கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

கார்ல் குஸ்தாவ் யுங் -இன் கலைஞன்

தமிழில் சபரிநாதன்

பகிரு

சிருஷ்டிகரத்தின் ரகசியம், சித்தத்தின் சுதந்திரத்தைப் போல, உளவியலாளன் பதிலிறுத்தவியலாத விவரிக்கமட்டுமே சாத்தியமான ஒரு ஆழ்நிலைவாதச் சிக்கல். நாம் பலவழிகளில் தீர்க்கமுனைந்தும், வீண்முயற்சியாய் முடியும் படைப்பாளுமையும் ஒரு விடுகதையே. இருந்தபோதும் படைப்பாளி மற்றும் அவனது படைப்பு பற்றிய புதிரை ஆராய்வதிலிருந்து நவீன உளவியலாளனை இவை பின்வாங்கச் செய்துவிடவில்லை. கலைப்படைப்பிற்கான திறவுகோலை கலைஞனின் தனி வாழ்வனுபவத்திலிருந்து உய்த்துணரமுடியுமென நினைத்த ஃப்ராய்ட் அதைக் கண்டறிந்துவிட்டதாகவே கருதினார். இது ஒரு சாத்தியமான அணுகுமுறையே, ஏனெனில், கலைப்படைப்பும் நியுராஸிஸ் போலவே அகப்பான்மைகளிலிருந்து வருவித்துவிடமுடியும் என்பது கருதத்தக்கதே. நியுராஸிஸ்ற்கு என்று தனித்த தீர்மானகரமான உளவியல் காரணம் இருக்கிறது மற்றும் அது,ஆரம்பக் குழந்தைப் பருவத்தில் நிஜ அல்லது கற்பனை உணர்வணுபவங்களில் இருந்து தோற்றமுருகிறது  என்பது ஃப்ராய்டின் மகத்தான கண்டுபிடிப்பு.அவரது வழித்தோன்றல்களில் சிலர் குறிப்பாக Rank மற்றும் Stekel போன்றோர் இதே விதமான அணுகுமுறையைக் கைக்கொண்டு ஒரேவிதமான முடிவுகளை வந்தடைந்துள்ளனர்.கலைஞனது தனிப்பட்ட உளச்சாய்மானங்கள் அவ்வப்பொழுது படைப்பின் வேருக்குள்ளும் அதன் கிளைகளிலும் ஊடுருவக்கூடும் என்பது மறுக்கமுடியாதது.தனிக்காரணங்கள் அவனது பாடுபொருட்தேர்வுகளிலும் அதன் கையாளுகையிலும் பெரிய தாக்கம் செலுத்துவன என்பதுவும் புதிய விஷயமல்ல.இருந்தபோதும் இந்தத் தாக்கம் எவ்வளவு தூரம் நீளக்கூடியது எனவும் எத்தகு நூதன வழிகளில் அது வெளிப்பாட்டிற்கு வரும் எனவும் காண்பித்தற்காக ஃப்ராய்டிய சிந்தனைப்பள்ளியை பாராட்டியே ஆகவேண்டும். 

ஃப்ராய்ட்  நேர்முக நிறைவடைதலுக்கு பதிலியாகக் நியுராஸிஸைக் கருதினார்.என்பதால் அதை ஏதோ தகாத ஒன்றாக-ஒரு தவறாக, தப்பித்தலாக, சாக்காக, தற்குருட்டுமையாக எண்ணினார்.அவரைப் பொறுத்தவரை முதன்மையாக அது ஏற்பட்டிருக்கவே கூடாத ஒரு குறைபாடு.நியுராஸிசைப் பற்றி ஒரு நல்ல வார்த்தை சொல்ல எவரும் துணிவதில்லை ஏனெனில் அது ஒரு அர்த்தமற்ற அதனால் எரிச்சலூட்டும் தொந்தரவாகத் தெரிவதால் தான். கலைஞனின் உள்ளொடுக்குதல்கள் (Repressions) வாயிலாக பகுப்பாய்ந்துவிடக்கூடிய ஒன்றாக கலைப்படைப்பைக் கையாள்வதின் மூலம், நாமதை நியுராஸிஸ்ற்கு அருகில் கேள்விக்குரிய நெருக்கத்திற்கு கொண்டுவருகிறோம். ஒருவகையில் அது, ஃப்ராய்டிய உளவியலால் அதே நிறத்தில் பார்க்கப்படும் மதம் மற்றும் தத்துவம் ஆகியவற்றுடன் நல்ல கூட்டு சேர்ந்துவிடுகிறது. தனிவாழ்வின் காரணிகளின்றி கலைப்படைப்பு நினைத்துப் பார்க்கவியலாதது தான். அத்தகைய காரணிகளைத் தோண்டியெடுத்தல் மட்டுமே இந்த அணுகுமுறை என்றால் அதை மறுப்பதற்கிடமில்லை.ஆனால் அத்தகைய ஆய்வானது ஒரு கலைப்படைப்பையே விளக்கக்கூடியதென உரிமை கோரினால், ஆணித்தரமான மறுப்பை நாம் தெரிவிக்க வேண்டியிருக்கும். கலைப்படைப்பின் சாரத்தை அதனுள்ளே ஊர்ந்து நுழையும் தனிப்பட்ட சுயபோக்குகளில் தேடவியலாது - உண்மையில், எவ்வளவு அதிகமாக அது நுழைந்துள்ளதோ ஒரு கலைப்படைப்பாக அவ்வளவு குறைபாடுள்ளது - மாறாக அதன் சாரமோ, தனிவாழ்விற்கும், கலைஞனின் சிந்தை மற்றும் இதயம் வழி பேசுவது இவற்றிகும் மேலாக எழுந்து மானுடத்தின் சிந்தை மற்றும் இதயத்திலிருந்து பேசுவதில் உள்ளது. கலையின் தனிவாழ்வுக் கூறு ஒரு தடை ஏன் ஒரு தீப்பழக்கம் கூட. முழுக்க தனிச்சாயை கொண்ட அல்லது பெரும்பான்மை அப்படியான கலை உண்மையிலேயே ஒரு நியூராஸிஸ் போல கருதப்படத் தகுதியானதே. விதிவிலக்கின்றி அனைத்து கலைஞர்களும் நார்ஸிஸ்டுகளே - அதாவது குறிப்பிடத்தக்க சிறுபிள்ளைத்தனமான தற்காமியம் (Infantile auto-eroticism) கூடிய குறைவளர்ச்சி கொண்ட ஆளுமைகளே எனும் இக்கருத்தை ஃப்ராய்டிய பள்ளி முன்னெடுக்கும் பொழுது, இம்முடிவு, ஒரு தனிமனிதன் என்ற அளவில் வேண்டுமானால் கலைஞர்களுக்கு ஏற்றதாகக் கொள்ளலாம்.ஆனால் கலைஞனான தனிமனிதனுக்கு இது பொருந்திப்போகாது. இந்தத் தகைமையில் அவன் தற்காமிய உணர்வோ மாறுகாம விழைவோ, எவ்விதமான பாலுந்தமும் கொண்டோனில்லை. உச்சபட்ச உயரத்தில் அவன் புறவயமானவன்(objective), தற்சாயை அற்றவன்(impersonal). இன்னும் சொல்வதெனில், அமனிதன்-அல்லது அதிமனிதன்-ஒரு கலைஞனாக அவன் தன் படைப்பன்றி வேறெதுவமல்ல. மனிதஜீவி கூட.

ஒவ்வொரு படைப்பாளியும் ஒரு துவிதம் (duality) அல்லது முரண்பாடான பண்புகளின் சேர்க்கை. ஒருபுறம் அவன், தனிப்பட்ட வாழ்க்கை கொண்ட ஒரு மனிதவுயிர் மறுபுறம் அவனொரு சுயசாயைற்ற படைப்பாக்க நிகழ்வு. ஒரு மனிதனாக அவன் ஆரோக்கியமானவனாகவோ பிணியுற்றவனாகவோ இருக்கக்கூடும். அவனது தனிப்பட்ட உளவியலை அவனது சொந்த வரையறைகளால் புரிந்துகொள்ளமுடியும் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் அவனை ஒரு கலைஞனாக, அவனது படைப்புச் செயலின் வழியாக மட்டுமே புரிந்துகொள்ளமுடியும். ஒரு ஆங்கில கனவானை,ஒரு ப்ரஸ்ஸிய அலுவலரை,ஒரு கார்டினலை, அவர்தம் சொந்த தனிநபர்க்கூறுகளாய் குறுக்குவதாயிருந்தால், நாம் பெரிய தவற்றைச் செய்தாகவேண்டும். கனவான், அலுவலர், உயர் திருச்சபையாளர் ஆகியோர் தனிப்பண்பற்ற பாத்திரங்களாய் இயங்குகின்றனர். கலைஞன் அலுவலருக்கு நேரெதிர் ஆனவனாய் இருந்த போதிலும், தனிப்பான்மையை(personal) விட கூட்டுக் குணநலனைக் கொண்டிருப்பதில் இருவருக்கும் ஒரு மறைமுக ஒப்புமை உள்ளது.கலையானது ஒரு மனித ஜீவியைப் பற்றிக்கொண்டு அவனை தனது கருவியாக்கிவிடும் ஓர் உள்ளார்ந்த முடுக்கம். தன் சொந்த விழைவுகளைத் தேடிச்செல்லும் சுயாதீன இச்சை வாய்க்கப்பெற்ற நபரல்லன் கலைஞன் மாறாக, தன்வழியாக கலை தன் நோக்கங்களை நிறைவேற்ற அனுமதிக்கும் ஒருவன். ஒரு மனிதனாக, அவனுக்கு மனநிலைகளும், சொந்த லட்சியங்களும் இச்சாசக்தியும் இருக்கலாம், ஆனால் ஒரு கலைஞனாக அவனொரு (உயர்தொனி மனிதன்) - கூட்டு மனிதன் - மானுடத்தின் நனவிலி உளவாழ்வை தூக்கிச்சுமக்கும், அதற்கு உருக்கொடுக்கும் ஒருவன்.இது தான் அவனது தொழில்.இக்கடின அலுவலை மேற்கொள்ளும் பொருட்டு சிலபொழுது, அவன் சந்தோஷத்தையும் தவிர சாமான்ய மனிதனுக்கு வாழ்வை வாழும்படியானதாக்கும் யாவற்றையும் தியாகித்தல் அவசியமாகிறது.k.g.carus சொல்வதைப் போல் “ஒரு மேதை உருவாகும் வழிகள் விநோதமானவை, எது அவனை வேறுபடுத்துகிறதென்றால், அவனது எல்லாச் சுதந்திரத்துக்கும் சிந்தனையின் தெளிவிற்கும் பதிலாக, நனவிலியால், அவனுளிருக்கும் புதிரான கடவுளால் எல்லாவிடங்களிலும் கரைக்குட்பட்டு ஆளப்படுவதுதான். ஆதலால், கருத்துகள் ஓடிவருகின்றன அவனிடம்-எங்கிருந்தென அறியான். படைக்க உந்தப்படுகிறான்-எதற்காக என அறியான். வளர்ச்சிக்கான ஒரு தூண்டுகையால் கட்டளையிடப்படுகிறான் - எதை நோக்கியென்றும்அறியான்”

இச்சூழ்நிலைகளில் உளவியலாளனின் பகுப்பாய்விற்கு ஆர்வமூட்டும் வகைமாதிரியாக கலைஞன் இருப்பது ஆச்சர்யமூட்டும் ஒன்றல்ல. முரண்பாடுகளால் நிரம்பியதல்லாமல் வேறெப்படியும் இருக்கவியலாதது அவன் வாழ்வு,ஏனெனில் அவனுள்ளே இரண்டு சக்திகள் போரில் ஈடுபட்டுள்ளன: ஒருபுறம் வாழ்வில் சந்தோஷம்,திருப்தி,பாதுகாப்பு இவைக்கான பொதுவான மனித ஏக்கம்.மறுபுறம், ஒவ்வொரு தனிவிருப்பத்தையும் முந்திச்செல்லும் அளவிற்கு  படைப்பிற்கான தாட்சணியமற்ற வேட்கை.ஒரு விதியென கலைஞர்களின் வாழ்க்கைகள் மிகவும் அதிருப்தி உடையவையாய் (tragic என சொல்லவில்லை) இருப்பது கெடுவிதியின் பங்களிப்பினாலில்லை, மாறாக அவர்தம் ஆளுமையிலுள்ள குறைவீனத்தினால் அல்லது தகவமைப்பதற்கான திறனின்மையால் விளைவது.படைப்பூக்கத் தீயின் தெய்வீகக் கொடைக்கு நிரம்ப விலைகொடுத்தேயாக வேண்டும் எனும் இவ்விதிக்கு விலக்குகள் வெகுசிலவே.நாமொவ்வொருவரும் பிறப்பிலேயே ஒரு குறிப்பிட்ட ஆற்றலின் கைக்காசுடனே வாய்க்கப்பெற்றுள்ளோமோ எனப்படுகிறது.நமது உருவாக்கத்திலுள்ள வீர்யமிக்க கூறு இந்த ஆற்றலை கைப்பற்றி,மிஞ்சியவற்றிலிருந்து பெறுமானமுடைய எதுவும் வெளிவரா வண்ணம் முற்றாள்கை செய்கிறது.இவ்விதம், படைப்பூக்க ஆற்றலானது, வாழ்வின் பொரியை தக்கவைக்கும் பொருட்டும், முற்றான இழப்பிலிருந்து தன்னை காத்துகொள்ளும் பொருட்டும், ஒரு தனிப்பட்ட தான்மை எல்லாவிதமான இழிந்த தகைமைகளை உருவாக்கியாக வேண்டும்படியான எல்கைக்கு மனுஷ்ய உந்துகைகளை வடிகட்டிவிடக்கூடும்.இதன் விளைவாக தயையின்மை,சுயநலம் (சுயகாமியம் (auto-eroticism)), தற்பெருமை, தவிர சிறுபிள்ளை குணநலன்கள்(infantile traits) போன்ற எல்லா வித குறைகளையும் வளர்க்கும்படியாய் தூண்டப்படுகிறான். சில கலைஞர்களின் இந்த சுயகாமியம்,முறைதவறிப்பிறந்த அல்லது கைவிடப்பட்ட குழந்தைகளை ஒத்துள்ளது.தங்களது பிஞ்சுவருஷங்கள் தொட்டே தமக்குத் தருவதற்கென்று நேசமேயற்ற மக்களின் அழிவுத்தனமான செல்வாக்கிலிருந்து தம்மையே பாதுகாக்கவேண்டிய குழந்தைகளை ஒத்தது.இத்தகைய குழந்தைகள் தீக்குணங்களை வளர்த்துக்கொண்டு பிறகு வெல்லவியலாத ஓர் அகங்காரத்தை பராமரித்து தம் வாழ்நாள் முழுதும் சிறுபிள்ளையாயும் கதியற்றும் இருந்தபடி  அல்லது ஒழுக்கவிதிகளையோ சட்டத்தையோ மும்முரமாய் மீறிக்கொண்டு வாழும்படியாகிறது. நாமெப்படிச் சந்தேகிக்கக்கூடும் அவனது சுயவாழ்வின் போதாமைகளோ பிணக்குகளோ அல்ல அவனது கலையே கலைஞனை விரித்துரைக்கும் என்பதை நாமெப்படிச் சந்தேகிக்க முடியும். இவையாவுமே, அவன் அல்லது அவள் ஒரு கலைஞன்/ஞியாக இருத்தலாலேயே. அதாவது, பிறப்பு முதலே, சாதாரண அழிவுறும் மக்களைக்காட்டிலும் பேறுமிக்க ஒரு காரியத்திற்கென்று அழைக்கப்பட்ட ஒரு மனிதன் அல்லது மனுஷி - என்ற உண்மையின் வருந்ததக்க முடிவுகளன்றி வேறொன்றுமல்ல இவை. ஒரு விசேஷ திறமை என்பது, வாழ்வின் மற்றெல்லாப் பக்கங்களிலும் வற்றடிக்கப்பட்டு, விளைவாக ஒரு குறிப்பிட்ட திசையில் இறைக்கப்படும் ஆற்றலின் பெருஞ்செலவீனம்.

கலைஞன் தன் படைப்பு தன்னுள்ளேயே பெற்றெடுக்கப்பட்டு, வளர்ந்து கனிகிறது என்பதை அறிகிறானோ அல்லது சிந்தனையை அள்ளுவதன் மூலம் வெற்றிடத்திலிருந்து உருவாக்குவதாகக் கருதுகிறானோ எந்த வித்தியாசமுமில்லை. இது பற்றிய அவனது அபிப்பிராயம், ஒரு குழந்தை தன் தாயைத் தாண்டி வளர்வதைப் போல அவனது சொந்த படைப்பு அவனைத் தாண்டி வளர்கிறது எனும் பொருண்மையை மாற்றமுடியாது. படைப்புச் செயல்பாடானது பெண்தன்மை உடையது. படைப்போ நனவிலியின் அடியாழங்களிலிருந்து உதிப்பது ---- அன்னையரின் மண்டலத்திலிருந்து முகிழ்ப்பது என்கலாம். எப்போது சிருஷ்டிகரம் மூண்டெழுகிறதோ, அப்போது வாழ்வு சுவாதீன இச்சையினாலன்றி நனவிலியால் ஆளப்படுகிறது, வடிக்கப்படுகிறது. நிகழ்வுகளின் வெறும் நாதியற்ற பார்வையாளனாக, நனவுச்சுயம் ஒரு நிலத்தடி நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்படுகிறது, உருவாகிக்கொண்டிருக்கும் படைப்பு கலைஞனின் விதியாகிறது, ஆகி அவனது அகவளர்ச்சியை தீர்மானிக்கிறது. கதேயல்ல ஃபாஸ்டை படைப்பது ,ஃபாஸ்ட் தான் கதேயைச் செய்வது. ஃபாஸ்ட் யார்? அடிப்படையில் அது ஒரு குறியீடு. இப்படிக் கூறுவதன் மூலம் மிகப்பகழக்கமான ஒன்றைச் சுட்டிக்காட்டும் ஒரு தொடருருவகம் எனப்பொருளில்லை. மாறாக ஒவ்வொரு ஜெர்மானிய ஆன்மாவிலும் வல்லியதாய் உயிரோடிருக்கும் ஒன்றின் வெளிப்பாடு என்கிறேன். கதே அதன் பிறப்பிற்கு உதவிசெய்தார். ஒரு ஜெர்மானியன்றி வேறொருவர் ஃபாஸ்டையோ அல்லது ஜரதுஸ்ட்ரா இவ்வாறு பேசினான் ஐயோ எழுதுவதை எண்ணிப்பார்க்கமுடியுமா? இரண்டுமே ஜெர்மானிய உள்ளத்தில் அதிரும் ஒரு நாணைச் சுண்டி, ஓர் ”ஆதிப்படிமத்தை”( ஒருதரம் Burckhardt பெயரிட்டு அழைத்ததைப் போல) உசுப்புகிறது. மனிதகுலத்தின் மருத்துவன், அல்லது ஆசான் அல்லது ஒரு மாயாவியின் படிமத்தை எழுப்புகிறது. அது முதிய சான்றோனின், உபகாரி மற்றும் ரட்சகனின் தொல்படிமம். அதேநேரம் மாயாவி, ஜாலக்காரன், சபலமூட்டி ஆகியவற்றின் தொல்படிமமும் கூட. இத்தொல்படிமங்கள் கலாச்சாரத்தின் உதயம் முதலே மனித நனவிலிக்குள் புதையுண்டு உறங்குகிறது. எப்போதெல்லாம் காலங்கள் மூட்டுமுறிந்து மனித சமூகம் பெரும்பிழை இழைக்கிறதோ அப்போதெல்லாம் அது எழுப்பப்படுகிறது. மக்கள் வழிதவறும் போது ஒரு வழிகாட்டியின் அல்லது ஆசிரியனின் ஏன் வைத்தியனின் தேவையை கூட உணர்கின்றனர். கவர்ச்சியான பிழை, நிவாரனமாகவும் செயல்படக்கூடிய விடத்தைப் போன்றது. ஒரு ரட்சகரின் நிழல் கொடிய அழிகலனாக மாறக்கூடும். இந்த எதிரெதிரான விசைகள் தொன்ம குணப்படுத்துவோனிடம் செயல்படுகிறது: காயத்தை குணப்படுத்தும் மருத்துவன் தானே காயம் பூண்டவனாக உள்ளான், Chiron ஆக இருப்பதின் ஒரு செவ்வியல் உதாரணம் இது. கிறித்தவத்தில் இதுவே மகத்தான மருத்துவனான கிறிஸ்துவின் விலாவிலுள்ள காயமானது. ஃபாஸ்ட் காயமொன்றும் அற்றவர். அப்படியானால் அவர் அறவியல் சிக்கலால் தீண்டப்படாதவர் எனலாம். ஒரு மனிதனால் தனது ஆளுமையை இருபாதிகளாக உடைக்கமுடியும் என்றால், ஃபாஸ்டைப் போல் உயர்புத்தியும் மெபிஸ்டோபிலிஸ் போல பிசாசுத்தனமும் கொண்டவனாக இருக்கலாம். அப்போது மட்டுமே அவன்,“நன்மைக்கும் தீமைக்கும் அப்பால் ஆறாயிரம் அடி” செல்லமுடிந்தவனாக இருப்பான். மெஃபிஸ்டோஃபிலிஸ் தனக்கான பரிசான ஃபாஸ்டின் ஆன்மா தரப்பெறாமல் ஏமாற்றப்பட்டான்.இதற்காக அவன் ஒரு நூறு வருடங்களுக்குப் பின் ரத்த கணக்குத் தீர்த்துக்கொண்டான். ஆனால் யாரிப்போது நிஜமாகவே நம்புகிறார்கள் கவிஞர்கள் எல்லா மனிதருக்கும் பொருந்தும் உண்மைகளை சொல்கிறார்கள் என்று. அப்படிச் செய்தார்கள் என்றால், கலைப்படைப்பை நாம் எந்த விதத்தில் எடுத்துக்கொள்வது?

ஒரு தொல்படிமம் தன்னளவில் நல்லதுமல்ல தீயதுமல்ல. பழங்கடவுளரைப் போன்று அறவியல்பூர்வமாய் சமநிலையானது. நனவுமனத்தின் தொடர்பினாலேயே அது நல்லதாகவோ தீயதாகவோ அல்லது முரண்பாடுண்ட கலவையாகவோ மாறுகிறது. அது நன்மைக்கு அல்லது தீமைக்கு இசையுமா என்பது அறிந்தோ அறியாமலோ நனவுச்செயல்முறையால் தீர்மானிக்கப்படுகிறது. இத்தகைய ஆதிப்படிமங்கள் கணக்கற்றவை, ஆயினும் இவை சமூகம் மத்திமப் பாதையிலிருந்து விலகுதலால் இருப்பிற்கு கூட்டிவரப்படும்வரை, தனிநபர்கள் கனவிலோ கலையாக்கங்களிலோ  தோன்றுவதில்லை. நனவு வாழ்க்கை ஒருபடித்தானதாகவோ அல்லது பொய்த்தன்மையானாதாகவோ மாறும் பொழுது, இவை உள்ளுணர்வாக உயிர்மூட்டப்படுகின்றன. பிறகு தனிநபர்களின் கனவுகளிலோ, கலைஞர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் தரிசனங்களிலோ காட்சிப்படுகின்றன. இவ்வாறாக அத்தனிமனிதனின் அல்லது அச்சகாப்தத்தின் அகச்சமனிலையை மீட்கின்றன.

இவ்வகையில் கலைஞனின் ஆக்கம் அவன் வாழும் சமூகத்தின் ஆன்மிகத் தேவைகளை சந்திக்க நேர்கிறது. அவன் அறிவானோ மாட்டானோ,இக்காரணத்தினாலேயே அவனது ஆக்கம் அவனது சொந்த விதியை விட அவனுக்கு பொருள் கொண்டதாகிறது. அடிப்படையில் தன் படைப்பின் கருவியாக இருப்பதால்,அவனதற்கு கீழ்படிந்தவனாகிறான். நமக்கதை அவன் விளக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பிற்கு நியாயங்களேதுமில்லை. தன்னுள் கிடந்தவற்றிற்கு உருத்தந்ததன் மூலம் தன்னால் இயன்றதைச் செய்துவிட்டான். இப்போது பொருள்கோடலை மற்றவர்க்கும் எதிர்காலத்திற்கும் விட்டாகவேண்டும் அவன். ஒரு மகத்தான கலைப்படைப்பானாது ஒரு கனவு போலத்தான்; தோற்றத்திற்கு வெளிப்படையான நிச்சய எளியதாயிருந்தும் அது தன்னை விளக்கிக்கொள்வதில்லை மற்றும் ஒருபோதும் தெளிவானதாக இருப்பதில்லை. ”இதை நீ செயதாக வேண்டும்” அல்லது ”இது தான் உண்மை” என்றோ ஒருபோதும் சொல்வதில்லை கனவு. இயற்கை ஒரு தாவரத்தை வளர அனுமதிப்பது போல அது ஒரு படிமத்தை வழங்குகிறது. முடிவுகளைத் தீர்மானிப்பது நம்மை பொருத்தது.ஒரு கெடுங்கனவு கண்டானென்றால், அவன் மிகுந்த அச்சத்திற்குள்ளாய் இருக்கிறான் என்றோ அல்லது அதிலிருந்து அதிகமாய் விலகியிருக்கிறான் என்றோ அர்த்தப்படலாம்.ஒரு முதிய சான்றோனை(wise old man) கனவு காண்டானென்றால், அவனொரு பெரிய பட்டறிவாளன் என்றோ அவனுக்கொரு போதகர் தேவைப்படுகிறார் என்றோ பொருள் கொள்ளலாம். ஒரு நுண்விதத்தில் இரண்டு அர்த்தங்களுமே ஒரே விஷயத்திற்குத் தான் வருகின்றன, ஒரு படைப்பு படைப்பாளியின் மீது செயல்பட்டதற்கு ஒப்ப அது நம்மீதும் செயல்புரிய அனுமதிக்கும் பொழுது நாம் உணர்ந்தறிவதைப் போல. அதன் பொருளைப் புரிந்துகொள்ள, கலைஞனை வடிவமைத்ததைப் போல நம்மையும் உருச்செய்ய அதை அனுமதிக்கவேண்டும். பின்னர் நாமும் அவனது  அனுபவத்தின் இயல்பை புரிந்துகொள்ளமுடியும். கூட்டு மனத்தின் ஆற்றுப்படுத்தும், மீட்பளிக்கும் ஆழங்களுக்குள் மூழ்கியெழுந்திருக்கிறான் அவன். அங்கு ஒருவன் பிரக்ஞையின் தனிமையிலும், அதன் தவறுகளிலும் வேதனைகளிலும் தொலைவதில்லை. மாறாக அவன் வாழ்வின் அணிக்கோவையில், அத்தனை மனிதரும் உட்பதிந்துள்ள, மனித இருத்தலுக்கு ஒரு பொதுலயத்தை ஊட்டும், ஊட்டி மானுடம் முழுதுக்கும் தன் உணர்வையும் தேடலையும் தொடர்புறுத்த ஒரு தனிமனிதனை அனுமதிக்கும், வாழ்வின் அணிக்கோவையில் ஊடுருவிவிடுகிறான்.

இந்த Participation mystique நிலையின் ஆழ்தலில் தான் படைப்பாக்கம் மற்றும் அம்மகத்தான படைப்பு நம்மீது செலுத்தும் தாக்கம் ஆகியவற்றுக்கான ரகசியம் உள்ளது. ஏனெனில் அவ்வனுபவத்தளத்தில் தனிநபரின் தீதும் நன்றும் அன்றி மானுட அனுபவக் கூட்டிருப்பின் வாழ்வே பெறுமானம் கொள்கிறது. ஆகையால் தான் எல்லா மகத்தான கலைப்படைப்புகளும் புறவயமானதும் சுயசாயையற்றும் உள்ளது. இருந்தபோதும் நம்மொவ்வொருவரையும் வலுவாகச் சலனிக்கவைக்கிறது. இதே காரணத்தால் தான் கலைஞனின் சொந்தவாழ்க்கையை அவனது கலையின் இன்றியமையாத ஒன்றாகக் கொள்ளமுடியாது. -உச்சபட்சமாக ஒரு உபகாரம் அல்லது அவனது கலைத்தொழிலுக்கான ஒரு உபத்திரவம் என்று வேண்டுமானால் கொள்ளலாம்-. அவன் பிலிஸ்டைனாகவோ, நற்குடிமகனாகவோ, முட்டாளாகவொ, குற்றவாளியாகவோ வாழலாம். அவனது சொந்த பணிவாழ்வு தவிர்க்கமுடியாததாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருக்கலாம் ஆயினும் அவை எதுவும் அவனது கலையை விளக்குவதில்லை.

கார்ல் குஸ்தாவ் யுங் (1875-1961)

ஸ்விட்சார்லாந்தைச் சேர்ந்த யுங் ஃப்ராய்டிற்குப் பின்னர் உளவியல் ஆய்வில் மிகமுக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறார். ஃப்ராய்டின் மாணவராகத் தோன்றிய யுங் விரைவில் அவரது கோட்பாடுகளிலிருந்து முரண்பட்டு தன் தனிக்கொள்கைகளை உருவாக்கினார். மொத்தமாக அவை analytical psychology என அழைக்கப்படுகிறது. அறிவுத்தளத்திலும், மருத்துவத்துறையிலும் பயன்படுத்தப்படும் collective unconscious, archetype, extrovert, introvert, persona, anima போன்ற பல சொற்கள் யுங்கின் பிரயோகங்கள். யுங்கிய உளவியலின் மையக்  கருத்தாக்கம் தற்கனிவு(individuation) எனலாம்.தன்னறிவு,ஞானம்,சுயதேடல் எனவெல்லாம் ஆரம்பகால தத்துவவாதிகள் தொட்டே வழக்கிலிருந்து வரும் இக்கருத்தை ஒரு உயிரியல் மற்றும் உளவியல் உண்மையாக முன்வைத்தார் யுங். அதன் மூலம் வாழ்வெனும் நிகழ்வுக்கு ஓர் அர்த்தம் கிடைக்கும் என்று எண்ணினார். புத்தெழுச்சிக்கால பகுத்தறிவு மனமாகக் கொள்ளமுடியாது இவரை. ஒருவிதத்தில் மத்தியகாலத்தைச் சேர்ந்த மறைதேடல்வாதி (mystic) யாகவே வகுக்கமுடியும். அதேநேரத்தில் அவரே விரும்புவதைப் போல ஒரு மனநோய் மருத்துவனாகவும். கீழைத்தேய ஆன்மிக வழிகளில் பேரார்வம் கொண்ட அவரது பங்களிப்பு மானுடவியல், தத்துவம், கலை, மதம், மீஉளவியல் என பல தளங்களிலும் தாக்கம் செலுத்துபவை. தன்னை ஐயோரோப்பிய மரபின் வழித்தோன்றலாக ஒத்துக்கொண்டாலும் பலவிதங்களில் அதன் நம்பிக்கையோடும் பண்பாட்டோடும் கசப்புற்ற புறநடையாளனாகவே உணர்ந்து வந்தார். அதனாலேயே மெக்ஸிக செவ்விந்திய குடியிருப்புகளுக்கும், கிழக்காப்பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் நீண்ட பயணங்களை மேற்கொண்டு அதனுடானான தொடர்பை வாழ்நாள் முழுதும் பேணிவந்தார். தன் வாழ்வில் ஆயிரக்கணக்கான நோயாளிகளைக் கண்ட யுங் மரணித்தபோது அவர் சொந்த ஊரான குஸ்நாக்டில் நடந்த அடக்கச்சடங்கில் ஓர் உள்ளூர் பாதிரி கூறினார்: ஆன்மாவை மீண்டும் ஏற்றுக்கொள்ளும் துணிவை மனிதருக்கு வழங்கியுள்ளார் இவர்.

குறிச்சொற்கள்

மேல் செல்