கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

மூதந்தை திருவெழுத்து

மஞ்சுநாத்

பகிரு

மார்க்வெஸ் – மென்டோசா (ஆசிரியர்), பிரம்மராஜன் (தமிழில்) 2023 ₹350

னித மனம் ஒரு வடிவமைப்புக்குள் பொருத்திக் கொள்வதற்கு ஒருபோதும் விரும்புவதில்லை. அதன் இயல்பும் விரிவடையும் வெளியும் எல்லையற்றது. ஆனால்  மன எல்லையின் விரிவடையும் சாத்தியத்தை வாசகன் தனது செளகரியத் தன்மைக்கு பங்கம் வராது சுய விருப்பம் கொண்டு முடமாக்கி விடுகிறான். ஏதோவொரு வகையில் அசெளகரியமானதாக கருதப்படும் படைப்புகளின் தரிசனங்களை தவற விடுவதற்கு கூர்மையான வாசிப்புத்திறன் இல்லாமையே காரணம். இதனால் தொடர்ந்து தனது விருப்பத்தை சொறிந்துவிடும் படைப்புகள் மீது மட்டுமே செலுத்துகிகிறான்.

தமிழ் வாசகப்பரப்பு இதய பலவீனம் கொண்டதாகவும் எவ்வகையிலும் அதிர்ச்சியளிக்கும் நாவல்களை விரும்பாது ஒதுக்கி வைத்தக் காலங்கள் சற்று மாறிவிட்டதாகவே கருதுகிறேன். இதன் விகிதாச்சாரம் குறைவாக இருப்பினும் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதை உறுதியாகக் கூறமுடியும்

முன்னெப்போதையும் விட தமிழ் வாசகப்பரப்பில் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் அதிகம் வரவேற்கப்படுகின்றன. மொழிபெயர்ப்புகள், சொல்லப்படும் விஷயத்தில் மட்டுமல்லாது சொல்லப்படும் விதத்திலும் வாசகனை கவர்வதோடு அவனது அட்ரினலின் சுரப்பையும் அதிகப்படுத்துகிறது. 

ஒரு ஜெயிண்ட் வீலில் அமர்ந்து சுழலும் போதும் கூட அட்ரினலின் அதிகம் சுரக்கவே செய்கிறது. ஆனால் நாவல் வாசிப்பு என்பது வாசகனின் சுரப்பு தூண்டியாக மட்டும் செயல்படுவதென்பதை ஒரு வளர்ச்சியாக கருத முடியுமா...? ஒரு நாவலை தரிசனத்தின் மூலமாக செயல்பட வைப்பது அரிதாகவே நிகழ்கிறது, என்றாலும் குறைந்தபட்சம் எந்தவொரு படைப்பும் அதற்கான ஒளிக்கீற்றுகளை தன்னகத்தே கொண்டதாக திகழவேண்டும்.

உண்மையில் தற்கால தீவிர வாசகர்களின் ஒரு பகுதியினர் தரிசனங்களுக்கான ஒளிக்கீற்றுகளை மறைத்து வைத்திருக்கும் நாவல்களை தேடுவதில் அயற்சியுறாமல் தொடர்ந்து அதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அமைப்புவாதத்தின் அடையாளம் கொண்டு இயங்கி வரும் பல எழுத்தாளர்கள் தங்கள் நுண்ணுணர்வின் மீது எப்பொழுதோ சமாதி எழுப்பி விட்டார்கள். அவர்கள் வரையறுக்கும் எல்லைக்குட்பட்ட பெளதீகத் தன்மையின் சுதந்திரம் என்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது. அது இலக்கியத்தில் பல ஆண்டுகளாக உறைந்து போன அருங்காட்சியகத்தின் கொண்டாட்டம். நுண்ணுணர்வில்லாத எழுத்தாளர்கள் இருண்ட மூலையில் உழல்கிறார்கள். அப்படியிருப்பினும் அவர்கள் அதிகம் பேசுகிறார்கள். கருத்துரைக்கிறார்கள். தமிழ் இலக்கிய சூழலில் இப்பொழுது இது தான் பிரச்சனை.

நாம் நகர வேண்டியது அகவிடுதலைக்கான மையம் நோக்கி... கண்ணாம்மூச்சு விளையாட்டு போல் வாசகனை சுழலவிடும் குழந்தைத் தனமான படைப்புகளை விட விளிம்பிலிருந்து மையம் நோக்கிய பயணத்திற்கான சரியான வரைபடங்களை ஒரு நாவல் உருவாக்க வேண்டும். அது சிக்கலானதாக இருந்தாலும் சரி.

இல்லறவாசிகள் போன்று ஆழமான வாசிப்புக்கு வித்திடும் மொழிபெயர்ப்புகள் தமிழ் இலக்கிய பரப்பில் துணிச்சலாக கொண்டு வருவதற்கு காரணம் மேம்பட்ட வாசகப் பார்வையின் தேடல் தீவிரமாகி விட்டதற்கான அடையாளம்.

ஒரு நாவல் எழுத்தாளனின் சேகரிக்கப்பட்ட காட்சி படிமத்திலிருந்து விரிவடைகிறது. ஒரு நாவலில் கையாளும் எதார்த்தம் நிஜவாழ்விலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம். ஆனால் அது மனிதனின் அகத்துடன் நெருக்கமாக வினைபுரிகிறது. உலகெங்கும் நுண்ணுணர்வு மிக்க எழுத்தாளர்கள் சேகரிக்கும் காட்சிப் படிமங்கள் மாறுபட்டதாக இருந்தாலும் அது இணையும் புள்ளி புனைவின் விகாசிப்பை ஒன்று போலவே எதிரொலிக்கும்.

லத்தீன் அமெரிக்காவின் மிகச் சிறந்த தொன்மவியல் எழுத்தாளர் கேப்ரியேல் கார்சியோ மார்க்வெஸ் தனது உலகப் புகழ் பெற்ற ஸ்பானிய செவ்வியல் நூலான தனிமையின் நூறாண்டுகள் நாவலில் மெக்கேந்தோவில் [கற்பனை நகரம்] நுகர்வு கட்டமைப்புகளின் அங்கமாகவும் கனவாகவும் இருந்த இரயில் வரவைக் குறித்து இப்படி எழுதுகிறார்.

 "அது வந்து கொண்டிருக்கிறது. பயங்கரமாக ஒரு சமையலறை தனக்கு பின்னால் ... ஒரு கிராமத்தையே இழுத்து வருவது போல வந்து கொண்டிருக்கிறது. அந்த நொடியில் அச்சமூட்டும் எதிரொலி எழுப்பும் சீழ்க்கை ஒலியாலும் உரத்த மூச்சிறைப்பாலும் நகரமே அதிர்ந்தது. முந்தைய வாரங்களில் இருப்புப்பாதை பணியாளர்கள் கட்டைகளையும் தண்டவாளங்களையும் அமைத்துக் கொண்டிருந்த போது கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை. அது நாடோடிகளின் புதிய விந்தையாக இருக்கும் என்றே நினைத்தார்கள்."

தனிமையின் நூறாண்டுகள் 1967-ல் வெளியானது. ஆனால் மூலம் 2013-ல் தான் தமிழ் மொழியாக்கமாகிறது.

காட்சி படிமங்களின் சேகரிப்பு ஒரே மாதிரியாக நிகழ்த்தாலும் இங்கு நாம் கொண்டாடும் தமிழ் எழுத்தாளர் கரிசல் இலக்கிய ஞானி கி.ராஜநாராயணன் அவரது கோபல்ல கிராமத்து மக்கள் நாவலில் ரயிலின் வரவு குறித்து இப்படியாக விவரணப்படுத்துகிறார்.

... "ரெயிலையே பாக்காத 

சனங்க அது.

எப்பிடி இருக்கும்னுட்டும்

தெரியலெ"

..என்னம்மா வந்ததுங்கா.."

" வந்தது... பாரூ... கைகள் ரண்டையும் ஒசத்தி, தேவலோகத்திலிருந்து யானைக் கூட்டம் ஏறங்கி வரீசயா வந்த மாதிரி …" உடம்பைக் கொஞ்சம் பின்வாங்கி சாய்ந்துக் காட்டி ஓடும் கிராமவாச மனிதரோடு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகுண்னு நாமும் ஓட வைக்கும் எழுத்து.

"... இப்படி முதல்ல வந்த ட்ரெயினிலிருந்து வர்ற சத்தமும் பொசல்க்காத்து எறைஞ்சி வார மாதிரி நெருப்பும் புகையும் கக்கிக்கிட்டு வர்த பாத்துட்டு என்ன செய்றதுன்னு தெரியலெ.., "

விழுந்தாம் பாரு.., "

தற்கால வாழ்க்கை சூழலானது பெளதிக வாழ்வை மனிதனின் அகவெளியிலிருந்து பிரித்து முற்றிலும் அவனை அந்நியப்படுத்துவே முயற்சிக்கிறது. நாம் கண்களை திறந்து வைத்திருந்தாலும் காட்சிகளை உள்வாங்குவதில்லை.

கேப்ரியேல் கார்சியோ மார்க்வெஸ் குறித்து புரிந்து கொள்வதற்கும் மட்டுமல்ல தீவிர இலக்கியம் மற்றும் அரசியல் அடிநாதத்தின் அதிர்வை உணர்ந்து கொள்வதற்கும் இப்புத்தகம் சிறப்பான தேர்வு. கொய்யாவின் வாசனை (El Olor de la Guayaba) 1982-ஆம் ஆண்டு ஸ்பானிய மொழியில் வெளியானது. இதன் முதல் ஆங்கில மொழியாக்கம் ஆன் ரைட் (Ann wright) என்பவர் மூலம் 1983-ல் வெர்சோ (Verso) பதிப்பகம் வெளியிட்டது. கேள்விகள் மற்றும் விடைகளுக்கு இடையே நிலவும் ஆழமும் ஒளிவு மறைவற்றத் தன்மையும் மார்க்வெஸ் - மெண்டோசா இடையே நிலவிய நீண்ட காலம் நட்பின் கொடை. நாற்பது வருட கால உரையாடலின் குறிப்புகள் மார்க்வெஸ் பிம்பத்தின் மீது  நிழல் தராத வெளிச்சத்தை பாய்ச்சுகிறது. இந்நூல் மார்க்வெஸின் வம்சாவளி, குடும்பம், கல்வி, வாசிப்புகள், அவரது எழுத்தின் நுட்பம், அவர் எழுதிய நூல்கள், வாழ்க்கை சூழல், அவருக்கும் பெண்களுக்குமான தொடர்புகள், புராதான தொன்மை வழியும் மாயங்கள், அரசியல் தொடர்புகள், நட்பு என பல படிமங்களை ஆவணப்படுத்துகிறது.

மார்க்வெஸ் தனது துவக்கத்தை இவ்விதமாக கூறுகிறார். "நான் மிகவும் சந்தர்ப்பவசமாக எழுதத் தொடங்கினேன். என் தலைமுறையை சேர்ந்தவர்களால் ஒருவேளை எழுத முடியும் என்பதை ஒரு நண்பனுக்கு நிரூபிக்கும் பொருட்டும், பிறகு அது தரும் சந்தோஷத்திற்காகவும், இறுதியாக இந்த உலகத்தில் நான் நேசித்தது எழுத்தைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதற்காகவும் இப்பொறியில் வீழ்ந்தேன்.

ஒரு நாவலை என்றைக்கோ அவருள் உறைந்து போன படிமச் சித்திரத்திலிருந்து துவங்குவதாகக் கூறும் மார்க்வெஸ்தனிமையின் நூறாண்டுகள் [One Hundred Years of Solitude]  நாவலுக்கு பதினைந்து வருடங்களும், மூதந்தையின் அந்திமக் காலம் [Autumn of the Patriarch] நாவலுக்கு பதினெழு வருடங்களும், சாவின் முன் கூறப்பட்ட சரித்திரம் [Chronicle of a Death foretold] என்கிற நாவலுக்கு முப்பது வருடங்களுக்கு மேலாகவும் தனது தாங்கவியலாத கருபொருள் அவருக்குள் தாங்கி நின்றதாக கூறுகிறார்.

"சிறுகதை எனும் பணி பாலத்தைப் போல, உங்கள் பார்வையில் படாத பகுதியினால் ஆதரவாக பிடிக்கப்பட்டிருக்க வேண்டும்." என்னும் ஹெமிங்வேயின் கருத்தை தூக்கிப் பிடிக்கும் மார்க்கெஸ் அவரைப் பொறுத்தவரை ஹெமிங்வே ஒரு நாவலாசிரிர் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அவரை ஒரு அற்புதமான சிறுகதை ஆசிரியர் என்கிறார்.

இளம் எழுத்தாளர்களுக்கு தனது அனுபவத்தால் ஒரு அறிவுரையைத் தருகிறார். "நீங்கள் உங்கள் எழுத்துக் கலை, உத்திகள், வடிவமைத்தல்களின் வழிகள், நுணுக்கமான உள் வயமான பயணம் போன்ற யாவற்றையும் உங்கள் இளமையிலே நீங்கள் கற்றுக் கொண்டு விட வேண்டும். எழுத்தாளர்களாகிய நாம் கிளிகளைப் போன்றவர்கள் வயதான பிறகு நம்மால் பேச கற்றுக்கொள்ள முடியாது.

எழுத்தாளர் கி.ரா ஒருமுறை இசையைக் குறித்து பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. "இசை மீதான விருப்பத்தையும் திறனையும் கல்வி மூலம் திணிக்க முடியாது. காலையில் வீட்டில் ஊதுவத்தி ஏற்றி வைக்கும் போது நல்ல இசையையும் ஒலிக்கச் செய்ய வேண்டும். தூபப் புகை காற்றில் பரவுவது போல இசையின் அழகியல் சிறுவர்கள் மனதில் மெல்ல மெல்லக் கலந்து விடும். கல்வி முறையில் இசையின் நுட்பங்களில் திறன் பெற்றவர்கள் இயல்பான ரசிப்புத்தன்மையை அது அகற்றி விடுகிறது..."

ஒவ்வொரு எழுத்தாளனும் எழுத்தோட்டத்துக்கு தடையற்ற சூழலையே நாடுவார்கள். மார்க்வெஸ் காலையில் அமைதியாகவும் இரவில் களியாட்டம் நிறைந்ததாகவும் இருக்கும் வேசிகள் விடுதியே ஒரு எழுத்தாளன் எழுதுவதற்கு உகந்த பொருத்தமான இடம் என்கிறார். "எழுத்தாளர்கள் யாவருமே தனிமையானவர்கள். கடலின் மத்தியில் கப்பல் கவிழ்ந்து போன மாலுமிகள். எழுதுவது என்பது உலகிலேயே தனிமைப்பட்ட ஒரு தொழில். நீங்கள் என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்களோ அதை எழுதுவதற்கு எவர் ஒருவரும் உதவ முடியாது."

எழுத்தின் மேலான நுட்பத்தை ஒருவர் வாசிப்பின் வழியாக கண்டடைய முடியும். வாசிப்பின் ரசிப்புத் தன்மையும் புரிதலும் ஒத்திருக்க வேண்டிய அவசியம் கிடை யாது." எனக்கு பிடித்திருக்கிற புத்தகங்கள் அனைத்தும் அவசியமானது. சிறந்தது. என்று நான் எப்போதும் நினைப்பதில்லை. எனக்கு அவை வேறுபட்ட காரணங்களுக்காக பிடித்திருக்கின்றன. அவற்றுக்கான விளக்கத்தை அளித்து விடுவது எளிதானதல்ல."  தீவிர வாசிப்பு உலகம் விதந்தேந்தும் ஒரு எழுத்தாளனை உருவாக்கவும் செய்கிறது.  தான் எழுத்தாளனாகப் போகிறேன் என்பதைக் காஃப்காவின் மூலமாக கண்டுகொண்டதாகக் கூறும் மார்க்வெஸ் தனது பதினேழாவது வயதில் 'உருமாற்றம்' நாவலை படித்த போது அது தன்னை ஒரு எழுத்தாளனாக உருவாக்கப்போகிறது என்பதை அறிந்தார்.

'ஒருநாள் காலை அசெளகரியமான கனவுகளிலிருந்து கிரிகோர் ஸாம்ஸா விழித்தெழுந்த போது தனது படுக்கையில் ஒரு அரக்கத்தனமான பூச்சியாக தான் உருமாற்றம் அடைந்திருப்பதைக் கண்டான்.'

 "அடக் கருமமே..."

"என் பாட்டி இதுபோலத்தான் பேசிக் கொண்டிருப்பாள்" என நான் நினைத்தேன். அப்பொழுது தான் நான் முதன்முறையாக நாவலில் ஈடுபாடு கொண்டது…

மார்க்வெஸ் அவருக்கு பிடித்தமான மஞ்சள் நிறத்தை அதிர்ஷ்டமானதாக கருதினாலும் அது தங்க நிறம் அல்ல என்கிறார். அவர் தங்கத்தை மலத்துடன் அடையாளப்படுத்துகிறார். தனிமையின் நூறாண்டுகள் நாவலில் ஹோஸே ஆர்கேதியோ புயந்தியா உலோகங்களை தங்கமாக மாற்றுவதற்கான சூத்திரத்தை கண்டுபிடித்தவுடன் தன் மகனிடம் அந்த பரிசோதனையின் விளைவை காட்டுகிறான். மகன் சொல்கிறான் அது நாயின் மலத்தை போல் தோன்றுகிறது என்று.

அவரது முதல் நாவலான  'இலைப்புயல்' [Leaf Storm] மிகப்பெரும் தோல்வியடைந்து பதினைந்து ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு வெளிவந்த 'தனிமையின் நூறாண்டுகள்' நாவல் ஒட்டு மொத்த இலக்கிய உலகையும் அவர் மீது திருப்பியது. உண்மையில் இந்நாவல் மீதான அங்கீகாரத்தை அவர் விரும்பவில்லை இந்த நாவல் மார்க்வெஸ்ஸால் அடிக்கடி தொடங்கப்பட்டு கைவிடப்பட்ட ஒன்று.

அவர் எழுதியதில் அவருக்கு பிடித்தமானது 'மூதந்தையின் அந்திமக்காலம்' (Autumn of the Patriarch) ஆனால் இந்நாவல் குறித்து தமிழ் சமூகம் இதுவரை அறியாதது பெரும் குறையே. கொய்யாவின் வாசனை தமிழ் இலக்கிய சமூகத்தின் நாசி வழியாக சென்று அதன் வதனத்தில் ஏற்படுத்தும் மாற்றம் இனிவரும் காலங்களில் மார்க்வெஸ் குறித்த மொழியாக்கங்கள் நிறைய வருவதற்கு நல் வரவேற்ப்பாக இருக்கும். 

ஃபிடல் கேஸ்ட்ரோவுக்கும் மார்க்வெசுக்கும் இடையே நீண்ட காலம் (1960 முதல்) நெருங்கிய உள்ளார்ந்த நட்பு இருந்து வந்ததை யாவரும் அறிவர். ஃபிடல் கேஸ்ட்ரோ கூறுகிறார், "மறுபிறவி எடுத்தால் நான் ஒரு எழுத்தாளனாகவே விரும்புகிறேன்" இதன் உந்துதலை அவரது தீவிரமான புத்தக வாசிப்பு பழக்கம் வழங்கியிருக்கிறது. மார்க்வெஸ்  "ஃபிடல் கேஸ்ட்ரோ பெருவேட்கை கொண்ட வாசகர். தனது வினோத உதிரி நேரத்தை நிரப்புவதற்கான ஒரு நல்ல புத்தகத்தை எப்போதும் தன்னிடம் வைத்துக் கொண்டிருப்பார். ஒருமுறை இரவு வணக்கம் சொன்னபோது வாசிப்பதற்காக ஒரு புத்தகத்தை அவரிடம் கொடுத்து விட்டு வந்தேன். மீண்டும் அவரை அடுத்த நாள் காலை பண்ணிரெண்டு மணிக்கு சந்திக்கும்போது அவர் அந்த புத்தகத்தை முழுவதுமாக படித்து முடித்து இருந்தார். அவர் அவ்வளவு கவனம் மிக்க விடாமுயற்சியுடைய வாசகராக இருப்பதால் முரண்களையும் தகவல் பிழைகளையும் நீங்கள் அதிகம் எதிர்பார்த்திறாத இடங்களில் கண்டுபிடிக்கிறார். கப்பல் தகர்வுக்கு ஆளான கடலோடியின் கதையில் (The story of a ShipwrecKed Sailor)  அவர் படித்த பிறகு நான் படகின் வேகத்தை தவறாக கணக்கிட்டு இருக்கிறேன் என்றும் படகு வந்து சேரும் சமயம் நான் சொன்னது போலிருக்காது என்பதை சுட்டிக்காட்டுவதற்காக  நான் தங்கியிருக்கும்  விடுதிக்கே  வந்து விட்டார்.  அவர் சொன்னது சரி. சாவு முன் கூறப்பட்ட சரித்திரம் நாவலை வெளியிடுவதற்கு முன் அவரிடம் எனது கை பிரதியை எடுத்துச் சென்றபோது அவர் வேட்டை துப்பாக்கியின் அளவுகளில் இருந்த பிழையைச் சுட்டிக் காட்டினார். ஒருமுறை நல்ல இலக்கியங்களை நான் அவருக்கு பரிந்துரைத்த போது ஏற்கனவே அவற்றையெல்லாம் படித்து முடித்து விட்டார் என்பதை கண்டு ஆச்சரியமடைந்தேன். இலக்கிய உலகினை அவர் உண்மையாகவே விரும்புகிறார்.

மார்க்வெஸின் அரசியல் நிலைப்பாடு குறித்து மெண்டோசா கச்சிதமான குறிப்புகளைத் தருகிறார். பல ஐரோப்பிய அறிவு ஜீவிகள் செய்வது போல ஒரு இறுக்கமான வகையில் நீங்கள் கார்சியா மார்க்வெஸ்ஸை அணுகுவீர்களானால் அவரது அரசியலை எளிதாக புரிந்து கொள்ள முடியாது. அவர் காஸ்ட்ரோவின் நண்பர் ஆனால் சோவியத் அரசமைப்பையோ அல்லது கம்யூனிஸ்ட் உலகினை சாம்பல் நிற உடை அணிந்து ஆளும் அதிகாரமான பண்புடையவர்களையோ வியந்து போற்றுபவர் அல்ல... மேலும் பிற்போக்கு வாத, ராணுவ மைய, அமெரிக்க சார்புள்ள, வலதுசாரித் தன்மை மற்றும் சமரசமற்ற கன்சர்வேட்டிவ் தன்மை, சோவியத்சார்பு இடதுசாரித் தன்மை ஆகிய விஷ வட்டம் போன்ற மாற்றங்களை எதிர்நோக்கும் ஒரு கண்டத்தில் இவற்றுக்கிடையே பிற வகைகளான பொதுமக்கள் சார் ஜனநாயக தேர்வுகளையே விரும்புகிறார்.

உலகம் கொண்டாடும் எழுத்தாளர்களின் சுயவாழ்வில் இல்லறம் என்பது கசப்பாகவும், இல்லையெனில் மனைவியின் மீது துன்பத்தின் நிழலையும் கவிழ்த்து விடுகிறது. மார்க்வெஸ் தனது மனைவி மெர்ஸிடஸ் பற்றி பகிர்கிறார்.

"பணம் தீர்ந்து போனவுடன் அவள் என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அவள் எப்படி செய்தால் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கசாப்புக்காரன் எங்களுக்கு இறைச்சியை கடனாக தரும்படி செய்திருந்தாள். ரொட்டி சுடுபவன் எங்களுக்கு ரொட்டியை தரும்படி செய்திருந்தாள். வீட்டு உரிமையாளரை ஒன்பது மாதங்கள் வாடகைக்கு காத்திருக்கும் படி செய்திருந்தாள். என்னிடம் எதையுமே சொல்லாமல் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டாள். அப்போதைக்கு அப்போது ஐநூறு தாள்களையும் கூட கொண்டு வந்தாள். நான் என்றுமே அந்த ஐநூறு தாள்கள் இல்லாமல் இருந்ததில்லை. புத்தகம் முடித்தவுடன் (தனிமையின் நூறாண்டுகள்) கையெழுத்து பிரதியை தபாலில் பதிப்பகத்திற்கு அனுப்பியதும் மெர்சிடிஸ் தான்..."

மார்க்வெஸ்ஸின் படைப்புகள் வழியே பிரதிபலிக்கும் தனிமையின் கதிர்வீச்சுக்கு பின்னால் அவரது சொந்த வாழ்வின் அனுபவங்கள் மூலகமாக புதைந்திருக்கின்றன. ஒரு எழுத்தாளனின் படைப்புகளுக்குள் ஆழ்ந்து பயணிக்கவும், பல்நோக்கு பார்வை புலனுக்கு உரித்தான காட்சியை காணவும் இந்த கொய்யாவின் வாசனை ஜாலம் புரியும். லத்தீன் அமெரிக்க படைப்புகள் வழமையாக கொண்டிருக்கும் மொழியாக்கத்தின் சவால்களை மீறி பிரம்மராஜன் நிறைவான நூலைத் தந்துள்ளார்.

குறிச்சொற்கள்

மேல் செல்