இதனூடே மேலெழுந்து வருகிறது.

இலட்சியமாகக் கருதப்படும் ஒரு விசயம், உளவியல் ரீதியிலான பாதிப்பை ஏற்படுத்திப் பாசிசச் செயற்பாடுகளைக் கூட இலட்சியத்தை அடைந்து கொள்வதற்கான போராட்ட அறம் சார்ந்த வழிமுறையாகப் போராளிகளிடமும், இராணுவச் சிப்பாய்களிடமும், அவை சார்புள்ள மக்கள் கூட்டத்திடமும் நிலைகொண்டு விடுகிறது. அதைப் புரிந்துகொள்ள முடியாத நிலைக்கு மாற்றிவிடுகிறது. தமது இலட்சியங்களுக்கு எதிரானவர்களைக் கொன்று குவிப்பது அறம் என்றே அரசு, மற்றும் புலிகள் இயக்கம் இரண்டிலும் பொது உளவியலாகவும், புனிதப் போராட்டமாகவும் மாற்றமடைந்து விடுகிறது. எனவே, கருத்தியல் ரீதியில் புரிதலுள்ள, தேர்ச்சியுள்ள ஒரு புனைவு எழுத்தாளர் இந்த அடிப்படையைத் தனது புனைவு உத்திகளில் எப்போதும் கவனப்படுத்திய படியே கதையை வளர்த்துச் செல்வார். இப்படிச் செய்பவரே, இந்தக் காலத்திற்குரிய எழுத்தாளராகவும் ஆகிவிடுவார். ஆனால், இது ஷோபா சக்தியிடம் நிகழவில்லை. பாசிச இராணுவ நிறுவனங்களான அரசும், புலிகளும் கவனத்திற் கொள்ளப்படவில்லை. அதேநேரம், புலிகள் இயக்கத்தின் பாசிச வெளிப்பாட்டின் திரட்சியான பெரு உருவம் நீக்கப்பட்டு, ஓர் அப்பாவிச் சிறுமியின் வாழ்க்கையில் நடந்த ஒரு சோகச் சம்பவமாக மாற்றம் செய்யப்படுகிறது. தனது “தற்கொலைப் போராளி” என்ற அரசியல் கதையாடலின் பின்னுள்ள “அரசியல்“ நீக்கம் செய்யப்பட்ட ஓர் அபலையின் வாழ்வு பற்றிய சம்பவங்களாக நாவலின் கதைச் சம்பவங்கள் வளர்த்தெடுக்கப்படுகின்றன.

அரசு மற்றும் புலிகள் என்ற பாசிச இராணுவ நிறுவனங்களின் மக்களைக் கொன்று குவிக்கும், அதனுாடாகத் தமது இலட்சியத்தை அடையும், வழிமுறைகள் திட்டமிட்டு உருவாக்கப்படும் செயற்பாடுகள் என்பதையும், அதை ஆதரிக்கும் மக்கள் கூட்டத்தின் ஒரு தன்னிலைதான் ஆலா என்ற கதாபாத்திரமும் என்பது மேலெழா வண்ணம் மறைக்கப்படுகிறது.

இப்படி ஆழமான ஒரு கோணத்தை ஷோபா சக்தி தனது நாவலில் முன்வைக்கத் தவறிவிடுகிறார் என்பது விமர்சனமல்ல. அதை அவர் எப்படி வேண்டுமானாலும் கையாளலாம். ஈழத்துப் போராட்ட இலக்கியங்கள் ஏன் பெரும் இலக்கியங்களாக வளரவில்லை என்றால், இப்படி ஆழமான பார்வைகள் அற்றவைகளாக அவை இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகவே இதை எழுதுகிறேன். எனது இனம், எனது இயக்கம், எனது மொழி என இலட்சிய வரையறைகளை உருவாக்கி, எனதல்லாத மற்றமைகள் கொல்லப்படலாம், அழிக்கப்படலாம், வெறுக்கப்படலாம் என்ற நிலைக்கு உருமாறி, ஏன் நாமே அவற்றைச் செய்வது அறம்தானே என்ற பெரும் லட்சியமாக மாறிப்போவதால், பாசிசமாக நிலைபெற்றுவிடும் சமூகச் செயற்பாட்டைத் துல்லியமாகக் கவனிக்கும் பிரதிகள் இல்லாமல் போனதும் ஒரு காரணம்.

வெறுமனே தனது இனம், மொழி, தனது இயக்கம் என்ற கோணத்தில் மாத்திரமே அக்கறை கொண்டு அங்கே உருவான பாசிச வெளிப்பாடுகளை மறைத்தொதுக்கும், இலக்கியப் பிரதிகளே மலிந்து கிடக்கின்றன. கதை இயங்கும் சூழலையும், காலத்தையும் அதன் அரசியல், சமூகவியல் அம்சங்களையும் பன்மையான கண்ணோட்டத்தில் முன்வைக்கும் பிரதிகள் இல்லை. அதை எழுதும் அளவு கருத்தியல் சார் பிரக்ஞையுள்ள எழுத்தாளர்களும் இல்லாது போய்விட்டனர். வெறுமனே கதை சொல்லத் தெரிந்தவர்கள்தான் அதிகம். அதில் ஷோபா சக்தி திறமையான ஒரு கதை சொல்லி.

சுருக்கமாக ஏதாவது சொல்வதெனில், ஷோபா சக்தி நாவல்களையோ , இலக்கியப் பிரதிகளையோ வாசிப்பதைவிட அதிகம் “தெலுங்குப் படங்களை” பார்க்கிறார் என்றே நினைக்கிறேன். இது அவரின் இலக்கியச் செயற்பாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது.

மொழி குறிவயமானதால் மொழியினூடாக இயங்கும், இயக்கப்படும் மனித உடல்களைக் குறிகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவது என்பது அதிகாரத்தின் பல நுண்ணலகுகளால் மூளையை வடிவமைப்பதாகவும் மாறிவிடுகிறது. இத்தகைய குறிவயமாக்கல் மொழிக்குறிகளின் பன்மைத்துவக் குறிப்புநிலைகளை அழித்து, தெரிபுகளை முதன்மையாக்கி அதிலும் மாறாத திட்டமிட்ட குறிப்பீடுகளை வடிவமைக்கிறது. இவ்வடிவமைப்புகளிலிருந்து உடல், பால், நிறம், மொழி, இனம், மதம் என்று பண்பாட்டுக் கருத்துருவ இயந்திரம் பல நிலைகளில் இயங்குகிறது. இக்கருத்துருவ இயங்குநிலை குடும்பம், சமூகம், கல்வி – மருத்துவம் – அறிவியல் முதலிய நிறுவனங்கள் என்றும், ஊடகங்கள் – தொழில்சார் நிறுவனங்கள் என்றும் கலை, இலக்கியம் என்றும் ஒழுக்கவியல் கூறுகளை முன்வைக்கும் இன்னபிற செயல்பாடுகள் என்றும் விரிகிறது. அரசு இயந்திரம் வரலாற்றுக் காலந்தோறும் தனது அதிகார மையத்திற்கு ஏற்ப இக்கருத்துருவ இயந்திரங்களை மாற்றி வடிவமைக்கவும் புதுப்பிக்கவும் தொடர்விக்கவும் செய்கிறது. இவ்வாறான செயல்பாடுகளினூடாக மனித உடல்கள் முழுமையும் கருத்தியல் இயந்திரங்களால் சிறையாக்கப்பட்டதாக மாற்றப்படுகிறது. இக்கருத்துருவ இயந்திரங்கள் குறிவயமாக இயக்கப்படுவதால் அதன் நுண்ணலகுகள் குறித்த அவதானிப்பின்றிப் பொதுப்புத்தியின் மந்தைத்தனம் கட்டியெழுப்பப்படுகிறது. இம்மந்தைத்தனங்களை நுண்ணலகுகளால் உருவாக்குவதும் நடைமுறை படுத்தலும் அதிகார இயந்திரங்களின் செயல்திட்டமாக இருக்கிறது. அந்தவகையில் ஷம்பாலா முக்கியத்துவமுடைய நாவலாகிறது. அதிகார இயந்திரத்தின் கருத்துருவ இயந்திரங்களாக இயங்கிய பிரதிகளையும், அவற்றோடு ஊடாடி விவாதித்தும் மறுத்தும் விமர்சித்தும் பகடிசெய்தும் வந்த பிரதிகளையும் தமிழ் இலக்கிய வரலாற்றில் பார்க்க முடியும். இந்த இரண்டாம் நிலையில் சித்தர் மரபு முதலியவற்றைக் கூற முடியும். ஷம்பாலாவை அப்படியான ஒரு தொடர்ச்சியில் பார்க்க முடியும்.

மனித மூளையை வடிவமைக்கும் செயல் திட்டத்தை எவ்வாறு அதிகார இயந்திரம் பல நுண்ணலகுகளால் கட்டமைத்துக் கண்காணிக்கிறது என்பதை நாவல் சமகால அரசியலை மையமாகக் கொண்டு இயங்குகிறது. அரசியல் அதிகாரம் தொடர்ந்து நிலைபேறாக்கம் செய்வதற்கு, கருத்துருவங்களை உருவாக்கல், நிலைநிறுத்தல் தேவையாகிறது. எனவே அதை நிலைநாட்ட சமூக, பண்பாட்டுத்தளத்தில் மனித உடல்களை வடிவமைத்து ஏற்பைச் செய்ய வேண்டியது தேவையாகிறது. அதன்பொருட்டே சமயம், இலக்கியம், ஊடகம், நுகர்வு பெருக்கப் பொறிமுறைகள் போன்ற கருத்துருவ நிறுவனங்களை இயக்குவதாக மாறுகிறது. இவ்வாறான நிலையில் குறிவயமான நுண்ணலகுகளால் கருத்துருவ இயந்திரம் இயங்குகிறது. அதிகார இயந்திரம் இவற்றை உணரும், விவாதிக்கும், பகுப்பாய்வு செய்யும் மனிதர்களைக் கண்காணிப்பது, அச்சுறுத்துவது, உளவியல்ரீதியான நெருக்கடியைத் தொடர்ந்து உருவாக்குவது என்று பல தளங்களிலும் இணையக் கண்காணிப்பு உட்பட விரிவாக இயங்குகிறது. இத்தகைய அதிகார இயந்திரத்தை இயக்கும் சக்திகள் வரலாற்றில் எவ்வாறு உற்பத்தியாகிறார்கள், அதற்கு மாற்றான மனித விடுதலை குறித்த சிந்தனையாளர்களை எவ்வாறு கட்டுப்படுத்துகிறார்கள் என்ற இருமை நிலையில் நாவல் பயணிக்கிறது. அந்த இருமை நாவலில் ஹிட்லர் X அமர்நாத் என்று கட்டப்படுகிறது.

திபெத்தில் உள்ள ஷம்பாலா என்கிற இடம் உலகின் அதிகார மையம் என்ற பழந்தொன்மத்தை ஹிட்லரின் வழியாகச் சமகால அரசியலுக்கு இடம்பெயர்க்கிறது நாவல். ஹிட்லர் எனும் தனிநபர் அதிகார மையமாக அதிகாரத்தின் பகுதியாக எவ்வாறு உற்பத்தியாகிறார் என்பதை நாவல் விரிவாகச் சொல்கிறது.

குடும்பம், கல்விநிலையம், பொதுவெளி என எங்கும் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக எதையும் துணிந்து செய்யும் ஒரு நபராக ஹிட்லர் பாத்திரம் வருகிறது. பள்ளிக்கு ஏன் வரவில்லை என ஆசிரியர் கேட்டதற்குத் தாய் இறந்துவிட்டதாகப் பொய் சொல்கிறான் ஹிட்லர். ஆசிரியர் அதிர்ச்சிக்குள்ளாகிறார். தன் தந்தை கட்டட வேலை செய்பவர். அவர் வேலைசெய்யும் கட்டடம் தன்னுடைய வீடு என ஆசிரியரிடம் பொய்சொல்கிறான். இவ்வாறான நடவடிக்கைகளால் வீட்டில் மோதல் வருகிறது. பின்பு அரசியலில் நுழைந்த ஹிட்லரை ஜூனியர் அமைச்சராக்கியதை முதலமைச்சரின் மனைவி விரும்பவில்லை. இரண்டாவது மகனை அமைச்சராக்க வேண்டுமென முரண்படுகிறார். அவரையும் அவர் மகனையும், “ என்ன ஸார் என் அமைச்சர் பதவியை நீங்கள் பெறுவது அப்படிப் பெரிய விஷயம்? என் உயிரை உங்களுக்குத் தருகிறேன்” (118) என்று சொல்லி தன் உடலில் பெட்ரோலை ஊற்றி அவர்களை வசப்படுத்துகிறான் ஹிட்லர். குஸ்தியின் மூலம் தோழனாக மாறிய ஏ.பி.சிங் இறுதிவரை உடன் நிழலாகப் பயணிக்கிறான்.

இவ்வாறாக ஹிட்லர் கதாப்பாத்திரம் அதிகாரத்தின் மையத்தை நோக்கிச் செல்வதற்கு அதிகாரத்தின் பகுதியாவதற்கு எதையும் செய்யத் துணிந்ததாகப் படைக்கப்பட்டிருக்கிறது. இதன்வழியாக அதிகாரத்தின் மைய உருவாக்கங்களை நாவல் மொழிகிறது.

இந்த அதிகார இயந்திரத்தின் செயல்படுதளத்தில் இயங்கமுடியாமல் லஷ்மன் போன்றோர் தவிக்கின்றனர். படித்து ஐ.பி.எஸ். அதிகாரியாக வந்தாலும் தலித் என்ற காரணத்தால் தன் சொந்த ஊரில் சீருடையுடன், செருப்பணிந்து இன்றும் செல்லமுடியா நிலையில் லஷ்மன் கதாப்பாத்திரம் வருகிறது. அதிகார அமைப்பு என்கௌண்டர் கொலையில் தலித்துக்களைப் பயன்படுத்துவது தொடர்கிறது(175). முதலமைச்சர், லஷ்மனனைப் பார்த்துக் கண்ணடிக்கிறார். அதன் பொருள் ஒருவரைக் கொலைசெய்வது என்பதை அதிகாரிகள் சொல்கின்றர். இங்கும் அதிகாரம் குறிவழியாகத் தனது செயலைச் செய்கிறது. தாழ்த்தப்பட்டவர்கள், பசுமாமிசம் சாப்பிடுபவர்களைத் தண்டிப்பதாய்வரும் தொலைக்காட்சி நிகழ்வு (73) போன்றவற்றையும் இதன் தொடர்ச்சியாகப் பார்க்கலாம். ‘ஸ்நூக்கர் கோல் அளவு கூட ஆட்சி சரியில்லை’ (178) என்ற குரல் இவைகளின் வழியாக நாவலில் வெளிப்படுகிறது.

பணமதிப்பிழப்பினால் நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. பழங்குடிகள் அதை ஏற்கவில்லை தனித்துவமாக இயங்குகிறார்கள். பணமதிப்பிழப்பு போன்ற சமூகத்தின் பல்வேறு சிக்கல்களை மறைக்கப் பொதுப்புத்தியில் முரண் அரசியலைப் பரப்பிவிட்டு மக்களைக் குழப்பத்திலும் சிந்தனையற்றவர்களாகவும் மாற்றிவிடும் போக்கிற்கு, கிணற்றில் விழுந்து இறந்த சிறுவனை அதிகாரிகளும், ஊர்மக்களும் ஆணவக்கொலை, இந்து, முசுலீம் என மாற்றி மாற்றிக் கூறுவதைச் சான்றாக்கலாம்.

பன்னாட்டு வணிக நிறுவனங்களின் வல்லாதிக்கம், பொருளாதார நெருக்கடி, இயற்கை, சுற்றுச்சூழல், வேளாண்மை பாதிப்பு, முதலிய பல சிக்கல்களைக் கண்டுகொள்ளாமலிருக்க/ திசைதிருப்ப மதம், சாதி முதலிய குறுங்குழு முரண்களை முன்னிறுத்தியும் நுகர்வுக் கலாச்சாரத்தைத் தீவிரமாக ஊக்குவித்தும் சினிமா, தகவல்தொடர்புச் சாதனங்களினூடாக மனித மூளையை மழுங்கடித்தும் சிதைக்கும் வேலைகளை அதிகார இயந்திரங்கள் பல நுண்ணலகுக் குறியமைவுகளால் செயல்படுவதை இந்த நாவலின் கதைப்போக்கினூடாக உணரமுடியும்.

கல்விசார் அறிவுத்துறைகளிலும் மத அதிகாரம் ஊடுருவி மனித உடல்களை அதிகார விதிகளை ஒழுக்கமாகக் கேள்வியற்றுப் பின்பற்றுவனவாகக் கட்டமைப்பதையும் நாவல் உணர்த்துகிறது. ‘ராபர்ட், விநாயக் என்ற பெயர்களில் உள்ள இளைஞர் மத அதிகார இயந்திரத்தை உண்மையென நம்பி பாதிப்புக்கு உள்ளாகி பின் அதிலிருந்து மீண்டு தெளிவுபெற்றவராகக் காட்டப்படுகிறார். மடாதிபதியின் தம்பி பாலியல் வன்புணர்வுச் சிக்கலில் மாட்டிக்கொண்டதால் ராபர்ட்டை அவனுக்குப் பதிலாகச் சிறைக்கு ஏமாற்றி அனுப்பிவிட்டார்கள். பின்புதான் ராபர்ட்டுக்குக் காரணம் தெரியவந்தது. இப்படியான நிலையிலிருந்து ராபர்ட்டுக்கு வலதுசாரி அரசியல்மீது வெறுப்பு வந்து பதிப்பக வேலைக்கு வந்துசேர்கிறார்’. இங்கெல்லாம் மதநிறுவனம் எளிய மக்களைக் கருத்துருவப் பொறிமுறையால் மூளைச்சலவைசெய்து ஏமாற்றுகிறது என்பதை நாவல் உணர்த்துகிறது. வரலாறு நெடுகிலும் மதமும் அரசதிகாரமும் கைகோர்த்துப் பயணிப்பதைப் பார்க்கிறோம். அரசதிகாரம் இன்றிச் சமய நிறுவனங்கள் நிலைபேறடையவில்லை. இவ்வாறான பல்வேறு நுண்ணதிகாரப் பொறிமுறைகளின் அலகுகளை நாவல் எடுத்துரைக்கிறது.

சிந்தனைப்போலிஸ் – சொற்களினூடாகக் கட்டுப்படுத்தும் பொறிமுறை

அரசு இயந்திரம் மனித உடல்களைக் கருத்துருவ இயந்திரங்களால் விலகாமல் தொடர்ந்து கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளாக, ‘ நாவலில் இராணுவ டாங்கியைக் கல்வி நிறுவனத்தின் முன் கட்டித்தொங்கவிடல், மதப்பிரச்சாரம் செய்தல், பசுவதை - ராமர் கோயில் கட்டினால் மூலதனம் பெருகும்’ போன்ற செய்திகளை முன்வைத்தல் முதலியனவற்றைக் காணமுடியும். அதைப்போலச் சிந்தனையாளர்களை, விடுதலை அரசியல் பேசுபவர்களைத் தீவிரவாதிகள், புரட்சியாளர்கள் என அடையாளப்படுத்தி ஒடுக்குதல் போன்ற செயல்திட்டங்களால் பாதிக்கப்படுபவர்களாக அமர்நாத், சுரேஷ் போன்ற கதாப்பாத்திரங்கள் வருகின்றன.

அமர்நாத் வரலாறு, அரசியல், இலக்கியம், அரசியல் என்று எழுதும் இடதுசாரி எழுத்தாளராக, சிந்தனையாளராக அறியப்படுகிறார். அவர்மீது உளவியல் ரீதியிலான தாக்குதலை மிக நுட்பமாகச் சிந்தனைப்போலிஸ் செய்கிறது. அமர்நாத்தின் மகள் அமரி, வீட்டில் உள்ளபோதே காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது எனப் பொய்த்தகவலைப் பரப்புகிறது காவல் துறை. இதனால் பதற்றத்திற்கு உள்ளாகிறது அமர்நாத்தின் குடும்பம். அமரி படிக்கும் பள்ளியிலும் பாதுகாப்பை உறுதி செய்கிறார்கள். சிந்தனைப்போலிஸ் வீட்டுக்கு வந்து அமர்நாத்தைச் சோதனையின்பேரில், ‘சிறுநீர் சோதனை, ஜட்டியின் அளவு பார்த்தல், மார்பளவு பார்த்தல்’ போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இவ்வாறான சிந்தனைப் போலிஸின் நடவடிக்கைகள் பகடியாகத் தோன்றினும் உளவியல் நெருக்கடிக்குள் அதிகார இயந்திரம் எவ்வாறு தள்ளுகிறது என்பதை வெளிப்படுத்த தவறவில்லை கதை. மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஒருவர் நூல்களின் வழி ‘சொல் தொகுப்பாய்வு’ செய்தல், மொழி, எழுத்து, கவிதை முதலியவற்றினூடு மனித மூளையின் சிந்தனையை அறிதல் போன்ற நிலைகளில் சிந்தனைப் போலிஸ் மிக நுட்பமாக இயங்குகிறது. ‘வாக்கியங்கள், சொற்கள், சொற்களுக்குக் கீழ் உள்ள சொற்கள், பத்தி என்று மனம் இயங்கும் விதத்தைக் கண்டுபிடிக்கும் முறையில்’ செயல்படுகிறது. பத்திரிக்கை, புத்தகங்கள், டி.வி என எல்லா இடங்களிலும் வார்த்தைகள் வழியாகக் கண்காணிக்கிறது (36). அரசின் கருத்துக்கு எதிராகப் பேசுபவர்களைக் கண்காணிக்கிறது. ‘நட்பு, அன்பு, அறிவு, தோழமை’ முதலிய பலவற்றையும் பயன்படுத்திச் சிந்தனைப் போலீஸ் இயங்குகிறது.

1600 பக்கக் கதை எழுதும் சினிமா எழுத்தாளர் நாவலில் வந்துபோகிறார். எழுத்தை ஒரு பண்டமாக, நுகர்வாக, வணிகமாகக் கருதும் போக்கை இதன்மூலம் நாவல் பகடி செய்கிறது. சினிமா சார்ந்து இயங்குபவர் அறிவுஜீவியாக, தலைசிறந்த எழுத்தாளராகப் பொதுப்புத்தியில் கட்டமைக்கப்படுகிறார்கள். அதாவது மூளையை மழுங்கடிக்கும் நுகர்வுக்கலாச்சாரத்தின் பகுதியாகச் சினிமா எழுத்தாளர்களின் இலக்கியங்களை நாவல் இனங்காணுகிறது.

சமகாலச் சூழலில் சாதியத்தின் போக்குகளை ஊக்குவிக்கும் சக்திகள் பெருகி, பெரியாரியச் சிந்தனைகள் பின்னடைவு கண்டுவருவதையும் நாவல் முன்வைக்கிறது. இவ்விடத்தில் இன்றைய பின்காலனியச் சிந்தனையினூடே அடையாள அரசியலின் பகுதியாகச் சாதியம், பாலினம் போன்ற நவீனத்துவச் சிந்தனைக்கு முன்பான பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைப் புதிய வடிவில் மீள்கட்டமைப்பு செய்யவிழையும் போக்கு பெருகி வருவதைப் பார்க்கிறோம். அதன் ஒரு பகுதியாகவும் இப்பகுதியைக் காணவியலும்.

குறிப்பான்களின் மோதல்களம்

குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்குமான உறவு இடுகுறித்தன்மையானதாகிறது. ‘ம-ர-ம்’ என்ற ஒலிக்கும் அது குறிக்கும் மரம் என்ற பொருளுக்குமான உறவு என இதைக் கூறலாம். இவ்வுறவு இடுகுறித்தன்மையானது. சொன்மை, பொருண்மைக் கருத்தாக்கங்களும் இவற்றோடு இணைத்துக் காணவேண்டியவை. இங்கே தெரிநிலை- குறிப்பு என்கிற மொழியின் பல்வேறு பொருண்மைவடிவங்கள் சூழல் சாத்தியங்களை உள்ளடக்கி இயங்குகிறது. ஆனால் குறிப்பான்- குறிப்பீட்டு உறவுகளையோ பொருண்மைத் தளங்களையோ அதிகாரக்கட்டமைப்புகள் திட்டமிட்டதாக மாறாததாக வடிவமைக்க முயல்கிறது. அவ்வாறான முயல்தல் முற்றதிகார மாறாத குறிவயமாகக் கட்டமைக்கிறது. அதாவது அதிகார அமைப்புச் சொற்கள், வாக்கியங்கள் என்கிற மொழித்தொகுதியின் பல்வேறு பொருட்சாத்தியக்கூறுகளைப் பின்னுக்குத் தள்ளி தான் கட்டமைக்கவிரும்பும் அர்த்தவடிவங்களை நிலைபேறாக்கம் செய்ய விரும்புகிறது. சமய - பண்பாடுக் குறிகள், கட்சி – அரசியல் குறிகள், நிறுவனக் குறிகள், தனிநபர் குறிகள், ஊடகக் குறிகள் முதலியவற்றின் செயல்தளங்கள் என்றெல்லாம் காணமுடியும். ஷம்பாலா இவ்வாறு அதிகாரக் கட்டமைப்பின் குறிவயப் பொறிமுறை எவ்வாறு கருத்துருவ இயந்திரங்களின் வழியாக இயங்குகிறது என்பதைப் புனைகிறது.

மொழிக்கிடங்கின் முந்தைய குறிவயக் கருத்தாக்க உறவுநிலைகள் மீது புதிய போக்குகள் தாக்குதல் நிகழ்த்தி அவற்றை மறுகட்டமைப்பு செய்யும் நீக்கவும் செய்யும். ஆனால் கருத்துருவ இயந்திரங்களால் நிலைபேறாக்கமடைய விரும்பும் அதிகார இயந்திரம் இம்மொழிக்கிடங்கின் பன்மைச் சாத்தியங்களின் மீது தாக்குதல் தொடுத்து குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்குமான இடுகுறித்தன்மையைப் பின்னடையச் செய்து தான் நிறுவவிரும்பும் காரண நிலைக்கு நகர்த்தவே விரும்புகிறது.

குறிகள் உருவாக்கும் முந்தை மனக்கருத்தின்மீது ஆதிக்க வினைபுரிந்து அதை நீக்கம் செய்து தன் அதிகாரத்தின் வழி புதியதை உருவாக்குகிறது. நாவலில் ஹிட்லர், ஏ.பி.சிங், முதலமைச்சர், மதுசூதனன் போன்ற குறிப்பான்கள் தங்களுக்கிடையில் தாங்கள் உருவாக்கும் குறிப்பீட்டு ஒத்திசைவுகளால் ஒரு அதிகாரத் தொகுதியாக இயங்குகின்றன. இத்தொகுதி மற்றமைகளை இயக்குகிறது. அவ்வொத்திசைவு அதிகாரக் கருத்துருவ இயந்திரத்தின் கூட்டிணைவாகிறது. இதற்கு வெளியேயுள்ள அல்லது முந்தைய நிலைகளை அல்லது இத்தொகுதியின் ஆதிக்கத்தை எதிர்க்கும் தெரிபு, குறிப்புப் பொருண்மை வடிவங்களைக் கட்டுப்படுத்தவே விரும்புகிறது. அதாவது நாவலில் அமர்நாத், அமரி, சுரேஷ், ராபர்ட் - விநாயக், கன்னையாவின் அம்மா போன்ற இன்னொரு குறிப்பான்களின் குறிப்பீடுகளைக் கட்டுப்படுத்துகிறது. இந்த இரண்டாம் தொகுதி ஒடுக்கப்படும் தொகுதியாகிறது. இந்தவகையில் நாவலுள் குறிப்பான்களின் மோதல்களம் ஏற்படுகிறது. எனவேதான் சொற்களை, சொற்களைக் கையாள்பவர்களை, சிந்தனையாளர்களைச் சிந்தனைப்போலிஸ் வழியாகக் கண்காணிக்கிறது. சொல்தொகுப்பு, பகுப்பாய்வுகள் என நாவலில் முன்வைக்கப்படுகின்றன. மொழிக்கிடங்கின் (Langue) பன்மைச் சாத்தியங்களைப் பேச்சில் (Parole) கட்டுப்படுத்த நெருக்குதலைத் தொடுக்கிறது. அதிகாரக்கருத்துருவ இயந்திரம் உருவாக்கும் திட்டமிட்ட/ புதிய குறிப்பீட்டு வடிவங்களை இனங்காட்டும் இடத்தில் சொற்களைக் கையாளும் சிந்தனையாளர்கள் இருப்பதால் ஒடுக்குகிறது. இவற்றிலிருந்து விலகி தனித்தியங்கும் முந்தைய வடிவங்கள் (பழங்குடி வாழ்தல்) பாதிப்பின்றி இருக்கின்றன. இவ்விரண்டினூடாக ஊடாடும் நிலையும் (கன்னையாவின் அம்மா பணமதிப்பிழப்பால் இறத்தல்) பாதிப்பிற்கு உள்ளாகிறது. இவ்வாறு நாவலை, குறிச்சொற்களினூடாகக் குறியியல் மோதல்களமாக வாசிக்க முடியும். சிந்தனைப்போலிஸ், சொற்களைக் கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் பொறிமுறைகள் இதற்கான சாத்தியமாக அமைகின்றன.

அமர்நாத் கதாப்பாத்திர நினைவினூடாக முன்வைக்கப்படும் பகுதி இந்நாவல் சவால்களை நோக்கிச் செல்வதன் தேவையை உணர்த்துகிறது. “உலகம் முழுவதும் எதேச்சாதிகாரப் போக்குள்ளவர்கள் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஜனநாயகப் பண்புகளைத் தோண்டிப் புதைக்கும் நபர்களும் இயக்கங்களும் வெற்றி பெற்று வருகிறார்கள். தங்களுக்குக் கஷ்டம் கொடுத்தாலும் மக்கள் அந்த எதேச்சாதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதை விளக்கிக் கூறுவதற்கு இன்றைய அறிவுத்துறை வளரவில்லை போலுள்ளது” (127-128) என்ற மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறது. இக்கேள்வி மிக முக்கியமான இடைவெளியை, காரணத்தைக் கண்டறிய வேண்டிய தேவையை உணர்த்துகிறது. சிந்தனையற்ற அறிவுமறுப்பைக் கொண்டாடும் நுகர்வியத்தை ஊக்குவிக்கும் பன்னாட்டு முதலாளிய நிறுவனங்கள், அதன் பகுதியான தகவல் தொழில்நுட்ப வலைப்பின்னல்கள், அரசியல் -அதிகார அமைப்புகள், மதம்- சாதி முதலிய குறுங்குழுவாத முரணரசியல்கள் முதலியவற்றின் கூட்டிணைவுவடிவான அகப்புற நுண்ணரசியலின் இயங்கியல் தனிமனித- சமூகத்தன்னிலைகளை அழித்தொழிக்கும் கருத்துருவச் செயல் தளம் என்பதை உணராதவரை ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழாது என்பதை நாவல் உணர்த்துகிறது.

அடால்ப் ஹிட்லரின் நவீன செயல்வடிவமாக ஜுனியர் அமைச்சர் ஹிட்லர் நாவலில் முன்வைக்கப்படுகிறார். அந்த அதிகாரத்தின் நுண்ணியச் செயல்வடிவங்களாக நாவலின் தொடக்கம் அமைகிறது. ஹிட்லர் என்கிற தனிநபர், அதிகார இயந்திரத்தின் பகுதியாகத் தோற்றம் பெறுவதைக் குறித்த ஒரு பின்னோக்குநிலையிலும் சமகாலத் தன்மையிலும் என முன்னும் பின்னுமாக மாறிமாறி கதை பயணிக்கிறது. ஹிட்லருடன் இணைபிரியாது தொடரும் ஏ.பி.சிங்கின் நினைவுகளும் இவ்வாறே கடந்தகாலத்துக்கும் நிகழ்காலத்துக்குமான ஊடாட்டமாக அமைகின்றன. இவ்வாறான கதைப்போக்குச் சமகாலக் கருத்துருவ அதிகார இயந்திரத்தின் தோற்ற நிலைகுறித்த ஒரு புலனாய்வாகவும் அமைகிறது. அதாவது அமர்நாத் X ஹிட்லரின் நிகழ்காலம் ஒன்றுடனொன்று முரண்பட்டு நின்றாலும் அமர்நாத் எனும் பாத்திரத்தினூடே கதைசொல்லி ஹிட்லரின் கடந்தகாலத்தை ஊடுருவிப் பார்க்கும் புலனாய்வாளர்போல் இயங்குகிறார். ஹிட்லர் எனும் குறிப்பான் அமர்நாத் எனும் குறிப்பானின் குறிப்பீட்டைத் தீர்மானிக்கும் சக்தியாக எவ்வாறு வடிவம் பெறுகிறது என்பதைக் கதைசொல்லியின் எடுத்துரைப்பு அமைகிறது.

இவ்வாறு நாவல் இருமையின் இயங்கியலை முதன்மையாக முன்வைப்பினும் மதம் – சாதியம் முதலிய முரண்போக்குகள், நுகர்வியப் பண்பாடு, பன்னாட்டு வணிக நிறுவனங்களின் நுண்ணிய வடிவங்கள், தகவல் தொழில்நுட்பப் பொறிமுறைகளின் தொகுதி எனப் பன்மைத்துவங்களின் கூட்டிணைவாகவே அதிகார மையங்கள் இயங்குவதைக் கதைப்போக்கினூடாக உணர முடியும். இவற்றைக் கடப்பதற்கான அறிவார்த்த உரையாடலை முன்வைக்கும் நிலையில் ஷம்பாலா முக்கியமான அரசியல் நாவலாகிறது.

தகப்பன் கொடி, வல்லிசை –ஆகிய இரு நாவல்களை அடுத்து அழகிய பெரியவனின் மூன்றாவது நாவல் இப்போது வந்துள்ளது. வட மாவட்டப் பகுதிகளில் இருந்து நம்பிக்கையளிக்கும் விதத்தில் எழுதி வரும் ஒரு சிலருள் அழகிய பெரியவனும், கவிப்பித்தனும் முன்னோடிகளாக விளங்குகின்றனர். ஏழு சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், நான்கு கவிதைத் தொகுதிகள் –ஆகியவற்றைத் தந்திருக்கும் படைப்பாளியான அழகிய பெரியவன், இப்போது தன் மூன்றாவது நாவலையும் வெளிக் கொணர்ந்திருக்கிறார்.

இவரெழுதியவற்றுள் மிகப்பெரும்பான்மையான எழுத்துகளைத் தொடர்ந்து வாசித்து வந்திருப்பவன் என்ற முறையில், இந்த நாவலையும் வந்த உடனேயே வாசித்தேன். தமிழ்க்கனவு என்ற அமைப்பின் சார்பில் நவம்பர் எட்டாம் நாளன்று இந்த நாவலுக்கான அறிமுகக் கருத்தரங்கு இணையவழியில் நடைபெற்றது. தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைப்பதிவாளர் முனைவர் கு.சின்னப்பன், கவிஞர் யாழன் ஆதி, ஆவணப்பட இயக்குனர் பாலா, எழுத்தாளர் கம்பீரன், கமலாலயன் ஆகியோர் இந்த நாவல் குறித்து அவரவர் பார்வைகளை முன்வைத்தனர். ஐ.ஜ.மா. இன்பகுமார் தலைமை வகித்து நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

நாவல் வகைமைகளில் சுயசரிதைத் தன்மை வாய்ந்த நாவல் வகை ஒன்று உண்டு. பயோ ஃபிக்‌ஷன் என்ற அந்த வகை நாவலாக இதைக்கொள்ளலாம். அழகிய பெரியவன் மேற்கண்ட நிகழ்வின் இறுதியில் ஆற்றிய ஏற்புரையில் இந்த அம்சம் பற்றிக் குறிப்பிட்டார். பொதுவாக இந்தவகை நாவலை எழுதுவதற்கு அசாத்தியமான மனவலிமை வேண்டும். குறிப்பாக, மனதுக்கு மகிழ்ச்சி தராத, நினைத்தாலே மனம் குன்றி, அவமானமாக உணர வைக்கும் கசப்பான அனுபவங்களைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதுவது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமில்லை. அது ஒரு சவால். அந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு, வெற்றிகரமாக இந்த நாவலைத் தந்திருக்கிறார் அழகிய பெரியவன்.

நாவலின் தலைப்பே ஒரு புறனானூற்றுப் பாடல் வரியிலிருந்து பெறப்பட்டதாக அமைந்து, கதையின் கருப்பொருளை ஒரு விதத்தில் சுட்டி நிற்கிறது. 140- வது பாடலில் அவ்வை எழுதிய பாடல் வரி இது. வறுமையும், இல்லாமையும் உந்தித்தள்ள, உணவுக்கு வழிகேட்டு ஆளுகிற மன்னன் முன் போய் நிற்கும் ஏழைக்கவிஞர்களிடம் யானையையும் குதிரையையும் வாரி வழங்கும் வள்ளல்களை என்ன சொல்வது?” நாங்கள் வயிற்றுக்குச் சோறு பொங்குவதற்குக் கொஞ்சம் அரிசி கேட்டால் யானையைக் கொடுக்கிறாயே, இதை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்வது?” என்று கேட்கிறார் அவ்வை. நாம் வாழ்கிற இந்தச் சமகாலத்து மன்னர்களும், சக்கரவர்த்திகளும் இதே போல்தானே மக்களிடம் கோமாளித்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள்? அதிகாரம் என்கிற விக்கிரமாதித்தன் சிம்மாசனம், மேலே ஏறி உட்கார்ந்ததும் அந்த ஆள்வோரின் பண்புகளைத் தலைகீழாக மாற்றும் வல்லமை கொண்டதாக இருக்கிறது. அது செய்யும் மாயம் அப்படி!

நாவலின் களம் கோட்டையூர் வேலைவாய்ப்பு நிலையம். அங்கே போய்த் தனது கல்வித்தகுதி, பிற தகுதிகள் தொடர்பான சான்றிதழ்களைச் சரிபார்க்கக் கொடுக்கிறான் கவசிநாதன். மிகவும் தயக்கமும், கூச்சமும், தாழ்வு மனப்பான்மையும் கொண்ட ஓர் எளிய, சராசரி இளைஞன் அவன். கல்லூரிக்குப் போய் முதுநிலைப் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று கனவு கண்டவன். வீட்டின் சூழல் அந்தக் கனவை நனவாக்க உதவும் நிலையில் இல்லை. எப்படியோ போராடிப் படித்து, இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பவன் அவன். பி.எட். படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படாதபாடுபட்டு ஆசிரியர் வேலைக்கான அந்தத் தகுதியுடன் வேலைக்காகக் காத்திருக்கிறான். செய்தித்தாளில் வரும் அறிவிப்பு, தூர்ந்து போய்க் கிடக்கும் அவனுடைய மனக்கேணியின் ஊற்றுக்கண்களைத் திறந்து விடுகிறது. அரசு அறிவிப்பின்படி, ஐந்தாயிரம் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். அதற்கான முதல்படியாகத் தகுதியுள்ள, ஆசிரியப் பயிற்சி பெற்ற போட்டியாளர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடக்க இருப்பதாகச் செய்தி சொல்லுகிறது. எனவே, இந்தத் தடவையாகிலும் அந்த வேலை வாய்ப்பு நிலையத்தின் மூலம் ஒரு வேலை கிடைத்து விடாதா என்ற நப்பாசையுடன் அங்கே போய் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரின் முன்னால் நிற்கிறான் கவசி.

இம்மாதிரி அலுவலகங்களில், கவசிநாதன் போன்ற தலை காய்ந்த இளைஞர்களுக்கு என்ன நேருமோ அதுதான் நடக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும், தன் மனதில் எழுந்த ஓர் எளிய கேள்விக்கு அந்த அதிகாரியிடம் மறுமொழி கிடைக்கும் என்ற ஆவலில் உரையாட முற்படுகிறான் அவன். அவ்வளவுதான்; அங்கே ஒரு கலவரமே மூண்டு விட்டது என்று ஒரு சித்திரத்தைத் தீட்டும் வகையில் அதிகாரியின் எதிர்வினை அமைகிறது. கவசிநாதனைத் திட்டி, ‘யூஸ்லெஸ், யூஸ்லெஸ்’ என்று கத்திக் கூப்பாடு போட்டு முரட்டுத்தனமாகத் தள்ளி விட்டு விடுகிறார் அதிகாரி. அதோடு விடாமல் தாக்கவும் செய்கிறார். அலுவலகப் பணியாளர்கள் ஓடி வந்து கவசிநாதன் எங்கே எதிர்த்துத் தாக்கி விடுவானோ என்ற அச்சத்தில், அவனைப் பிடித்து உட்கார வைத்து ஓர் இரண்டு மணி நேரம் வரை அங்கேயே அலுவலகச்சிறையைப் போல அவனை முடக்கி விடுகின்றனர்.

கவசிநாதன், குடிபோதையில் அலுவலகத்தினுள் அத்துமீறி நுழைந்து, ரகளைச் செய்ததாகவும், தகாத வார்த்தைகளால் அதிகாரியை ஏசியதாகவும், தாக்கியதாகவும், சுமார் இரண்டு மணி நேரம் தனது கடமையைச் செய்ய விடாமல் அவரைத் தடுத்து ரவுடித்தனம் செய்ததாகவும் போலீசில் புகார் தருகிறார் அந்த அதிகாரி. மாவட்ட நிலையில் உள்ள அதிகாரியின் செல்வாக்குக்குக் கட்டுப்பட்டவர்கள்தாமே காவல் துறையினர்? தந்திரமான முறையில் நீதிமன்றம் மூலம் கவசிநாதனுக்கு இரண்டு சம்மன்களை முதலில் அனுப்பாமலே அனுப்பியதாக ஜோடனை செய்கின்றனர். அவன் விசாரணைக்கு வராமல் தலைமறைவாக இருப்பதாகக் கூறி மூன்றாவது சம்மனுடன், பிடி வாரண்ட்டையும் எடுத்துக்கொண்டு ஒரு கான்ஸ்டபிள் கவசிநாதனின் சொந்த ஊரான கோலப்பேட்டைக்கு வருகிறார். முந்தின இரண்டு சம்மன்களை சர்வ் செய்யாமலேயே நேரடியாகப் பிடி வாரண்ட்டுடன் வந்து நிற்கும் காவல்துறை ஆளிடம்,கவசிநாதனைப் போன்ற ஓர் எளிய மனிதன் எப்படி எதிர்வினையாற்றுவான்? பயந்து நடுங்கி, வீட்டில் மனைவி, அப்பா, அம்மா எல்லாருடனும் சேர்ந்து மனம் கலங்கித் தவித்து மாய்கிறான் அவன்.

நாவல் தொடங்குவது, கவசிநாதன் மனைவி பூரணியுடன் டூ வீலரில் வீட்டுக்குத் திரும்பும் போது போலீஸ்காரர் வழி மறித்துச் சம்மனை சர்வ் செய்யும் இந்த இடம்தான். வேலைவாய்ப்பகத்தில் அவமானப்பட்டு, அடிவாங்கி, நொந்து நூலாகி வந்து தவித்துக் கொண்டிருக்கும் தன்னையே குற்றவாளியாக்கி, அதிலும் ’தலைமறைவாக’ இருப்பவனாகச் சித்தரிக்கும் இந்தச் சம்மனை எப்படி எதிர்கொள்வது? வீட்டில் விஷயம் தெரிந்ததும் அம்மா குமுறி வெடிக்கிறாள் : “ கேள்வி கேட்டதுக்கா எம்புள்ளயப் போலீசு புடிக்கும்? கொறப்பாட்ட ஆபீசருங்க கிட்டதான சொல்ல முடியும் ? என்ன இருந்தாலும் நியாயம்னு ஒண்ணு கீதுல்ல? எம்புள்ள அப்பாவி…”

‘பரிவு மிகுந்த ஓர் அம்மாவின் சொற்கள் மட்டுமா இவை? மனித மனம் நாடும் நீதியின் குரலா? பரிவும் நியாயமும் அம்மாவுக்கு ஒன்றுதானே?’ – என்று கவசிநாதனின் உள்ளே எதுவோ சுரந்து தளும்புகிறது. இங்கே இருந்து அந்தப் பஞ்சப்பராரிக் குடும்பம் நடத்தும் நீண்ட நெடிய போராட்டமே நாவலாக விரிந்து செல்கிறது. இவர்களின் சொந்த ஊர்- ஒன்றல்ல; மூன்று ஊர்கள் ! லட்சுமியாபுரம், நல்லச்சேரி, கோலப்பேட்டை … எல்லா உழைக்கும் மக்களைப்போல, இந்தக் குடும்பமும் ஊர் ஊராய்ப் புலம்பெயர்ந்து பிழைப்புத் தேடித் திரிவதுதான். அப்படி இடம்பெயர்ந்து போகையில், வழியெல்லாம் விசாரிக்கிறவர்களிடம் அழுகையையே மறுமொழியாகத் தந்து போகிறவர்கள்.

அழகிய பெரியவனின் கதைமாந்தர்கள் மிகவும் எளிய மக்கள். ஓடுக்கப்பட்டு வாழ்பவர்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் வயிற்றுப்பாட்டுக்காக வழி தேடி மல்லுக்கட்டுகிறவர்கள். ஏதேனும் ஒரு வழி கிடைத்து, அந்தப் போராட்டக் களத்திலிருந்து மீண்டு வர முடியுமா என்று ஏங்கித் தவிப்பவர்கள்.

கவசிநாதன், இந்த நெருக்கடியிலிருந்து தான் விடுபட்டு வந்து விட்டால் போதும் என்று மட்டும் நினைத்து அதோடு நின்று விடவில்லை. எந்தத் தவறும் இழைக்காத தன்னைத் தாக்கி, அவமானப்படுத்தி, இப்போது குற்றவாளிக் கூண்டிலும் நிறுத்தும் அளவுக்கு அந்த அதிகாரிக்கு அப்படியென்ன வன்மம் என்று விசாரித்து விட வேண்டும் என உறுதி கொள்கிறான். அன்று நடந்ததை நினைத்துப் பார்க்கிறான். அவன் மனதை இந்த நொடி வரை அசைப்பது ஒன்றே ஒன்றுதான் : “மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், இவனைப் பிடித்துத் தள்ளி, திட்டி, தாக்கியபோது, கண்ணாடித் தடுப்புகளுக்கு அப்பால் நின்றபடி வேடிக்கை பார்த்த அந்தக் கண்கள்! படித்த கண்கள். உதவி செய்வதற்கு ஓடி வராத, ஏனென்று ஒரு வார்த்தையும் கேட்காத கண்கள். ..” இந்தச்சமூகம், என்னைத் திரும்பிப் பார்க்க, நான் என்ன செய்திருக்க வேண்டும் ? அதன் முகத்தில் ஓங்கிக் குத்தியிருக்க வேண்டுமா?” –என்று அவன் மனம் உளைகிறது. வேலை இல்லாமல் வாழ்கிறவர்களின் வயிற்றுச்சுமை அதிகம்; புழுக்கள் கூடத் தம் மீதான தாக்குதலை எதிர்த்து முடிந்தவரையில் அசைகின்றன. இந்த மனிதர்களும், கவசிநாதனும் கூட எதிர்த்து நின்றார்கள்தாம்! ஆனால், அந்த எதிர்ப்பை யாரும் பொருட்படுத்துவதில்லை.

கவசிநாதனின் முப்பத்தி ஆறாண்டு கால வாழ்க்கையின் மீது, கனத்த காலணிகளால் நடந்து போன வடுக்களும் உண்டு; பூங்கால்களால் தவழ்ந்த பதிவுகளும் ஏராளமாயிருக்கின்றன. அவன், தனக்காகவும் குடும்பத்திற்காகவும் கிடைக்கின்ற வேலைகளை எல்லாம் செய்துதான் வந்திருக்கிறான். தோல் பதனிடுவோர் கூட்டுறவுச் சங்க வேலை, ஆங்கில நர்சரிப்பள்ளி ஆசிரியர், பெற்றோர் –ஆசிரியர் சங்க வேலை, சாலைகளில் கடந்து போகும் வாகனங்கள் கணக்கெடுப்பு, அரசியல் கட்சிகளுக்குப் பூத் சிலிப் எழுதுவது, ஸ்க்ரீன் பிரிண்டிங், சுவரெழுத்து விளம்பரங்கள் எழுதுவது, ஃபைனான்ஸ் கடையில் பில் போடுவது … இப்படி, செய்யாத வேலையில்லை.

ஆனால், இவன் நீதி கேட்டுப் போகும் இடங்களில், அதிகாரிகள் இவனுடைய அவல நிலைக்கு இவனேதான் காரணம் எனக் குற்றம் சாட்டுகின்றனர். சம்மன் சர்வ் செய்ய வந்த கான்ஸ்டபிள், முதல் இரு சம்மன்களையும் கொண்டு வந்ததாகவும், இவன் எங்கேயோ போயிருந்ததால் வீடு பூட்டி இருந்ததாகவும் கூசாமல் பொய் சொல்கிறான். “இல்லை சார், இப்ப நீங்க இந்தச் சம்மன் சர்வ் செய்யனும்னு என்னோட வீட்டு அடையாளம் கேட்டுத் தேடினதா ஜிட்டான் சொன்னாரே?” என்று கவசிநாதன் தயக்கத்துடனே கேட்டு விடுகிறான். “இதானே மாணான்றது ! இந்தத் திமிர் பேச்சுதான்…இப்பிடிதான அங்க போயும் பேசியிருப்ப? அதான் கேசு! திருந்த மாட்டீங்கபா…”

அதோடு விடவில்லை; “புத்தி எதுனா கீதா? வேல போட்டுத் தர்ற எம்ப்ளாய்மெண்ட் ஆபீசுக்கே குடிச்சிட்டுப் போயி கலாடா பண்ணிக்கிற? அதான் உம்மேல கேசு” என்று குற்றப்பத்திரிகையை நீட்டுகிறான் அந்தக் கீழ்நிலை அதிகாரி.

மாவட்ட வேலை வாய்ப்பு நிலைய அதிகாரி தன்மீது தாக்குதல் நடத்தியதைப் பற்றி, பெரியவர் செங்குட்டுவன் தந்த அறிவுரையின்படி மாநில வேலை வாய்ப்பு நிலைய ஆணையருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் கவசிநாதன் புகார்களை அனுப்புகிறான். கோட்டையூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்போகிறான். அங்கே அந்தக் காவல் நிலைய ஆய்வாளர் கவசிநாத னிடம் மாவட்ட அதிகாரி மீதே புகார் கொடுக்கிற அளவுக்கு வந்து விட்டாயா என்பது போலப் பேசி, புகார் தர வேண்டாம் என்கிறார். சமரசம் செய்து கொள்ளுமாறும் அறிவுரை வழங்குகிறார். கவசிநாதனின் நண்பன் முனிரத்தினம் வாதாடியபின் வேண்டாவெறுப்புடன் புகாரைப் பெற்றுக் கொண்டு ஒப்புகை தருகிறார் அவர்.

மாநில ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் நடந்தது என்ன என்று விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியதால், வேறு வழியின்றிக் கலெக்டரும் கவசியைக் கூப்பிட்டு விசாரிக்கிறார். முன்முடிவுகளுடனும், அதிகார தோரணையோடும் விசாரிக்கிற அந்தக் கலெக்டர், இவன் வேலையில்லாமல் இருப்பதற்கே காரணம், இவனுடைய சோம்பேறித்தனமும், திறமைக் குறைவும் தான் என்று சொல்கிறார். அங்கேயும் பெரியவர் செங்குட்டுவன் குறுக்கிட்டு கவசிநாதனுக்கு ஆதரவாக வாதிடும் போது, “இந்த மாதிரி உபயோகமற்ற ஆளுங்களுக்குச் சப்போர்ட் பண்ணிகிட்டு வராதீங்க”  என்று கலெக்டர் மறுக்கிறார்.

நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு நடந்து, எண்ணற்ற வாய்தாக்கள், விசாரணைகள் என்று மூன்று வருடங்கள் ஓடி விடுகின்றன. வழக்குரைஞர் முருகையன், பெரியவரின் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர். அவருடைய வாதத்திறமையால், குறுக்கு விசாரணைகளால் இறுதியில் கவசிநாதனை நீதிபதி விடுதலை செய்து விடுகிறார். ஆனால், கவசிநாதன் மாவட்ட அதிகாரி மீது கொடுத்த புகார், கிடப்பில் போடப்பட்டு விடுகிறது. நிராகரிக்கப்பட்டு விடுகிறது. மாநில வேலை வாய்ப்பு நிலைய ஆணையர் ஒருவர் குறுக்கிடாமல் இருந்திருந்தால் கவசிநாதனுக்கு நியாயம் கிடைத்திருக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான்… அதிகாரம் என்பது, ஒருபோதும் எளிய மக்களின் பால் அனுதாபமுடையதாக இருப்பதில்லை என்பதை இந்த நாவலில் வருகிற எல்லா அலுவலகங்களும் நிரூபிக்கின்றன.

கவசிநாதனின் மனைவி பூரணி, ஒரு முழுமை பெற்ற பாத்திரமாக வார்க்கப் பட்டிருக்கிறாள். குழந்தைகள் இருவரும், அப்பா அம்மாவும், மாமா தனகோட்டியும் கவசிநாதனுக்குத் துணையாக உறுதியுடன் நிற்கின்றனர். வேலை வாய்ப்பு அலுவலகம் முன்னால், கவசிநாதனுக்கு நீதி கேட்டு ஓர் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. பெரியவரின் நண்பரான சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் அங்கு வந்து உரையாற்றுகிறார். “ஏழைகள் எங்குப் போனாலும் பல நேரங்களில் அவர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை. நமக்கு முன்னால் ஒரு மர்மக் கோட்டையைப் போல் நின்று கொண்டிருக்கும் இந்த அலுவலகத்தில் கவசிநாதன் என்ற இந்த இளைஞர் தாக்கப்பட்ட செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். கூடவே ஓர் அவமான உணர்வும் தோன்றியது. அது எல்லா ஏழைகளுக்குள்ளும் பரவக்கூடிய அவமானம். இங்கு ஒரு மனிதன் ஏன் மனிதனாகவே பார்க்கப்படுவதில்லை? ஏன் சாதியாக, மதமாக, ஏழையாக, பெண்ணாக, கருப்பனாகப் பார்க்கப்படுகிறான்?

நமது நாட்டின் ஜன நாயகம் அனுமதித்திருக்கின்ற ஆகக்குறைந்த எதிர்ப்புணர்வின் வடிவம் இந்த ஆர்ப்பாட்டம். ஆனால், இதை நடத்துவதற்குக் கூட இரண்டு முறை நீதிமன்றத்தை பெரியவர் நாட வேண்டியிருந்தது. என்னைப் பொறுத்த அளவில் இந்தப் போராட்டம், குணாம்சத்தில் மிக மிக எளிய போராட்டம். ஆனால், இதையே நம்மால் தன்னியல்பாக நடத்திட முடியவில்லை. வேதனையோடு வெளியில் நின்று நாய்களைப் போலக் குரைத்து விட்டுப் போவதைத் தவிர நமக்கு வேறு என்ன வழி மிச்சமிருக்கிறது?”

இந்த உரையின் வழியே, இந்த நாட்டின் அதிகார அமைப்புகள் எளிய மக்களை நடத்தும் ‘லட்சணத்’தைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது நாவல். ‘கோலப்பேட்டையிலிருந்து நல்லூர் பதினைந்து கி.மீ. தூரம். சாலைகள் மிக நெருக்கடியானவை. இப்போது நல்லூரில் இரண்டு பேருந்து நிலையங்கள். சுற்றிலும் புதிய கட்டடங்கள். முன்னேற்றம் என்பது இப்படிக் கட்டடங்கள் கட்டு வதுதான் என்று மனிதர்களுக்கு யார் சொன்னார்கள் எனத் தெரியவில்லை’ என்று விமர்சிக்கிறது.

நாவல் நெடுக அழகிய பெரியவனின் பேனா உயிர்ச்சித்திரங்களைத் தீட்டிச்செல்கிறது. வழியில் தென்படும் இயற்கைக் காட்சிகள், சந்திக்கும் மனிதர்களின் குணாம்சங்கள், இடங்களும் – நில வெளிகளும் உணர்த்துகிற வாழ்க்கை அம்சங்கள் எல்லாவற்றையும் நெஞ்சைத் தைக்கும் விதத்தில் விவரிக்கிறார்அவர். “எங்கள் வாழ்வில், பூனையைப் போல் அலைந்தது துர்காலம். அப்பா அதை எவ்வளவு தூரத்தில் கொண்டுபோய் விட்டு விட்டு வந்தாலும் அது எங்கள் வீட்டுக்கே திரும்பத் திரும்ப வந்தது …” என்று கவசிநாதன் நினைவு கூர்கிறான்.

“இந்த அலுவலகத்திலிருந்து உயிரோடு திரும்பிப் போக மாட்டாய்” என்று மிரட்டப்படும் போது துணுக்குறாத மனம், வேலை கிடைக்காமல் போய்விடும் என்ற மிரட்டலுக்குப் பயந்தாக வேண்டியிருக்கிறது. “உயிரிழக்கும் பயத்தை விடவும் உயிர் வாழும் பயம் கொடூரமானது” எனக் கவசிநாதன் மனம் சோர்ந்து நினைக்கும் இடம் முக்கியமானது. ஒரு நிரந்தர வேலை இல்லாமல், மனைவி- குழந்தைகள்-குடும்பம் என்று அல்லாடித் தவித்திருக்கும் ஒவ்வொரு மனுஷியும், மனுஷனும் கவசிநாதனின் நினைப்போடு தங்களையும் பொருத்திப் பார்த்துக் கொள்வதைத் தவிர்க்கவே முடியாது.

கவசிநாதனின் அப்பா, தன் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கப் படும் பாடுகளைப் பற்றிக் கவசிநாதனின் நினைவுகள் எழுப்பும் உணர்வலைகள் மிகவும் கொடுமையானவை. பீடி சுற்றும் வேலையின் போது, புகையிலைத் தூளைச் சுற்றிக் கட்டுவதற்கான இலைகள் தூளுடன் கொடுக்கப்படும். அவற்றை நீரில் ஊற வைத்து அளவாக வெட்டி, தூளை உள்ளே வைத்துச் சுற்றி, நூலால் பீடியைக் கட்டுவார்கள். இலைகள் காய்ந்து உடைந்தோ, பூஞ்சை பிடித்துப் போயிருந்தாலோ அவை வீணானவையாகி விடும். எனவே பீடி எண்ணிக்கை குறையும். அப்போது அதற்கான பணம் கூலியில் பிடித்துக் கொள்ளப்பட்டு விடும். கிடைப்பதே அற்பத்திலும் அற்பமான கூலி. அதிலும் இப்படி வெட்டு! அப்போதெல்லாம்,  “இலைகளின் உடைசலுக்கும், சிதறும் புகையிலைத் தூளுக்கும் ஈடாகத் தன் சதையிலிருந்து கொஞ்சத்தை முதலாளிகளிடம் பிய்த்துக் கொடுத்து விட்டு வந்தார் அப்பா…” என்கிறான் கவசிநாதன்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தின் முன்னால் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் போது, ஒரு மவுனமான, ஆனால் உயிர்த்துடிப்பு மிக்க நாடகம் அந்தக் கூட்டத்தின் நடுவே அரங்கேறுகிறது : “நாங்கள் மாலை ஐந்து மணி வரை எதிர்ப்புணர்வைத் தெரிவித்திடும் வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளைப் பிடித்துக் கொண்டு அப்படியே மவுனமாக நின்றிருந்தோம். கூட்டத்தின் நடுவே நிற்க வைக்கப்பட்ட நான் அங்கிருந்து ஓர் அங்குலமும் நகரவில்லை. என்னருகில் பூரணியும், பிள்ளைகள் இரண்டு பேரும் நின்றிருந்தனர். எல்லாரும் பேசி முடித்த பிறகு அங்கு நெடுஞ்சாலை இரைச்சலையும் மீறி உருவான அமைதியில் பூரணியின் கண்களை நான் சந்தித்தேன். மெல்லிய அன்பு கசியும் கண்கள். என் தோள்களைத் தொடும் அளவுக்கு வளர்ந்து நிற்கும் மகள் கரிசனையோடு பார்க்கிறாள். இடுப்பு வரையே வளர்ந்திருக்கும் சின்ன மகன் அவ்வப்போது நிமிர்ந்து இன்னதென்று விளங்கிக் கொள்ள முடியாத பரிதவிப்புடன் என்னைப் பார்த்து விட்டு நெடுஞ்சாலையைப் பார்க்கிறான். என்னை அவன் அப்படிப் பார்த்து விட்டுத் திரும்புகையில், அவன் கையில் பிடித்திருக்கும் அட்டையின் வாசகம் என்னால் படிக்கும்படியாகத் தெரிகிறது. ‘ எங்களின் எளிய கூட்டைப் பிய்த்து எறிய வேண்டாம் அதிகாரிகளே…’ நான் உடைகிறேன். என் தலை கவிழ்கிறது. கழிவிரக்க உணர்ச்சியை அடக்கிக் கொள்ள மிகுந்த சிரமமாக இருந்தது. “

நாவல் நேர்கோட்டில் கதை சொல்கிறது. எளிய வாசகர் ஒருவரும் கூட, இந்த நாவல் முன் வைக்கும் வாழ்க்கையைத் தனது வாழ்க்கை அம்சங்களோடு உரசிப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்று முயன்றாராயின், மிக எளிதாகப் புரிந்து கொண்டு பாத்திரங்களின் வாழ்வனுபவங்களை உள்வாங்கிக் கொள்ள முடியும். இன்றைய நவீன இலக்கியப் போக்கின் செல்நெறிகள் குறித்துப் பேசுகிற எந்த ஒருவரும், சமகால வாழ்வின் நெருக்கடிகளைப் பற்றி எழுதப்படும் இத்தகைய நாவல்களைப் புறந்தள்ளிவிட முடியாது. சொல் முறையும், மொழிநடையும், உத்திகளும் இன்ன பிற தொழில்நுட்ப அம்சங்கள் எல்லாம் உடல்தாமே? உயிர் எதுவெனில், நாவலின் மையச்சரடாகப் பின்னப்பட்டிருக்கும் மனித வாழ்க்கையே. இந்த நாவல் ஓர் எளிய மனிதனின் துயர அனுபவத்தை மையமாக வைத்து இன்றைய அரசு அலுவலகங்களின் அதிகாரப் போக்கை அம்பலப்படுத்துகிறது. பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையே, கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நிலவ வேண்டிய ஆழ்ந்த அன்பின் புரிதலைப் பேசுகிறது. ஒரு குறிப்பிட்ட தருணத்தில் அநியாயமாகத் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒரு மனிதனின் மன உளைச்சலைக் காட்டுகிறது. அந்த மனிதனின் போராட்டத்திற்கு, உடனிருந்து உதவும் நண்பன் முனிரத்தினம், பெரியவர் செங்குட்டுவன், வழக்குரைஞர் முருகையன் ஆகியோரின் சொல்லும், செயல்களும் எப்படி ஒருமித்து ஒத்திசைந்து தோன்றாத் துணையாகத் திகழ்கின்றன என்பதை ஆவணப்படுத்துகிறது.

நீதிமன்ற நடைமுறைகளைப் பற்றி, வாய்தாக்கள் படுத்தும் பாடுகள் பற்றி நாவல் நம்பகத்தன்மை மிக்க ஒரு சித்திரத்தைத் தந்திருக்கிறது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு வேலை செய்து வரும் ஸ்டெனோகிராபர் பெண், கடைசி வாய்தாவில் கவசினாதன் வயதில் தனக்கும் ஒரு மகன் இருப்பதாலும், மனசாட்சிக்கு விரோதமாக, நடக்காத எதையும் நடந்ததாகச் சொல்லத் தன்னால் முடியாது என்று உண்மையின் ஒளி துலங்க சாட்சி சொல்லும் போது, அந்தப் பாத்திரம் விசுவரூபம் எடுத்து நிற்பதைக் காண்கிறோம். கவசிநாதன் விடுதலையாகி வெளியே வந்து கண்னீர் மல்க முருகையனின் கரங்களைப் பற்றிக் கொண்டு நன்றி சொல்லும் போது, எளிய மக்கள் தரப்பில் நின்று வாதாடும் மனிதர்களின் ஆகச்சிறந்த வகைமாதிரிகளாக அந்த வழக்குரைஞரும், பெரியவர் செங்குட்டுவனும், ஸ்டெனோகிராபரும் மிளிர்கின்றனர்.

கவசிநாதனின் அம்மா கதாபாத்திரம் பற்றி மட்டுமே ஒரு தனிக்கட்டுரை எழுதலாம். மகனின் மீதும், கணவனின் மீதும் எல்லையற்ற அன்பும், பாசமும், அக்கறையும் கொண்டவர் அவர். அதே அக்கறையின், அன்பின், பாசத்தின் மறுபக்கமாக, கடுமையான கண்டிப்பின் சிகரத்தில் சட்டென்று ஏறிப் போய் நின்று விடும் முரண்பட்ட ஆளுமையாகவும் இருக்கிறார். அந்த முரண், பகை முரண் அன்று; நட்பு முரண். அன்பின், அக்கறையின் மறுபக்கம் அந்தக் கண்டிப்பு.

இசையும், நூல்களும், இயற்கையின் மீதான் நேசமும் – என இவையெல்லாம் தான் கவசிநாதனின் பலங்கள். தயக்கமும், கூச்சமும், ஏழ்மையிலேயே வாடி வதங்கிப்போய்க் காலமெல்லாம் மூன்று வேளை வயிறார உண்ணக்கூட வழிவகையற்ற ஒரு சராசரி இளைஞனின் வகைமாதிரிப் பாத்திரமே கவசிநாதன். அவன் சில அரிசி வேண்டிப் போய் நின்றான். அதிகாரமோ அவனைக் கீழே தள்ளி மிதித்து நசுக்கவே முயன்றது. திமிறி எழுந்து நின்று நிமிர்ந்தான் அவன். சில கரங்கள் அவனுக்குக் கை கொடுத்தன. சலிக்காத ஒரு நெடிய போராட்டம் அவனை விடுதலை செய்தது. நம் காலத்து நாயகர்கள் இம்மாதிரி எளிய மனிதர்கள்தாம்! நாம் எழுத வேண்டிய காவியங்கள் இத்தகைய மனிதர்களின் வாழ்க்கைகளைத்தாம்! அழகிய பெரியவன் எழுதி விட்டார்!

மேல் செல்