கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

ஜின்னின் இருதோகை: ஒரு மறுவாசிப்பின் அலசல்.

சப்னாஸ் ஹாசிம்

பகிரு

கவிதைகள் காட்சிமொழி (Figurative language) சார்ந்து உறுதிபெறும்போது அவற்றின் கட்டமைப்பு அதிகக் கவனம் பெறமுடியும் அல்லது கவிதையின் அமைப்பை உருவற்றது(formless) என நிறுவ முடியும். அது கவிதைக்குரலின் மொழிவை அதன் படிமங்களிலிருந்தும் குறியீடுகளிலிருந்தும் தொன்மங்களிலிருந்தும் வடிவக்குறையிலிருந்து மேம்படுத்தலாம். அப்படி ஈழத்துக் கவிஞர் அனாரின் கவிதைகளை நுண்மை சார்ந்து அணுகமுடியும். ஜின்னின் இருதோகை தொகுப்பிலிருந்து அவருடைய கவிதைகள் கவிதைக்குரலின் மனோவியல் (Psychoanalytical) தொடர்பிலான ஆய்வொன்றை கட்டமைப்பு சார்ந்து வேண்டி  நிற்கின்றன. அது விரிவாக ஆராயப்படவேண்டியதொன்று.

"செவ்வகத்தை நான் வரைகிறேன்

தடுப்புகளைத் தாண்டுவதாக

நீ பாவனைப் பண்ணு..

கைகளை அகல விரித்து

பாதிக் கண் மூடி

உப்புக்கோட்டில் நிற்கையில்

நான் அறிவேன்..

ஏமாறுவது போல் நடிக்க வேண்டியது

எந்தக்கட்டத்தில் என்று..."

எனக் கவிதைக்குரல் கதையாடலின் தர்க்கமுரண்பாட்டை(logical conflict) கையாளும் விதம் அனாரின் கவிதைகளில் புத்துணர்வு தருவதாக இருக்கிறது. கட்டமைப்பு சார்ந்த Intertextuality உள்ள கவிதைகளைப் பின் நவீனத்துவ மூலங்களிலிருந்து அனார் அநாயாசமாக ஆரம்பிக்கிறார். இருத்தலியல் கோணத்திலும் மதிப்பீடுகள்(values) சார்ந்தும் கவிதையின் வடிவத்தைக் கனகச்சிதமாகத் தேவைக்கு மீறிய எந்தச் செருகலுமின்றிக் கவிதையாகத் தன்னை நிலைநிறுத்தி இருப்பது அனாரின் சாதனை எனலாம்.

"துணுக்குறும் மௌனத்தின் விதிமுறைகள்

பொய்த்தோற்றங்களின் இரைச்சலைத் தனக்குள்ளாகவே

நெரித்து ஒடுக்குகின்றன."

என உடல் கணுக்குகளுக்குள்ளே எறும்பு புற்றுகள் என்ற கவிதையில் புனைவுக்கும் யதார்த்தத்திற்குமிடையிலான உறுதியான நிலைப்பாட்டைக் கலை வடிவமாக ஒரு கவிதையாக மாற்றுவதில் அனாரின் முயற்சி metafiction சார்ந்து எடுபடுகிறது எனலாம்.

எழுத்துருக்கள் ஒரு நிகழ்வை, ஒரு காட்சியை, ஒரு பாடுபொருளை கவிதை என்ற வடிவத்தை நோக்கி இழுக்கிற அல்லது திருப்புகிற புள்ளி பற்றி இத்தொகுப்பு எங்கும் தெளிவாக இருக்கிறார் கவிஞர். அதை இடைக்காலமாற்றங்களின் தொடராகவோ அல்லது நகையாகவோ(parody) அவர் ஆங்காங்கே பாவிக்கிறார். கவிதைகளின் போக்கை அவர் தயார்படுத்துகிற யுத்தி துவிகுறியீட்டு(double coding) முறைமையாக இருக்கிறது. இயற்கையான மொழியிலிருந்து கட்டுமானம் பெற்று கருத்துருக்களால் நிரம்பும் விதமாகச் செதுக்குகிறார். சில இடங்களில் நவீன உத்திகளுடன் ஏதாவதொன்றை சேர்மானமாகக் கொண்டுவரும் கைங்கரியத்தைச் செய்கிறார். கவிதைமொழி கூறுகளின் முகில் (clouds of poetry language elements) சார்ந்து வகைப்படுத்தப்பட்ட நடைமுறைக்குப் புறம்பான மாறுபாடுகளைக் கவிதைக்கு லாவகமாகக் கொண்டு வருவதில் அவருக்கு அன்றாட வாழ்வியல் அம்சங்களும் இயற்கையின் கூறுகளும் துணை நிற்கின்றன. உருவ அழிப்புமை(iconoclasm) இதனூடே வேண்டுமென்று வாசகர்களை அந்நியப்படுத்திக் கலாச்சாரத் தரிநிலைகளை ஏற்கனவே எழுதப்பட்ட மனதிலூன்றிய எழுத்துக்களை அதன் நிறுவல்களை மறுதலிக்கும் உத்தியை கச்சிதமாகப் பதிவு செய்திருக்கிறார்.

இத்தொகுப்பில் பல கவிதைகள் ஆதாரமொன்றை பற்ற விரும்பாதன. தட்டையான ஒரு ஊடகம் போன்ற படிமங்களைக் காவி புனைவுக்கும் வாழ்வுக்கும் இடையில் அல்லது சிலசமயங்களில் இரண்டையும் கலந்த மாய யதார்த்தவாதத்திற்குரிய பல முடிவுகளோடு விவாதமொன்றை உரையாடலொன்றை நிலைநிறுத்துவன.

"பெருஞ்சூனியத்தில்

போய் மோதுகின்ற

மயில் கொன்றையாகிறேன்"

என மேஜிக் ரியலிசத்தைத் தூவுகிற வரிகளை வெகுவாக ரசிக்க வைக்கிறார். ஜனரஞ்சகமாக(populism) ஒரு பரந்த சமூக வீச்சிலிருந்து இலக்கிய மொழியைத் தீவிரமாகவோ பொறுப்புடனோ அணுகாமல் தன்னிச்சையாக மன உருக்களைப் பொதிந்து கவிதைகளைக் கொணர்கிறார். ஒன்றாகி எரியும் சுடர், பனி போன்ற கவிதைகளில் தேர்ந்த வாசகரொருவரைக்கூட மாற்றும் துயரத்தின் இழைவை சாத்தியமாக்குகிறார். அது முக்கியமானதொன்றாகப் பின்நவீனத்துவ மரபு கொண்டாடுகிறது. Conversion of trained reader என்கிற இமாலய இலக்கை அவ்வளவு எளிதில் மனவெழுச்சி சார்ந்து கவிதைகள் அடைவதில்லை. அனாருக்கு இந்தத் தொகுதியில் அது சாத்தியப்பட்டிருக்கிறது. Paranoia எனும் பிரமைகளை அசாத்தியமான இடங்களில் சாவகாசமாகச் சிறிய, மத்திம நீண்ட கவிதைகள் என்ற வேறுபாடின்றி இருக்கப்பண்ணுவதைத் தெகிட்ட வைப்பதை தவிர்த்திருக்கலாம். கவிதையின் மையம் தற்காலிக விலகலொன்றின் (temporal distortion) எல்லை பற்றி மிகக்குறைவான இடங்களில் உணரும் தடுமாற்றத்தை சரிசெய்திருக்கலாம்.

கவிதைகள் சில சமயம் நிகழ்த்துகையைப் பேசுவன. சிலசமயங்களில் ஏவலை யதார்த்தத்தினை மீறிய கற்பனையின் எல்லாச் சாத்தியங்களையும் கவிதைக்குரலினூடே ஆட்கொள்வன. அது படைப்பாளியின் சுதந்திரத்தையே வெளிக்கொணரும். கவிதை மனதின் முன்னிலை சார்ந்த எதிர்ப்பார்ப்பை அல்லது நிலைப்பாட்டை வாசகர்கள் கவிஞனிடம் கோருவது அபத்தம்.

அனாரின் கவிதைகள் பொதுவாகப் பெண்ணடையாளம் பற்றிப் பெண்களைக் கருமமாற்றத் தூண்டும் சாத்தியங்கள் பற்றிப் பெண் மேலாண்மையின் சமூகத்தேவைகள் பற்றிப் பேசுவன.

"அவளது தோளில்

அலைகள் ஆர்ப்பரித்தன

அருள்பாலிக்கும் தன்னிகரில்லாத ஆலிங்கனத்தில்

மலை அதைக் கேட்டிருந்தது"

என அனார் அவளுக்குக் கொடுக்கும் இடம் கவிதையின் நாட்டத்தை ஈடுசெய்வதோடு மொழிவின் பிரகாசத்தையும் ஒட்டுமொத்த கவிதை வெளிச்சத்தையும் ஊன்றி நடுகிறது எனலாம்.

மேல் செல்