கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

உடல் மொழியின் கலை

ஜீவன் பென்னி

பகிரு

நம் காலத்தின் கலைவடிவ வெளிப்பாடுகளின் பரிமாணங்களை ஆவணப்படுத்துதல் :

   சற்று நீண்ட தமிழ் சிற்றிதழ் மற்றும் நாடக மரபின் மிக முக்கியமான அடிப்படைச் சித்தாந்தங்களின் வேர்களைப் பற்றிக்கொண்டு, மிக நுட்பமானத் தன் நாடக இயங்கியல் மற்றும் இலக்கியப் பிரதிகளின் வழியே தொடர்ச்சியாகத் தன்னைத் தகவமைத்து கொண்டு வரும் திரு. வெளி ரங்கராஜன் அவர்கள். தன் சமகால இலக்கிய மற்றும் நாடக நிகழ்வுகளின் சாரம்சங்களில் தன்னைப் பாதித்த பகுதிகளின் இயங்குநிலை குறித்தும், அந்நிகழ்வுகள் இச்சமூக மனத்தின் வெவ்வேறு தளங்களில் ஏற்படுத்தியிருக்கும் புரிதல்களையும், உரையாடல்களையும் தொகுத்து, ஆவணப்படுத்துதலின் கருத்தியல் முறையில் எழுதப்பட்டிருக்கும் 22 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. கலை இலக்கியம் மற்றும் அதன் சாரமான அழகியல் படிமங்கள் குறித்த கூர்மையான பார்வைகளையும், அணுகுமுறைகளின் திடமான வாதங்களையும், உடல் மொழி வெளிப்பாடுகளின் நிகழ்வு முறைகளையும், படைப்பு மனதில் நீட்சியாக அவை உருப்பெறும் காட்சித் தன்மையின் மெய் கூறுகளையும் இக்கட்டுரைகள் தெளிவாக உணர்த்துகின்றன. வாசிப்பவனின் / பார்வையாளனின் மன ஆழத்திற்குள் நுழைந்து அவர்களின் நுண்ணுணர்வுகளில் மிக அழுத்தமானப் பதிவை நிரப்பிச்செல்லும் வசீகரத்தையும், குறிப்பிட்ட சில பத்திகளுடன் நிறைவுற்று, மேலும் அது குறித்த தேடலைத் துவங்குவதான சுதந்திரத்தையும் கொண்டிருக்கின்றன இதன் வடிவமைப்புகள்.

1. இலக்கியப் பிரதிகள் :

  தனிமை மனதின் ரேகைகள் பதிந்து கிடந்த கவிஞர் நகுலனிடம் ‘விளக்கு’ விருதிற்கான அறிவிப்பை சொல்வதற்கான பயணத்தில் துவங்கும் கட்டுரையில் அதை பெரிதும் விரும்பிடாடத நகுலனின் மனநிறைவான படைப்பாளுமையையும், குழந்தைத்தன்மையையும் மேலும் ‘விளக்கு’ தேர்வுக்குழுவிலிருந்த கவிஞர் இன்குலாப், விருதுக்கான நகுலனது தேர்வு குறித்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட கருத்தியல் நாகரீகத்தின் தடத்தையுமே வெளிக்காட்டுகிறார். பக்தி இலக்கியங்களுக்கான மதிப்பீட்டில், அக்கலை வடிவங்கள் என்பது மதங்களின் வரையறைகளுக்குப் பின்னணிகளிலுருக்கும், குடும்ப நெறிகளும், தொழில்-வியாபாரம் சார்ந்த சுரண்டல்களும் சமூக உளவியலுக்குள்ளே இடைவிடாது ஏற்படுத்திக் கொண்டிருந்த துயரங்களிலிருந்து அம்மக்கள் வெளியேறுவதற்காகவே உருப்பெற்றதாகவே கணிக்கிறார். அன்றாட வாழ்வில் போதாமைகளையும், நிஜங்களையும் புறக்கணித்திடாத வடிவமாகவே மக்கள் அவற்றை அங்கீகரித்தனர். கடவுளிடம் காதல் கொள்வதற்கான சாத்தியங்களை ஏற்படுத்திடவும், ஆன்மீக தத்துவார்த்தப் பார்வைகளை விரிவாக்கிடவும் இவையே வழிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. இயல், இசை, நாட்டியம், நாடகம், ஓவியம், சிற்பம் என அதன் அனைத்து நுண்கலைகளும் இங்கிருந்தே வளர்த்தெடுக்கப்பட்டிடுக்கின்றன. மேலும் வேத அதிகாரக் கட்டமைப்புக்களை, அவை உருவாக்கிய வழிபாட்டு முறைகளின் அதிகார மேலாண்மைகளை தமிழ் கலாச்சார வரலாற்றில் பக்தி இலக்கிய இயக்கங்கள் எவ்வாறு எதிர்த்து தங்களது கோட்பாடுகளை அவ்வரலாற்றில் நிறுவியதை கட்டுரையில் விவரித்திருக்கிறார். மிக முக்கியமாக வள்ளலாரின் எளிய மனிதம்-கடவுள் சார்ந்த புள்ளியை வாசகன் இங்கிருந்து துவங்கிக் கொள்ள முடியும். தமிழில் சிறுபத்திரிகையின் அறிவார்ந்த மரபுகளின் வரலாறு குறித்தும் அதன் தீவிரமான நிறுவன மற்றும் அதிகாரக் கட்டுமானங்களுக்கெதிரான எதிர்ப்பின் முகமாக அவை அமைக்கப்பட்டதின் புரிதலையும்,  தீவிரமான படைப்பு சார்புகளில் அதன் வடிவ நுணுக்கங்களில் வேறுபட்டு வந்த ஆழமான கருத்துருவாக்கங்களின் வடிவமாகவுவே அதை அர்த்தப்படுத்துகிறார். தீவிர படைப்புகளை பொது வெளியில் கடத்துவதையும், அவை குறித்த தேடல்களைத் தேர்ந்த வாசகர்கள் துவக்கிக் கொண்டதையும் மேலும் அதை ஆவணப்படுத்துவதையுமே அவை செய்து வந்தன. நவீன வடிவங்களின் படைப்புகளைப் போலவே அவை குறித்த விவாதங்களுக்கான வெளியையும், புரிதலுக்கான தன்மைகளையுமே படைப்பாளர்களுடனான நேரடிச் சந்திப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன எனச் சொல்கிறார். தொடர்ச்சியாக இன்று இவை அடைந்திருக்கும் சார்பு குழுமனப்பான்மை, குழு அரசியல் தாக்குதல்கள் குறித்த கவலைகள் இருந்தாலும் நம் நிலத்தில் இவை ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களே இன்றும் இவ்வகை சிற்றிதழ்கள் வெளிவருவதை நம்ப வைக்கின்றன. புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேனி’ மற்றும் ‘பொன்னகரம்’ ஆகிய கதைகளை நீக்கிய சென்னைப்பல்கலைக் கழகத்தின் செயல்பாடுகளை அறிவுசார் அணுகுமுறையின் முற்றிலுமான சகிப்புத்தன்மையற்ற, விமர்சனப் பார்வைகளற்ற, நிர்பந்த அரசியலின் மதிப்பீடுகளற்ற நிராகரிப்புத் தன்மையாகவே காட்டமாகப் பதிவு செய்கிறார். மணிமேகலை காப்பியத்தின் ஆழ்மன நெருடல்களின் சித்தரிப்புகளை, வாழ்வின் உணர்வுகள் கொண்ட சூழ்நிலைகளின் பல்வேறு காட்சிகளை மிக நுட்பமாகக் காட்சிப்படுத்தி அதன் மைய நீரோட்டமான போராட்ட வடிவத்தையேப் பிரதிபலிக்கிறார். ‘டி.யோகன’னின் மொழிப்பெயர்ப்பு கட்டுரையான ‘கலையும் மனப்பிறழ்வும்’ மிகுந்த மனவெழுச்சிகள் நிறைந்திருக்கும் கலைத் தன்மையின் வடிவங்களினூடே பிரதிகளின் படைப்பாக்க பிரமைகளுக்கும், மனவெளிகளுக்கும், அதன் சவால்களுக்கும் இடையிலான கேள்விகளுக்குத் தர்க்கரீதியிலான மதிப்பீடுகளையே சரியானப் பதிலாக அர்த்தப்படுத்தியிருக்கிறார். கலை உருவாக்கத்தின் அடிப்படையிலான எல்லையில்லா நெருக்கடிகளின் அகம்-புறம் சார்ந்த தொடர்ச்சியான நோய்க்கூறுகளையும், அச்சூழலிலிருந்து விடுபடல்களையும் இவை பேசுகின்றன. பிம்பம் அதன் ஆதாரமான தளத்திலிருந்து படைப்பாக மாறிவருவதை, கட்டுப்பாடுகளை மீறி அந்நிகழ்வுகளில் பங்குகொள்வதை அறிவியல் பூர்வமான வாதங்களில் செயற்படுத்திக் காண்பித்திருக்கிறார். மேலும் மிகைப்படுத்தல் மற்றும் பூடகரமான படைப்புச் செயலாக்கத் தன்மைகள் குறித்த குறைகளையும், இருண்மைகளையும் கவலையுடன் சுட்டிக்காண்பிக்கிறார். படைப்பு மனநிலையின் மிகுந்த கவனம் தேர்ந்த வடிகால்கள் அப்படைப்பின் நுட்பத்தை மேலும் செறிவாக்குகின்றன ஆனால் படைப்பு சார்ந்த உற்பத்தி மனநிலை அசட்டுத்தனமான சந்தைப் பொருட்களைப் போலானவற்றையே திரும்பத்திரும்ப உருவாக்குகின்றன. மெல்லிய இவ்வேறுபாடுகளின் மைய சரடுகளை உங்களால் கவனிக்கவும் உணர்ந்திடவும் முடியுமென்றால் அதுதான் கலாப்பூர்வமான தன்மைக்கு அருகில் உங்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது.    .                 

2. உடல் மொழி மற்றும் காட்சி நிலைப் பிரதிகள் :

   ஒட்டு மொத்தமாக நாட்டியக் கலையின் வசீகரத்தையும், அதன் அழகியல் சாரத்தையும் பிரதிபலித்தவரான ‘பாலசரஸ்வதி’ அவர்களின் வரலாற்றுப் பின்புலங்களையும், முழுமையாக அதில் ஒன்றிவிட்டிருந்த அவரின் ஆரவாரமற்ற கலை வடிவின் தன்மையையும் விளக்குகிறார். மேலும் பரதநாட்டியத்தின் நுட்பமான சிருங்காரம் குறித்த அவரது பார்வைகளையும், தேவதாசி மரபிலிருந்து நீட்டி எடுக்கப்பட்ட இக்கலையின் நுண் வடிவங்களை குறித்தும் சொல்கிறார். மேலும் இப்போது அவற்றை ஆக்கிரமித்திருக்கும் போலித்தூய்மைவாத மற்றும் மேல்தட்டு ஆதிக்கத்தின் சமூக மன வரையறைகளையும், வெகுஜன உளவியல் சிக்கல்களையும் ஆழமாக பதிவு செய்திருக்கிறார். ‘LEA VERGINE’  VERGINE’ மொழிபெயர்ப்பு கட்டுரையான ‘உடல் மொழியின் கலை மற்றும் நிகழ்வி’ல் உடற்கலையில் எல்லையற்ற சாத்தியங்களின் வெளிப்பாட்டு முறைகளையும், கலாச்சாரத்தின் ஒரு குறியீடாக அவ்வுடல்கள் அடைந்து கொண்டிருக்கும் தீர்ந்திடாத துன்பங்களையும் முக்கியப்படுத்துகிறார். அதனால் தான் சமூக மனக் கூட்டு பிரதிபலிப்புகளில் உடல்களின் மொழி நுட்பமான எதிர் கலாச்சார முகமாகவே தங்களை நிறுவிக்கொள்ள முயல்கின்றன. பிரதியிலிருந்து உடலை அடைந்து விடும் நுட்பமான கற்பனை சக்திகள் அதன் வெளிப்பாட்டு வடிவத்தின் முக்கிய புள்ளியில் இணையும் போது தான் அந்நிகழ்வின் சாரம்சம் பெரும் வெளியாக மாறிக்கொள்கின்றன. ஒரு யதார்த்தத்தை பார்வையாளனிடம் உருவாக்கி விடக்கூடிய செறிவான மதிப்பீட்டைத் தான் இவை தொடர்ந்து உருவாக்குகின்றன. ‘மணி கௌலி’ன் ‘எங்கிருந்தோ பார்க்கக்கூடியது’ மொழிப்பெயர்ப்பு கட்டுரையில் காட்சி நிலைகளின் தொடர்புகளுக்கும், பார்வைகளுக்குமான விகித வேறுபாடுகளின் நுன்மைப் புள்ளிகளும் அதிலிருந்து உருவாகிடும் கற்பனை / நிழ்வுகளின் வடிவங்களும், இருப்பும் எவ்வாறு மாற்றமடைகின்றன என்பதை தான் முன்னிறுத்துகிறார். படைப்புகளின் குறியீட்டுத்தன்மைகளால் மொழியில் வெளிப்படும் மையத்தின் பிரத்யேகமான வெளி என்பது புதிர்கள் நிறைந்திருப்பவை அவற்றை அறிவதற்கு நிறைய்ய வேறுபட்டப் பார்வை கோணங்களும், காட்சி நிலைகளின் தொடர்பும் தேவையாக இருக்கின்றன. ஒற்றைப்பரிமான புரிதலின் அடிப்படையிலிருந்து திரும்பி இவற்றின் சகல வசீகரத்தையும் உணர்ந்து கொள்வதற்கு இவையே உதவி புரிகின்றன. சித்தரிப்புகளின் வழியே பயணப்படுவது போலான ஒரு ஒப்பீட்டு முறைகளைக் காட்சி நிலையின் எண்ணற்ற படிகளிலிருந்தே அடர்த்தியான புள்ளியாக, சுயமான வெளி அனுபவமாக மாற்றிக் கொள்ள வைக்கிறது இக்கட்டுரை. ‘திராவிட இயக்கங்களின் நாடகங்கள்’ குறித்த பிரதியில் உணர்ச்சிகரமான மேடைப்பேச்சுக்களும், பத்திரிகை எழுத்து செயல்பாடுகளும், சமூக சார்ந்த விமர்சனப்பார்வைகளுடனான நாடக ஆக்கங்களும் தமிழ் கலாச்சாரங்களில் புதிய ஈடுபாடுகளையும், வழிகளையும், திறப்புகளையும் உருவாக்கிய விதங்களைப் பட்டியலிடுகிறார். மேலும் அவை எளிய பாமரனுக்குள் மொழி சார்ந்த பரிட்சயத்தையும் ஆளுமையையும் உருவாக்கியிருப்பதையும் விவரிக்கிறார். தீர்க்கமான மொழிப்பற்றின் ஆதார சுதியிலிருந்து விலகி அதன் போலியான கவர்ச்சி அணுகுமுறையில் இயக்க உணர்வுகள் நீர்த்துப் போய் செயலற்ற தன்மைக்கு மாறிவிட்டதை கருத்தியல் ரீதியாக உணர வைக்கிறார். கர்நாடக நாட்டுப்புற நாடங்கள் பற்றிய மொழிபெயர்ப்பு கட்டுரை எளிய நாடக மனிதனின் பார்வையையும் தொடர்ச்சிகளையும் உள்ளடக்கியவை. நீண்ட கவிதையுடன் தொடர்புடையதாக அவரால் கணிக்கப்பட்டிருக்கும் நாட்டுப்புற நாடக முறைகளின் எளிய விழுமியங்களுக்குள்ளும், படைப்பு சக்திகளுக்குள்ளும், வடிவமைப்புகளுக்குள்ளும் ஒளிந்திருக்கும் உருவகங்களும், குறியீடுகளும், மதிப்பீடுகளுக்கான விமர்சனங்களுமே அவற்றை கலைப்படைப்பாக மாற்றம் கொள்ள வைக்கின்றன என்பதை விவரித்திருக்கிறார். நா. முத்துசாமி அவர்களின் 50 ஆண்டு நாடக இயக்கத்தின் பல்வேறுபட்ட குறிப்புகளையும், அவதானிப்புகளையும், அவரின் நாடகக் காட்சிகளின் ஊடான அனுபவப் பகிர்வுகளையும், நவீனம் சார்ந்த சரடுகளின் முக்கிய கன்னிகளையும் நமக்குள் நிரப்பி விடுகிறார். தொடர்ச்சியாக அவர் கருத்தியல் ரீதியிலும், தொழில்நுட்ப ரீதியிலும் மேற்கொண்ட பரிசோதனை முயற்சிகளையும், உடல் மொழி மற்றும் உச்சரிப்புகளின் இயங்கியல் வடிவத்தின் வழியே கூத்துப்பட்டறைத் தகவமைத்துக் கொண்ட விதத்தையும் குறிப்பிடுகிறார். நாடகக் கருத்தாக்கங்கள் குறித்த கட்டுரையில் மிக முக்கியமான ஐந்து தியேட்டர் வடிமமைப்புகளை ஆளுமைகளின் தீர்க்கமான சொல்லாடல்கள் வழியே நிலைநிறுத்துகிறார். ‘ஆல்பெர் காம்யூ’ வின் கட்டுரையின் மொழியிலிருந்து, அரங்குகளில் அதுவரையிலிருந்த கட்டுமானங்களையும், விதிகளையும் மீளாய்வுக்கு உட்படுத்தி வேறு பரிமாற்றத்தின் வழியில் தியேட்டர் கோட்பாடுகள் மாறி உருவாகிவந்ததை விளக்குகிறார் மேலும் ‘பெர்டோல்ட் பிரக்டின்’ பார்வையாளனுக்கும் -  நிகழ்த்துவோனுக்குமான இடைவெளியின் செயல்பாடுகளுக்கான முக்கிய அம்சங்களை விவரித்திருக்கிறார்.  நாடக நிகழ்வில் பிரதியின் வழியே செறிவான கலைத்தன்மையின் கணக்கற்ற சுதந்திரங்களை உருவாக்குவதற்கு நிகழ்த்துவோரும், புதிய தியேட்டர் கருத்துருவாக்கங்களுமே முக்கிய காரணிகளாக இருக்கின்றன என்கிறார். செக் நாடக ஆசிரியரான ‘வாக்லாவ் ஹாவெல்’ கட்டுரையின் மொழிபெயர்ப்பில் எந்த அர்த்தங்களுமில்லாத மனிதாக்கப்பட்ட வெற்று மனிதனின் நிகழ்வுகளை, தேடல்களை, காத்திருப்பை மேலும் அவனது உடைந்த உலகின் கனவுகளை, கலை மனோபாவத்தின் சிக்கல்களை நினைவுபடுத்துகிறார். ‘மார்க்வெஸின் நீண்ட சிறகுகளுடன் வயோதிகன்’ பிரதியில் அமானுஷ்ய தன்மை மற்றும் பெரும் கற்பனை வடிவ வினோதத் தன்மைகள் நிறைந்திருந்த அச்சிறுகதையை நாடக மொழியில் கடத்துவதில் நிகழும் நுட்பமான பல வேலைகளையும், அழகியல் சார்ந்த பார்வைகளையும் விவரித்திருக்கிறார். இலக்கியத்தின் பங்குகள் நாடக வடிவ வெளியின் தீர்க்கமுடிந்திடாத காட்சிப் படிமங்களை மிக எளிமையாக உணரவே வைக்கின்றன. நாடக வாசிப்பிலும், தொடர்ச்சியான அதன் ஒத்திகை கூடுகைகளிலும், பயிற்சிகளிலும் வெளிப்படும் கூர்மையான மனநிலை மாற்றங்களும், நெகிழ்வுகளும் அப்படைப்பு சார்ந்த மதிப்பீடுகளின் முழுவெளியையும் அனுபவிப்பதாகவே மாறிவிடுவதாகவும் கவனப்படுத்தியிருக்கிறார். சில தமிழ் திரைப்படங்களின் காட்சியமைப்புகளில் இலக்கிய உள்ளீடு சார்ந்த விவரனைகளில் டிராமா வடிவ கதைக்களத்திலிருந்து மாறுபட்டு அதன் யதார்த்த வகை உத்வேகமான காட்சி நிலைகளின் அழகியலுக்குள் வந்ததையும், காட்சியில் கலைத்தன்மை நிறைந்த தொடர்புகளையும், மேலும் அவற்றை சாத்தியமாக்கிய படைப்பாளர்களையும் வரிசைபடுத்தியிருக்கிறார். முருகபூபதியின் அரங்கவியல் குறித்த கட்டுரையில் உரையாடல் பாணியிலிருந்து மாறுபட்டு கற்பனைத்திறனும், உணர்வுகளின் செறிவும் கொண்ட காட்சி நிலைகளின் வழியாக பார்வையாளருக்கு தீவிரகதியிலான அசலான கணங்களை அவை வழங்குவதாகவும், நிலவெளியின் பலதரப்பட்டத் தளங்களின் உயிராதாரங்களிலிருந்து தன் நாடகவெளிக்குத் தேவையான ஒப்பனைகளையும், இயங்குநிலையையும், இசையையும் ஒரு நம்பிக்கையின் வடிவமாகவே காட்டியிருக்கிறார். ‘நடனம்’ குறித்த ‘போர்ஹே’ கட்டுரையின் மொழிப்பெயர்ப்பில் ஆதிச்சடங்குகளின் வழியே இயற்கையின் பொருண்மையான ஆழ்மனத் தேடல்களின் முக்கியத்துவத்தை விவரிக்கிறார். தொன்மையின் தளத்திலிருந்து உணர்ச்சிகளின் நுண்ணுணர்வுகளை உடல் எவ்வாறு தகவமைத்துக் கொண்டு வந்திருக்கிறது என்பதையே இவை ஆழமாக உணர்த்துகின்றன. ஆன்மிக வடிவத்தில் எண்ணங்களும், உணர்ச்சி நிலைகளும் அதன் தீவிரமானப் புள்ளியை அடைவதற்கான தேடல்களின் சிந்தனை முறை மிக நெடியது. இது உடல் அசைவுகள் வெறும் தொடர்புகளுக்கானது மட்டுமே ஆனதில்லை என்பதை நிரூபிக்கிறது. அதுவே சூழலுக்குத் தகுந்த படி தன்னை வெளிக்கொணரவும் செய்திருக்கிறது. தாகூரின் நாடக உரையாடல் பத்தியில் அரசனுக்கும், கவிஞனுக்கும் இடையேயான காலம் குறித்த தத்துவங்களின் பார்வைகள் சொல்லப்படுகின்றன. மறைந்த ஓவியர் திரு. கிருஷ்ணமூர்த்தி சார்ந்த சில மனப்பதிவுகள் மிகவும் நெகிழ்ச்சியான உணர்ச்சிகளின் சாரத்தையும் அவர் ஓவியங்களின் தனித்தன்மைகள் நிறைந்த வெளிகளையும் உள்ளடக்கியிருக்கின்றன.

   கட்டுரைகள் என்ற போதும் புனைவின் வசீகரத்தோடும், அழகியல் நுண் தன்மைகளோடும் இதன் வடிவமைப்பும், சொல்லாக்கமும் அமைந்திருப்பது தான் வாசிப்பவர்களிடத்தில் எளிய முறையில் அதன் அர்த்தத்தளங்களை ஆழமாகக் கிளர்த்திக் கொண்டு சேர்த்து விடுகின்றன. நம் காலத்தில், நாம் கவனிக்கத் தவறிய கலை சார்ந்த விசயங்களின் நுட்பமானப் பார்வைகளையும், பொறிகளையும், அதன் மரபும், நவீனமும் நிறைந்திருக்கும் முழுமையான புரிதல்களையும் அழுத்தமாக உணர்த்தி விடுகின்றன இக்கட்டுரைகள்..

உடல் மொழியின் கலை – கலை இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் – வெளி ரங்கராஜன், போதிவனம் பதிப்பகம், ஜூலை 2019, விலை- ரூ.120 /-

குறிச்சொற்கள்

மேல் செல்